பழனி:
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 9, 10, 11 ஆம் வகுப்புகளுக்கு இணையத்துடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். பழனி முருகன் கோவிலுக்கு செவ்வாயன்று வந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்த ஆண்டு 28 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட உள்ளது. உயர்கல்வியில் இந்தியாவின் இலக்கு 25.6 சதவீதம் தான். ஆனால் தமிழகத்தில் 48.9 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது. அதற்கு பள்ளிக்கல்வி துறை மூலமாக வழங்கப்பட்ட சலுகைகள் தான் காரணம். இந்த ஆண்டு புதிய திட்டமாக 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இணையத்துடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்படும், 6, 7, 8 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்காக 7,000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்படவுள்ளது.
நடமாடும் நூலகத்தில் உள்ள நடைமுறைச் சிக்கலால் மாணவர்களின் லேப்டாப்களிலேயே புத்தகங்களை அறிந்து கொள்ளும் வகையில் இணைய நூலகம் எனும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளுக்குப் பிறகு கல்வித்துறைக்கு தனிச்சேனல் ஏற்படுத்தப்படும். ரோபோட் டிக்ஸ் போன்ற நவீனக்கல்வி முறை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். காலியாக உள்ள சுமார் 7 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும். வரும் கல்வியாண்டில் அனைத்து அரசு பள்ளிகளிலும் தமிழ் மற்றும் ஆங்கிலவழிக்கல்வி கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்