tamilnadu

img

அரசியல் சட்ட அமைப்புகளை தகர்க்க அனுமதியோம்! - ஜி.ராமகிருஷ்ணன்

நான்காவது நாளாக நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாட்டின் தலைநகர் தில்லியில் நடந்த வகுப்புவாத வன்முறையில் 47 பேர் கொல்லப்பட்டதும், பல நூறு பேர் படுகாயமுற்ற கோரச்சம்பவத்தை விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய போது நாடாளுமன்றத்தை ஒத்தி வைப்போமே தவிர, வகுப்புவாத வன்முறை பற்றி இப்போது விவாதிக்க அனுமதிக்க மாட்டோம் என்ற அடிப்படையில்தான் நாடாளுமன்ற இரண்டு அவைகளையும் மோடி அரசு ஒத்தி வைத்துள்ளது. வகுப்பு வன்முறையில்  கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்திடக்கூட மோடி அரசுக்கு மனமில்லை. 

மதவெறி வன்முறையாளர்கள் தெருக்களுக்குள் நுழைந்துவிட்டார்கள், எங்களைக் காப்பாற்றுங்கள் என தில்லி வடகிழக்குப்பகுதியில் இணக்கமாக வாழ்ந்து வந்த முஸ்லிம் - இந்துக்கள் இரு தரப்பினருமே காவல்துறைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கெஞ்சிக் கேட்டபோதும், காவல்துறை களத்திற்கு வரவில்லை. தாமதமாக வந்த காவல்துறையினர் கூட வன்முறையைத் தடுக்கவில்லை; மாறாக, வேடிக்கை பார்த்தார்கள். சில இடங்களில் வன்முறையாளர்களுக்கு துணை நின்றார்கள்.

நீதிபதி மாற்றம்

நாடே தலை குனியக்கூடிய வகுப்பு வன்முறை பற்றிய வழக்கு விசாரணையில் தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் முரளிதர் மற்றும் தல்வந்த் சிங் நடந்த வன்முறைக்கு காரணமான வெறுப்புப்பேச்சை பேசிய  மத்திய அமைச்சர் உள்ளிட்ட கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர் போன்ற  பாஜக தலைவர்கள் மீது ஏன் வழக்கு தொடுக்கவில்லையென்று கேள்வி மேல் கேள்வி கேட்டு காவல்துறை அதிகாரிகளை துளைத்தெடுத்தனர். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள  (தில்லி மாநிலம் சட்டம், ஒழுங்கு மத்திய அரசின் அதிகாரத்தில் உள்ளது) காவல்துறையையும், பாஜக தலைவர்களையும் கண்டித்ததற்காக இரவோடு இரவாக 26.2.2020 அன்று பஞ்சாப், ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதி முரளிதர் இடமாற்றம் செய்யப்பட்டார்.  பாஜக அரசையும், அதன் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையையும் கண்டித்ததற்காக நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்ட இந்த நடவடிக்கை நீதிபதி முரளிதருக்கு எதிரானது மட்டுமல்ல, மத்திய அரசை, காவல்துறையை கண்டித்தால் இதுதான் நடக்குமென  மற்ற நீதிபதிகளுக்கு மத்திய அரசு விடுத்த மிரட்டலேயாகும். அடுத்து 27ஆம் தேதி இவ்வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் விசார ணையை ஏப்ரல் 13க்கு ஒத்தி வைத்தனர். அவசரமாக முடிவெடுக்க வேண்டிய ஒரு வழக்கு விசாரணையை ஒன்றரை மாதம் ஒத்தி வைத்ததற்காக உச்சநீதிமன்றம் தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகளை புதனன்று கண்டித்தி ருக்கிறது. 

தில்லி வடகிழக்குப்பகுதியில் ஜாபராபாத் சந்த் பாஃப் ஆகிய இடங்களில் குடியுரிமை  திருத்த சட்டத்தை எதிர்த்து நடத்தி வரும் போராட்டக்காரர்களை 3 நாட்களுக்குள் காவல்துறை அப்புறப்படுத்தவில்லையென்றால், நாங்களே சாலைகளில் இறங்கி அடித்து நொறுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவோமென்று பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கபில் மிஸ்ரா மிரட்டினார். அதையே சங் பரிவார அமைப்புகள் செய்தும் காட்டியுள்ளனர். இவைகளெல்லாம் அம்பலமாகிறதே என்பதால்தான் அவர்கள் மீது வழக்கு தொடுக்க மத்திய அரசும் காவல்துறையும் விரும்பவில்லை. மேலும் பாஜக அரசின் போக்கு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும், மோடி, அமித் ஷா வகையறா தயாராக இல்லை. 

வேலிக்கு ஓணான் சாட்சியா?

தில்லியில் நிகழ்ந்த வகுப்பு வன்முறையில் பெருத்த உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டு தில்லி நகர மக்களின் அன்றாட வாழ்க்கையையே பாதித்துள்ள இச்சம்பவம் குறித்து இரண்டு காவல்துறை அதிகாரிகள் விசாரித்தால் போதும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  இவர்கள் இருவரும் நேர்மையானவர்கள் அல்ல. ஏற்கெனவே பல்வேறு அவக்கேடுகளுக்கு ஆளானவர்கள்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும், ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்திலும் அத்துமீறி நடந்து கொண்டவர்கள் தான் இந்த இரண்டு அதிகாரிகளும். இதில் ஒருவரை ஏற்கனவே தேர்தல் ஆணையம் கண்டித்திருக்கிறது. இவர்கள் தலைமையில் விசாரணை அறிவித்திருப்பது மதவெறி வன்முறையில் ஈடுபட்ட ஆர்எஸ்எஸ், பாஜக-வினரை பாதுகாப்பதற்காகவே அன்றி வேறல்ல. வன்முறை நிகழ்ந்த பகுதிக்குச் சென்று பாதிக்கப்பட்ட  மக்களை சந்தித்து ‘நடந்தது, நடந்து விட்டது’ என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேசிய அடிப்படையில்தான் விசாரணை நடத்த வேண்டுமென்று மோடி அரசு கருதுகிறது. 

பாஜக ஆளும்  மாநிலங்களில் அராஜகம்

நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய தில்லி வன்முறை குறித்து காவல்துறை அதிகாரிகள் அளவிலான விசாரணை போதுமானது அல்ல என்றும் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் நேர்மையான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. தில்லி வன்முறையின்போது வேடிக்கை பார்த்த காவல்துறையினர், சிஏஏ-வை எதிர்த்து போராட்டம் நடத்திய பகுதிகளில் அத்துமீறி மாணவர்களையும், போராட்டக்காரர்களையும் தாக்கியுள்ளனர். பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெறகூடிய மாநிலங்க ளில்தான் சிஏஏ-வை எதிர்த்து போராடியவர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. 

உத்தரப்பிரதேசத்தில் அமைதியாக தொழுகை முடிந்து வெளியே வரக்கூடிய சிறுபான்மை மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 21 பேர் கொல்லப்பட்டனர். பாஜக ஆளக்கூடிய அசாமில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 5 பேர் கொல்லப்பட்டனர். அதுபோலவே, கர்நாடக மாநிலத்தில் 2 பேர் துப்பாக்கிச் சூட்டில் பலியானார்கள். கடந்த வாரம் தில்லியில் பாஜகவின் காவல்துறை வேடிக்கை பார்க்க, நடந்த வகுப்பு வன்முறையை உச்சநீதிமன்றமே கண்டித்துள்ளது. 

தில்லியில் மத்திய அரசாங்கத்தை எதிர்த்து உறுதியாகப் போராடிய ஜேஎன்யூ பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஆர்எஸ்எஸ் குண்டர்கள் புகுந்து மாணவர் சங்க தலைவர்களையும், இவர்களுக்கு ஆதரவாக இருந்த பேராசிரியர்களையும் தேடித் தேடி அடையாளம் கண்டு அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். வளாகத்தின் வாயிலில் இருந்த பாதுகாப்புத்துறையினர் தலையிடவில்லை.குண்டர்கள் வளாகத்திற்குள் புகுந்து நரவேட்டையாடிய போது மாணவர்களையும், ஆசிரியர்களையும் பாதுகாக்க பல்கலைக்கழக துணைவேந்தர் நடவடிக்கை எடுக்கவில்லை. காரணம் அவர் மோடி அரசால் நியமிக்கப்பட்ட சங் பரிவார் அமைப்பைச் சார்ந்தவர். தற்போது தமிழ்நாடு ஆளுநர் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்திற்கான மூன்று பேர் கொண்ட தேர்வு குழுவிற்கு ஜேஎன்யூ பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீஷ் சந்திராவை ஒரு உறுப்பினராக நியமித்துள்ளார்.  இது வெட்கக்கேடானது. இதன் மூலம் நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்டவர்களை புகுத்த மோடி அரசு முயற்சிக்கிறது.

இதேபோல ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்திலும் ஆர்எஸ்எஸ் குண்டர்கள் காவல்துறையினர்  அரவ ணைப்புடன் உள்ளே நுழைந்து மாணவர்களை அடித்து நொறுக்கினர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வன்முறையாளர்களை மத்திய அரசு ஆதரிப்பது மட்டுமல்ல, அவர்களை பாதுகாக்கிறது வன்முறையில் ஈடுபடுவதற்கு மறைமுகமாக தூண்டி விடுகிறது.

தேசம் காக்க அணிதிரள்வோம்

மோடி - அமித் ஷா அரசு அரசியல் சட்டத்தின்படி அமைக்கப்பட்டுள்ள  அத்துனை நிறுவனங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அனைத்து வழிகளிலும் தங்களது இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை நிலை நாட்டிட முயற்சித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகைப் பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு என்ற முச்சூலத்தை பயன்படுத்த மோடி - அமித்ஷா அரசு முயல்கிறது. 
 

நீதித்துறை, காவல்துறை, தேர்தல் ஆணையம் என அனைத்து அரசியல் சாசன அமைப்புகளையும் தகர்ப்பதன் மூலம் மதச்சார்பற்ற நாட்டின் அடிப்படை யையே தகர்த்து தாங்கள் விரும்பும் இந்துத்துவா நாட்டை உருவாக்க முயல்கின்றனர்.  இந்தநிலையில் அரசியல் சாசனத்தை பாதுகாக்கவும் அதன்படி அமைக்கப்பட்டுள்ள அனைத்து அமைப்பு களையும் பாதுகாக்கவும், அனைத்து பகுதி மக்களும் அணி திரள வேண்டியது அவசியமாகும். தமிழகத்தில் குடியுரிமை சட்டத்தை நிறைவேற்ற மாட்டோம் என்று நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி மார்ச் 9 ஆம் தேதி சென்னை கோட்டை முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.

மாவீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் தூக்கிலிடப்பட்ட மார்ச் 23ஆம் தேதியன்று குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் நடைபெறவுள்ள  இயக்கத்தின் ஒரு பகுதியாக தமிழகத்தில் மாலை நேர தொடர் முழக்க போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெறவுள்ளது.   இந்த இயக்கங்களில் பெருந்திரளாக பங்கேற்பதன் மூலம் மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசை பாதுகாக்க அணி திரள்வோம்.

கட்டுரையாளர் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்