சென்னை, மே 2- இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலத்தலைவர் என்.ரெஜீஸ்குமார், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: கொரோனா தொற்று பரவி விடக்கூடாது என்று ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 40 நாட்கள் நிறைவடைந்து விட்டது. தற்போது மேலும் 15 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் மக்கள் ஒவ்வொருவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில், கடுமையான சிரமங்களையும் சந்தித்து வருகின்றனர் .
இதில் பணி நிமித்தமாக வெளி மாநிலங்களில் தங்கியிருக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களின் நிலை மிகுந்த கேள்விக்குரியதாக உள்ளது. சமீபத்திய மத்திய அரசின் அறிவிப்பில் வெளிமாநிலங்களில் வசிக்கக்கூடிய தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த மாநிலங்களுக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகளை மாநில அரசாங்கங்கள் மேற்கொள்ள வேண்டுமென வழிகாட்டியுள்ளது. அதனடிப்படையில் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து ஜார்கண்ட் மாநிலத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கிளம்பிச் சென்றுள்ளனர். அதேபோல கேரளத்திலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இடைநில்லா ரயிலாக இந்த ரயில் இயக்கப்பட்டுள்ளது. இதில் பயணிக்கக்கூடிய தொழிலாளர்களுக்கு பயண நேரத்திற்கான உணவு மற்றும் தேவையான பொருட்கள் கேரள இடது ஜனநாயக முன்னணி அரசால் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படி ஒவ்வொரு மாநில அரசுகளும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. ஆனால், தமிழக அரசு ஒவ்வொரு விஷயத்திலும் மக்களுக்கு தேவையானவற்றை செய்வதில் தாமதத்தையும் குழப்பத்தை மேற்கொண்டு வருகிறது. வெளிமாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு திரும்பி வருபவர்களை எப்படி நடத்த வேண்டும் என்ற வழிகாட்டுதலை மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பிய தமிழக அரசு, வெளிமாநிலங்களில் இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்திற்கு திரும்பி வருவது எப்படி என்ற தெளிவான அறிவிப்பை வெளியிடவில்லை. எனவே வெளிமாநிலத்தில் பணியாற்றுபவர்களை அழைத்து வருவதற்கு ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் கீழ் ஒரு குழு உருவாக்கி, ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி உதவி எண்கள் அறிவிக்கப்பட வேண்டும். அவர்கள் தமிழகத்திற்கு திரும்பி வருவதற்கான பயண அனுமதிக்காக விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரியை அறிவிக்க வேண்டும். மேலும், அவர்கள் தமிழகத்திற்கு திரும்பி வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு மேற்கொள்வதுடன் அதற்கான செலவுகளுக்கும் அரசே பொறுப்பேற்க வேண்டும். பிற மாநிலங்களில் புலம்பெயர்ந்து வாழும் தமிழக மக்களின் நலன் கருதி தமிழக அரசு மேற்கண்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.