tamilnadu

img

இடஒதுக்கீடு பிரச்சனைகள் : பாஜக அரசின் துரோகத்திற்கு தமிழக மக்கள் பதிலடி கொடுப்பார்கள்....

கல்விக்கான இடஒதுக்கீடு பிரச்சனைகளில் தமிழக மக்களுக்கு மத்திய பாஜக அரசும், மத்திய அரசின் சொற்படி நடக்கும் தமிழக ஆளுநரும் மிகப்பெரும் துரோகத்தை இழைத்துள்ளனர்.  அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்துள்ள விதிகளின்படி நடந்துகொள்ள மறுத்து வருகின்றனர். 

மருத்துவக் கல்விக் கனவை தகர்க்கக்கூடிய நீட் தேர்வு வேண்டாம் என்றும் அதிலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, தமிழக அரசியல் இயக்கங்கள் மற்றும் மக்களின் வலுவான போராட்டத்திற்குப் பிறகு தமிழக அரசு இரண்டு மசோதாக்களை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. ஆனால் அதில் குடியரசுத்தலைவர் கையெழுத்திடாமல் திருப்பி அனுப்பி வைத்தார். அப்படி திருப்பி அனுப்பும் போது அதற்கு என்ன காரணம் என்று தெரிவிப்பது சட்டப்பூர்வமான கடமையாகும். ஆனால் அதைக் கூட தெரிவிக்கவில்லை. உண்மையில் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விதி விலக்கு அளித்திட மத்திய பாஜக அரசு விரும்பவில்லை; எனவேதான் குடியரசுத் தலைவர் தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாக்களை திருப்பி அனுப்பினார்.

ஏன் இந்த இடஒதுக்கீடு அவசியம்?
இது ஒருபுறமிருக்க, நீட் தேர்வு அமலாகும் நிலையில், அதிலாவது ஏழை, எளிய மாணவர்கள் உரிய இடங்களைப் பெறும் வகையில் நியாயம் வழங்கும் விதமாக  உள்ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்ற குரல் வலுத்திருக்கிறது. மாநில மருத்துவக் கல்வி நிறுவனங்களில், 15சதவீத இடங்கள் மத்திய அரசின் தொகுப்பிற்கு சென்றுவிடுகின்றன. இந்நிலையில் எஞ்சியுள்ள 85 சதவீத இடங்களில், அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு 10சதவீத இடஒதுக்கீடு அளிக்கலாம் என்று நீதிபதி கலையரசன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு பரிந்துரை செய்தது. இதைப் பரிசீலித்த தமிழக அரசு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கலாம் என முடிவு செய்து, அதற்கான மசோதாவையும் சட்டமன்றத்தில் நிறை
வேற்றியது. 2020 செப்டம்பர் 15 அன்று இந்த மசோதா நிறைவேறியது. ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அதை ஒரு மாதம் காலம் கிடப்பில் போட்டுவிட்டார் ஆளுநர். இந்நிலையில் அக்டோபர் 16 அன்று நீட் தேர்வு முடிவுகளும் வெளியாகிவிட்டன. இந்த நிலையில் இன்னும் கால அவகாசம் கேட்டிருக்கிறார் ஆளுநர். ஏற்கெனவே, நடப்பு கல்வி ஆண்டில் பெரும்பகுதி காலம், கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்துசென்றுவிட்டது. இந்நிலையில் மேலும் அவகாசம் கேட்பது என்பது, 7.5 சதவீத இடஒதுக்கீடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கவிடாமல் செய்கிற நடவடிக்கையே ஆகும். கல்லூரிகள் திறந்தால் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு உள்ளிட்ட  பல்வேறு நடவடிக்கைகள் நடக்கும் என்ற நிலையில், அரசு நிறைவேற்றிய மசோதாவுக்கு உடனே ஒப்புதல் அளிக்காமல் திட்டமிட்டே காலம் கடத்துவது கண்டனத்திற்குரியது. மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பது மிக முக்கியமானது. ஏனென்றால், மருத்துவக் கல்வி வாய்ப்பு என்கிற ஆடுகளம் சமதளமானதாக இல்லை. இதில் நீட் தேர்வை வேறு எதிர்கொள்ள வேண்டி யிருக்கிறது. அரசுப் பள்ளிகளில் பயில்கிற மாணவர்களில் பெரும்பாலானவர்கள் ஏழை, எளிய குடும்பத்து பிள்ளைகள்தான். அவர்கள், லட்சக்கணக்கில் பணத்தைச் செலுத்தி நீட்தேர்வு சிறப்புப் பயிற்சி பெற முடியாது என்பதே எதார்த்த நிலையாக உள்ளது. அந்த அடிப்படையில்தான் மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவது நியாயமானதாக இருக்கும் என்ற குரல் எழுந்து, மசோதாவும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மட்டுமல்ல
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு என்பது ஏதோ தமிழகத்தில் மட்டும்தான் எழுந்துள்ள குரல் அல்ல. ஏற்கெனவே கர்நாடகாவில் மருத்துவக் கல்வியில்கிராமப்புற மாணவர்களுக்கு 15சதவீதம் இடஒதுக்கீடு அளித்திருக்கிறார்கள். அது அமலாகிக் கொண்டிருக்கிறது. எனவே இது புதிதல்ல. எனவே 7.5 சதவீத இடஒதுக்கீட்டிற்கு வகைசெய்யும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் இழுத்தடிப்பது தமிழக மக்களுக்கு இழைக்கிற மிகப்பெரிய துரோகமாகும். 7.5சதவீத இடஒதுக்கீட்டை தமிழகத்தில் யாருமே எதிர்க்கவில்லை. எனவே தமிழக ஆளுநர், இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 200ன் அடிப்படையில் உடனடியாக மசோதாவுக்கு ஒப்புதல்அளித்து கையெழுத்திட வேண்டும். மறுப்பது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது. எனவே அரசியலமைப்புச் சட்டப்படி செயல்படவில்லையென்றால் பொறுப்பிலிருந்து விலகி வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை மார்க்சிஸ்ட் கட்சி முன்வைத்து போராடி வருகிறது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு சரியல்ல
மற்றொருபுறம், இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி இடங்களில் 50சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பது தொடர்பான வழக்கில், அதற்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பதும் மிகப்பெரிய தாக்குதலாக வந்துள்ளது.மருத்துவ இளநிலை பட்டப்படிப்பிற்கான இடங்களில் அனைத்து மாநிலங்களிலிருந்தும் 15சதவீதத்தை மத்திய அரசு தனது தொகுப்பிற்கு எடுத்துக் கொள்கிறது. அப்படி எடுத்த இடங்களை தொகுத்து மறுபடியும் மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்கிற போது, அந்த ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இது தொடர்பாக ஏற்கெனவே இந்திய மருத்துவக் கவுன்சில் தெளிவான வழிகாட்டுதலை வழங்கியிருக்கிறது. அந்தந்த மாநிலங்களில் அமலில் இருக்கிற இடஒதுக்கீட்டு கொள்கையின்படி அந்தந்த மாநிலங்களுக்கான ஒதுக்கீட்டை உறுதிசெய்ய வேண்டும் என்று மருத்துவக்கவுன்சில் கூறியிருக்கிறது. அந்த அடிப்படையில் தமிழகத்திற்கு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50சதவீத இடஒதுக்கீடு அளித்திட வேண்டும். அதை மத்திய அரசு மறுத்து வருவதால், அதை அமலாக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக அரசும், தமிழக எதிர்க்கட்சிகளும் வழக்கு தொடுத்தன. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம், இந்த ஆண்டு 50சதவீத இடஒதுக்கீட்டை அமலாக்க முடியாது என்று மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்டு,  இந்த ஆண்டு 50சதவீத இடஒதுக்கீடு இல்லை என்று தீர்ப்பளித்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த இதரபிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பின் அகில இந்திய தொகுப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு அளிப்பது இல்லை என்ற மத்திய பாஜக அரசின் திட்டமிட்ட சூழ்ச்சியே இதன் பின்னணியில்இருக்கிறது.

அப்பட்டமான துரோகம்
கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு இருந்த போதிலும் கூட மத்திய அரசு, குறுகிய காலத்தில் திட்டமிட்டு நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்தியது. அந்தக் கூட்டத்தில் 22 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளின் எதிர்ப்பையும் சம்பாதித்துள்ள மூன்று வேளாண் மசோதாக்களை மாநிலங்களவையில் அராஜகமான முறையில் நிறைவேற்றியது. மக்களவையில் தொழிலாளர் விரோத சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி இதுபோன்ற பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளையெல்லாம் அவசர அவசரமாக மேற்கொள்ள முடிந்த மத்திய அரசு, தமிழக இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் நலன் காக்கக்கூடிய 50சதவீத இடஒதுக்கீடு பிரச்சனையில், ‘ஏற்கெனவே மாணவர்கள் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து அனுப்பிவிட்டார்கள், அதில் உள்ள விபரங்களை சரி செய்ய முடியாது’ என்று சொத்தையான காரணத்தைக் காட்டி அதை தள்ளிப்போடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. தொழில்நுட்பம்  வளர்ந்துள்ள யுகத்தில், உடனடியாக மறு அறிவிப்பு கொடுத்து விண்ணப்பம் பெறுவது இயலாத காரியமல்ல. ஆனால் அதைச் செய்ய அரசு மறுக்கிறது. இது அப்பப்பட்டமான துரோகமே ஆகும். 

இதே மத்திய அரசு, வங்கிப் பணியாளர் தேர்வு பிரச்சனையில், எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓபிசி., பிரிவினருக்கான சட்டப்படியான இடஒதுக்கீட்டிலிருந்து, பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கான 10சதவீத இடஒதுக்கீட்டிற்குரிய இடங்களை அளிக்க வேண்டும் என்பதற்காக, அவசர அவசரமாக எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி., இடஒதுக்கீட்டு சதவீதத்தை குறைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்கிறது. எனவே ஒட்டுமொத்தமாக, சமூகத்தின் மேல்தட்டில் உள்ள பிரிவினருக்கு அனைத்து பலன்களையும் அளிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசு மேற்கொண்டிருக்கிறது. பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித், பழங்குடி மக்களுக்குரிய பலன்களை  உறுதிசெய்யாதது மட்டுமல்ல, அதை தட்டிப்பறிப்பதற்கான அரசியல் சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருக்கிறது. இந்த இரண்டு இடஒதுக்கீடு விவகாரங்களிலும் மத்திய பாஜக அரசு தமிழக மக்களுக்கு பகிரங்கமாக துரோகம் இழைத்துள்ளது. இந்த துரோகத்திற்கு தமிழக மக்கள் நிச்சயம் தக்க பதிலடி கொடுப்பார்கள்.

===ஜி.ராமகிருஷ்ணன்=== 
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)