tamilnadu

img

பெரம்பலூர் அரசு கல்லூரியில் 11 பாடப்பிரிவுகள் நீக்கம் மாணவர்கள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

பெரம்பலூர், ஜூன் 16- தமிழகத்தில் 41 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இதில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 10 உறுப்புக் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. தற்பொழுது இதில் 4 உறுப்புக் கல்லூரிகளை அரசு கலை அறிவியல் கல்லூரிகளாக மாற்றம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் அருகே 2006 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் பாரதிதாசன் உறுப்புக்கல்லூரியும் அரசு கலை அறிவியல் கல்லூரியாக மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் கல்லூரிகள் அதிகளவில் செயல்பட்டு வருகிறது. இதில் வசதி படைத்த மாணவ மாணவிகள் தான் இக்கல்லூரிகளில் சேர்ந்து பயிலும் நிலை உள்ளது. பெரம்பலூர் மாவட்டமானது பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கிய மாவட்டமாகவும் சதவீத அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரும் அதிகம் உள்ளனர்.  எனவே தான் அரசு கல்லூரி துவக்க வேண்டும் எனப் பல ஆண்டுகளுக்கு முன் இம்மாவட்ட மக்கள் தமிழக அரசை வலியுறுத்தி வந்ததனடிப்படையில் தமிழக அரசு பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகளாக பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரிலும் வேப்பந்தட்டை தாலுகாவிலும் குன்னம் தாலுகா வேப்பூரிலும் மூன்று அரசு கல்லூரிகளுக்கு அனுமதியளித்துச் செயல்பட்டு வருகிறது.  இந்தக் கல்லூரிகளில் ஏழை எளிய மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். குரும்பலூர் அரசு கல்லூரியில் மட்டும் மொத்தம் 2 ஆயிரத்து 400 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இதில் 122 பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் தொகுப்பூதியம் அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.  இந்நிலையில் இந்தக் கல்வி ஆண்டு முதல் பாரதிதாசன் உறுப்புக் கல்லூரியாகச் செயல்பட்டு வந்த குரும்பலூர் கல்லூரியை அரசு கலை அறிவியல் கல்லூரியாகத் தமிழக அரசு அறிவித்தது. தொடர்ச்சியாக நடைமுறையில் இருந்த 11 பாடப்பிரிவுகளை உயர் கல்வித்துறை இயக்குனரகம் ரத்து செய்து அறிவித்தது. இளங்கலை பாடப்பிரிவுகளான பி.சி.ஏ, பி.எஸ்.சி மைக்ரோபயாலஜி, பி.ஏ.வரலாறு, பி.ஏ.ட்டி.ட்டி.எம் மற்றும் பி.எஸ்.டபிள்யு ஆகிய ஐந்து பாடப்பிரிவுகளும் முதுகலை பாடப்பிரிவுகளான எம்சிஏ, எம்பிஏ, எம்ஏ தமிழ், எம்.ஏ ஆங்கிலம் எம்காம், மற்றும் எம்எஸ்டபிள்யு உள்பட மொத்தம் 11 பாடப்பிரிவுகளை நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நீக்கிய பாடப்பிரிவு களுக்கான அப்ளிகேஷன் பெற்ற ஏழை எளிய மாணவ மாணவிகள் நேர்காணலுக்கு வந்த போது இத்தகவலறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தனர். ஒரு பாடப்பிரிவிற்கு 60 பேர் வீதம் 11 பாடப்பிரிவிற்கும் சேர்த்து 660 பேர் பயின்றும் இதற்குப் பணிபுரிந்து வந்த 50 பேராசிரியர்கள் வேலை இழக்கும் நிலையும் தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த உத்தரவால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட ஏழை எளிய மாணவர்களும் கல்வி கற்க முடியாத நிலையில் பேரதிர்ச்சியடைந்துள்ளனர்.  இதனைக் கண்டித்து வரும் 17.6.2019 முதல் அரசு கல்லூரி மாணவ - மாணவிகளும் இந்திய மாணவர் சங்கம் உள்படப் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் முற்போக்கு இயக்கங்கள், விவசாயச் சங்கங்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். எனவே தற்போது வெற்றி பெற்ற பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் மற்றும் பெரம்பலூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்செல்வன் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்துத் தமிழக அரசின் வஞ்சிக்கும் செயலைத் திரும்பப் பெற்று நிறுத்தப்பட்ட 11 பாடப்பிரிவுகளையும் தொடர்ந்து நடத்த உத்தரவிடுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர். என்.செல்லதுரை,  சிபிஎம் மாவட்டச் செயற்குழு, பெரம்பலூர்.