திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரதமர் கிசான் திட்டத்தில் நடைபெற்ற ஊழலில் நிவாரணம் பெற்ற 11 ஆயிரம் பேரில் தகுதியற்ற 5 ஆயிரம் பேர்களிடம்77 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டது.
மத்திய ,மாநில ஆளுங்கட்சியினருடன் சேர்ந்த ஊழல் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரதமர்கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கான நிவாரண நிதியில் நடைபெற்ற மோசடியில் 11 ஆயிரம் பேர்களில் தகுதியற்ற 5 ஆயிரம் நபர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. விவசாய அதிகாரிகள் இதுவரை ஒரு கோடியே 76 லட்சத்து 80 ஆயிரம் வசூலித்துள்ளனர். இன்னும் 24 லட்சத்து 32 ஆயிரத்து 200 பாக்கி பணம் வசூலிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒன்றிய அளவில் அதிகபட்சமாக வத்தலகுண்டில் 1825 பேர்களில் 878 பேர்கள் தகுதியற்றவர்கள். ரெட்டியார்சத்திரத்தில் 1204 பேர்களில் 505பேர்கள் தகுதியற்றவர்கள். கொடைக்கானலில் 683ல் 501 பேர் தகுதியற்றவர்கள். பழனியில் 582 பேர்களில் 282 பேர்தகுதியற்றவர்கள்.
பிரதமர் கிசான் நிதி ஏற்கனவே சிறுகுறு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இதனையே மோடி அனைத்து விவசாயிகளுக்கும் வழங்குவதாக அறிவித்தார். இன்று வரை இந்த நிவாரணம்கிடைக்காத விவசாயிகள் ஏராளமானவர்கள் உள்ளனர். இந்த அறிவிப்பை பயன்படுத்தி மத்திய, மாநில ஆளுங் கட்சியினர் போலியான நபர்களின் வங்கிக்கணக்குகளுக்கு பணத்தை அனுப்பி மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இப்படி தவறான நபர்களை இணைப்பதற்கு சான்றுகள் வழங்கிய வருவாய் மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் யார் என்பதை கண்டறிந்து இத்தகைய மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றம் நிருபிக்கப்பட்டால் தண்டனைக்குள்ளாக வேண்டும் என்ற நிலையில் ஆளுங்கட்சியினருடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஊழல் அம்பலப்பட்டுள்ள சூழலில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையையடுத்து தமிழக அரசு விசாரணை கமிஷன் அமைத்து விசாரித்து வருகின்ற நிலையில் அதிகாரிகளே இந்த பணத்தை செலுத்தினார்களா? என்ற சந்தேகம் உள்ளது. எனவே இந்த மோசடியில் ஈடுபட்ட அனைவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து விடுபட்ட தகுதி நபர்களுக்கு இந்த நிவாரணம் கிடைப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.(ந.நி)