சென்னை, மே 31-சென்னை-சேலம் எட்டுவழிச் சாலை திட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்கக் கோரி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.சென்னை - சேலம் இடையே ரூ. 10 ஆயிரம் கோடி செலவில் எட்டுவழிச் விரைவுச்சாலை அமைக்க சேலம், தருமபுரி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஆயிரத்து 900 ஹெக்டர் நிலங்களை கையகப் படுத்த தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது. தொடர்ந்து, பல பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தீவிரமாக ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், விவசாயிகளும், நில உரிமையாளர்களும் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தியது. 8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரியும், திட் டத்தை ரத்து செய்யக் கோரியும் பல கட்டங்களாக போராட்டங்களும் நடத்தி வந்தனர்.எனினும், மத்திய அரசு துணையுடன், தமிழக அரசு 8 வழிச்சாலை திட்டத்தை கொண்டு வருவதில் தீவிரம் காட்டி வந்தது. இதைத் தொடர்ந்து, திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள விவசாயிகளும், நில உரிமையாளர்களும், பூவுலகின் நண் பர்கள் சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.மேலும், அதில் இந்தத் திட்டத்தை எதிர்த்தவர்கள் மீது பதியப் பட்ட வழக்குகளையும் ரத்து செய்யவும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், நிலம் கையகப்படுத் தப்பட்டது செல்லாது என்று தீர்ப்பளித்தது.மேலும், இந்தத் திட்டத்தின் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். இதேபோல், வருவாய் ஆவணங்களில் செய்யப் பட்ட மாற்றங்களை, 8 வாரத்தில் பழைய நிலைக்கு கொண்டு வந்து சம்மந்தப்பட்ட விவசாயிகளிடம் நிலத்தை வழங்க வேண்டும். மத்திய சுற்றுச்சூழல் அனுமதி பெற்றபின்தான் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இந்திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது செல்லாது என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் முன் அனுமதி பெறவில்லை என்பதோடு, திட்டத்தினால் ஏற்படக்கூடிய சமூக மற்றும் சுற்றுச் சூழல் தாக்கங்கள் குறித்து முறையாக ஆய்வு செய்யப்படவில்லை என்றும் உயர்நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. அந்த நேரம் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்திருந்ததால், ஆளும் கட்சியின் கூட்டணியில் இருந்த பாமக தங்களுக்கு முதல் வெற்றி கிடைத்ததாக மார்தட்டிக் கொண்டதோடு மேல் முறையீடு செய்யக்கூடாது என்றும் எடப்பாடி அரசுக்கு வேண்டுகோள் விடுத்தது.இந்த தீர்ப்பு குறித்து முதலமைச்சரிடம் கேட்டபோது,“அதிமுக வின் கனவு திட்டமாக இருந்தாலும் நீதிமன்றத்தின் தீர்ப்பை பின்பற்ற வேண்டியது அரசின் கடமை என்பதால் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து நீதிமன்றத் தீர்ப்பை பின்பற்று போம். மேல் முறையீடு செய்யமாட்டோம்” என்றார். ஆனால், தமிழத்தில் தேர்தல் பிரச் சாரம் மேற்கொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, எட்டு வழிச் சாலை திட்டத்தை கொண்டுவருவோம் என்றார். அன்றைக்கு அந்த மேடையில் அமர்ந்திருத்த முதலமைச்சர் மற்றும் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் மவுனம் காத்தனர். அன்றைக்கு அமைதியாக இருந்ததன் காரணம் தற்போது வெளிப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் பட்டுள்ளது.