தக்கலை:
பணிக்காலத்தில் மரணமடை கின்ற அரசு நிதி உதவி பெறும் பள்ளிஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் வாரிசுகளுக்குக் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குவதைக் கட்டாயமாக்க வேண்டும் என்று தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு தனியார் பள்ளி (அரசு உதவி பெறும் பள்ளிகள்) ஆசிரியர் அலுவலர் சங்க மாநில சிறப்புப்பொதுக் குழுக் கூட்டம் திருச்சி கண்டோண்மெண்ட் ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் மாநிலத் தலைவர் அமலராஜன் தலைமையில் நடை பெற்றது. பொதுச்செயலாளர் கனகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.1991 ஆம் ஆண்டிற்குப் பின்னர் தொடங்கப்பட்ட அல்லது தரம் உயர்த்தப்பட்ட தாய்த் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்ட பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு மடிக்கணினி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும்குறைவின்றி வழங்க வேண்டும். அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் உபரி என்ற பெயரில் இயக்குநர் தொகுப்புக்கு ஒப்படைப்பு செய்கின்ற ஆசிரியர் பணியிடங்களை இத்தமிழ்வழிப் பள்ளிகளுக்கு வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.பனிக்காலத்தில் மரணமடைகின்ற அரசு நிதி உதவி பெறும் பள்ளிஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் வாரிசுகளுக்குக் கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்குவதை உறுதிப்படுத்திட தமிழக அரசு உரிய ஆணைவெளியிட வேண்டும்.அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கான அனைத்து வகை பணப்பலன்களுக்கும் பள்ளி அங்கீகாரச் சான்றுகளைத் தொடர்புபடுத்தி காலதாமதப் படுத்தும் கல்வித்துறை அலுவலர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கி தேவையற்ற நீதிமன்ற வழக்குகளை தவிர்த்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.