மேற்கு வங்க பெண் மருத்துவர் பாலியல் படுகொலையை கண்டித்து மருத்துவர்கள் நடத்தும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் ஆதரவு தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதுநிலை மருத்துவ மாணவி, கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி இரவுப் பணிக்கு வந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை கருத்தரங்கு அறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்த சம்பவத்திற்கு எதிராக நாடு முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் ஆகஸ்ட் 14-ஆம் தேதி விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் ஆகஸ்ட் 17-ஆம் தேதி நாடு முழுவதும் மருத்துவர்கள் 24 மணி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதை அடுத்து, மருத்துவர்கள் நடத்தும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
மேற்குவங்க மாநிலத்தில் பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட செயலை கண்டித்து மருத்துவர்கள் நடத்தும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு நமது முழு ஆதரவை தெரிவிப்போம்! அவர்களுடன் கரம் கோர்ப்போம்!" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.