திண்டுக்கல் மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ தொடர்ந்து 24 மணி நேரம் எரிந்து வருவதால் ஏற்பட்ட கடும் புகை மூட்டத்தால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளது. இங்கு நாள்தோறும் சேகரிக்கப்படுகின்ற குப்பைகள் அனைத்தும் திண்டுக்கல்லை அடுத்துள்ள முருக பவனத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. அப்பகுதியில் உள்ள கருணாநிதி நகர், இந்திரா நகர், முத்துராஜ் நகர், ஆகிய பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இருந்து வரக்கூடிய துர்நாற்றம் மற்றும் குப்பைகளை அடிக்கடி எரிப்பதால் ஏற்படுகின்ற மாசு கலந்த புகை மூட்டத்தின் காரணமாக இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சுவாசப் பிரச்சனை நுரையீரல் பிரச்சனை ஆஸ்துமா போன்ற நோய்கள் உள்ளது. ஆகவே இந்த குப்பைகளை அகற்ற வேண்டும் என பலமுறை முறையிட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனிடையே இன்று 20.02.22 காலை அப்பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் குப்பை கிடங்கிற்கு தீ வைத்து விட்டனர். இதனால் தீ மளமளவென பரவி 24 மணி நேரமாக குப்பைக்கிடங்கு எரிந்து வருவதால் வெளிவருகின்ற புகையினால் பாதிக்கப்படுவதாக கூறி திண்டுக்கல் பழநி சாலையில் உள்ள முருகபவனத்தில் திடீர் என நேற்று இரவு அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய போலீசார் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி மறியல் போராட்டத்தை கைவிட செய்தனர். தற்போது குப்பை கிடங்கில் ஏற்பட்டுள்ள தீயை திண்டுக்கல் தீயணைப்பு துறையினர் அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.