tamilnadu

img

மொழி என்பது ‘வெறும்’ மொழியா?

மத்தியில் மோடி அரசு இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பிறகு முதல் தாக்குதலை மாநில கல்வி உரிமையின் மீது தொடுத்துள்ளது. ஒரு சமூகத்தின் கல்வியில் ஆதிக்கம் செலுத்துவது அச்சமூகத்தின் மக்களை ஆதிக்கம் செலுத்துவதாகும். ஆளும் வர்க்கத்தின் மிக முக்கிய கருவி கல்வி. எனவேதான் புதிய அமைச்சரவை பொறுப்பேற்ற செய்தி நம்மை வந்து சேரும் முன் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ரமேஷ் போக்ரியால் கடந்த மே 31ஆம் தேதி புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டு வரும் ஜூன் 30க்குள் பொதுமக்களை கருத்து தெரிவிக்க கூறியுள்ளார். 484 பக்கம் கொண்ட இவ்வரைவு அறிக்கையை இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையிலான 9 பேர் கொண்ட குழு தயாரித்துள்ளது. ஏற்கனவே கடுமையான எதிர்ப்பை சந்தித்த டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியம் குழுவின் அறிக்கையின் நகலாக இவ்வறிக்கை வந்துள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வறிக்கையின் அபாயத்தை பொதுமக்கள் அறிந்து விடக்கூடாது என்பதற்காகவே வரும் ஜூன் 30க்குள் அதாவது ஒரு மாதத்திற்குள் கருத்து தெரிவிக்க கூறியுள்ளது. இரண்டு வருடங்கள் தயாரித்த ஒரு வரைவு அறிக்கையைப் பற்றி ஒரு மாதத்தில் கருத்துத் தெரிவிக்க வேண்டும் எனக் கூறியிருப்பது அபத்தமான நடவடிக்கையாகும். மேலும் அந்த அறிக்கை எந்த மாநில மொழியிலும் வெளியிடப்படாமல் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் வெளியிட்டிருப்பது ஏற்புடையதல்ல.

சுற்றுலா வந்தவர்களல்ல
 

தமிழகத்தின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் மொழிக்கான போராட்டமும் இணைந்தே பயணித்துள்ளது. எனவே தான் மற்ற மாநிலத்தை விட இங்கு தமிழ் மொழியின் மீது பற்றுதியும், நம்பிக்கையும் தமிழக மக்களிடம் ஆழமாக உள்ளது. 1938 மற்றும் 1965ல் இந்தியை திணித்ததால் தமிழகத்தில் இன்று வரை காங்கிரஸ் ஆட்சிக்கு வர இயலவில்லை. மேலும் 1965 இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம் திராவிட இயக்கத்தை அரியணையில் ஏற்றியது. ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மூன்றாவது மொழியை (இந்தி) கட்டாயமாக்க தேசிய அளவிலான வேலைவாய்ப்பு, கல்வி, அலுவல் மற்றும் அரசியல் சார்ந்து பிறகாரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால் எதார்த்த நிலைவேறாக உள்ளது. இந்தி தெரிந்தால் வேலைவாய்ப்பு என்றிருந்தால் தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட ஒரு கோடி வடமாநிலத்தவர்கள் வந்து குவிந்திருக்கமாட்டார்கள். பேருந்து, ரயில் நிலையங்கள் என பல இடங்களில் சாலைகளின் ஓரங்களில் இந்தி தெரிந்த வடமாநிலத்தவர்களை கும்பல் கும்பலாக பார்க்க முடியும். ஏன் அவர்கள் இங்கு கிழிந்ததுணியுடன், அழுக்குப் பிடித்த தேகத்துடன் காணப்படுகிறார்கள். அவர்கள் சுற்றுலாவிற்காக வந்தவர்கள் இல்லை;இங்கு கிடைக்கும் வேலையில் ஏதேனும் ஒரு வேலையை அடிமாட்டு ஊதியத்திற்கு  பார்க்க வந்தவர்கள் தான். 

கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்திய பொருளாதாரத்தினை கண்காணிக்கும் அமைப்பு சி.எம்.ஐ.இ இந்தியாவில் வேலையின்மை 6.1 சதவீதத்தில் இருந்து 7.1 சதவீதமாக வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது என கூறியுள்ளது. மத்திய புள்ளியியல் அமைச்சகமும் நகர்ப்புறங்களில் 7.8 சதவீதமும், கிராமப்புறத்தில் 5.3 சதவீதமும் வேலையின்மை அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது. இந்திய தொழில் உற்பத்தி 2017-18ல் 4.4 சதவீதமாக இருந்தது 2018-19ல் 3.6 சதவீதமாக கிட்டத்தட்ட 0.8 சதவீதம் குறைந்துள்ளது. இதனால் மக்களிடம் வேலைவாய்ப்பு குறைந்து வாங்கும்சக்தி மிகப் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. எனவே தான்வேலைதேடி அலைவோர் எண்ணிக்கை அதிகமாகி வடமாநிலத்தவர்கள் பெரும்பாலும் தங்கள் இருப்பிடங்களைவிட்டு தமிழகம் போன்ற பகுதிக்கு வருகிறார்கள். 

தற்செயல் நிகழ்வல்ல

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக அஞ்சல்துறை, வங்கி, ரயில்வே, மின்சாரம் போன்ற தமிழகத்தின்கேந்திரமான அரசு நிறுவனத்தில் பிற மாநிலத்தவர்கள் குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களிலிருந்து வேலையில் சேருவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இது தற்செயலான நிகழ்வு என நாம் கடந்து செல்ல இயலாது. தமிழகத்தின் வேலைவாய்ப்பில் உடலுழைப்பு சார்ந்ததுறையில் பெரும்பாலும் வந்து குவிந்துள்ள இந்தி பேசும்வடமாநிலத்தவர்களுக்கு சரி நிகராக சேவைத்துறை சார்ந்தவேலைகளிலும், சிறு உற்பத்தி, விற்பனையகம் போன்றவற்றிலும் இந்தி பேசும் வட மாநிலத்தவர்கள் அதிகரித்துள்ளனர். அரசுத் துறையிலும் இந்தி பேசும் வட மாநிலத்தவரை அனுமதிப்பதற்கான வேலை ஏற்கனவே துவங்கிவிட்டது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி). 2016 விதியின்படி வெளி மாநிலத்தவரை வேலையில் அமர்த்தலாம் என கூறியுள்ளது. இதன்படி வெளிமாநிலத்தவர்களும் தமிழக வேலைவாய்ப்பு போட்டித் தேர்வில் பங்கேற்கலாம் என்றாகியுள்ளது. இந்தி மொழியில் 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் ஒருவரால் போட்டித் தேர்வும்இந்தியில் எழுதலாம் என்றாகி தமிழ் பயனற்றதாக ஆக்கப்படும். இதன் மூலம் தமிழகத்தின் வேலைகளில் இந்தி பேசும் நபர்கள் நிறைக்கப்படும் அபாயம் உள்ளது.

குறைந்தபட்சம் 12 ஆயிரம் இந்தி ஆசிரியர்கள்

தமிழகத்தில் உள்ள 6, 7, 8 ஆம் வகுப்புக்கு மூன்றாம்மொழியாக இந்தியை அனுமதித்தால் பள்ளிக்கு ஒருவர்என்றாலும் குறைந்தபட்சம் 12 ஆயிரம் இந்தி ஆசிரியர்களை  பணியமர்த்த வேண்டியிருக்கும். அப்படியானால் இந்தகாலிப்பணியிடங்களில் இந்தி பேசும் வட மாநிலத்தவர்கள் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஆசிரியராக நியமிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. ஒரு மொழியை கற்பது என்பது மொழிசார்ந்த தொழில், உற்பத்தி, வேலைவாய்ப்பு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும். ஆனால் இந்தி மொழி கற்பதன் மூலம் நாம் எந்த மாதிரியான தொழில், உற்பத்தி, வேலைவாய்ப்பில் தற்போது இருப்பதை விட கூடுதலாக பெறப் போகிறோம்? தாய்மொழியை முழுமையாகக் கற்ற ஒருவரால்எந்த ஒரு மொழியையும் எளிதாக கற்றுக்கொள்ளஇயலும். ஆனால் தமிழகத்தில் தாய் மொழியாக உள்ள தமிழ்எவ்வாறு கற்று கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளஆசிரியர் காலிப் பணியிடங்களில் தமிழ் ஆசிரியர் காலிப்பணியிடம் பெரும்பாலும் நிரப்பப்படாமலேயே உள்ளது.பள்ளிகளில் தமிழ் பாடம் எந்த அளவுக்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது என பார்த்தால் பெரும்பாலும் மற்றபாடத்திற்குகொடுக்கும் முக்கியத்துவத்தை விட குறைவாகவே உள்ளது.சில நேரங்களில் தமிழ் பாட வேளைகளை பிற பாடங்களுக்கான ஆசிரியர்கள் எடுத்துக்கொள்வது இயல்பாக உள்ளது.தாய் மொழியை முழுமையாகக் கற்றுத் தராத ஒரு கல்வி முறையில் மற்றொரு மொழியை அதாவது மூன்றாவது மொழி திணிப்பது நிச்சயமாக மாணவர்களை மிகப் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தும். 

ஆங்கிலம் இன்று இந்தியாவில் கோலோச்ச பொருளியல் சார்ந்த சர்வதேச தொடர்பு முக்கிய காரணமாக உள்ளது. பொருளாதார வாழ்வியல் காரணங்களின் அடிப்படையிலேயே ஒரு மொழி ஜீவித்திருப்பது அவசியமாகிறது. நம்தமிழகத்தில் கூட பொருளியல் சார்ந்து வாழ்வியலில் தமிழ்வலுவாக உள்ளது. தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கிடையிலான மொழி, சிறுதொழில், சில்லரை வர்த்தகம்,முதலாளி - தொழிலாளர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை மற்றும் அரசியல் சார்ந்த நடவடிக்கை, இன்னும் சேவைத் துறை என கிட்டத்தட்ட எட்டு கோடி மக்களும் தமிழ் மொழி சார்ந்து வாழும் பொழுது மூன்றாவதாக ஒரு மொழியை திணிப்பது எந்த வகையிலும் பயனளிக்காது. தேவையிருந்தால் மாணவர்கள் கற்றுக்கொள்வார்கள். அத்துடன் மும்மொழிக் கொள்கையில் இந்தி பேசா மாநிலம்இந்தியாவின் ஏதேனும் ஒரு நவீன மொழியை தேர்ந்தெடுத்தால் போதும் என மத்திய அரசு கூறியுள்ளது. நவீன மொழிஎன்றால் எது? 22 தேசிய மொழிகளில் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்க வாய்ப்பளிக்குமா என்பது கேள்விக்குறியே. எனவே இந்தியை, சமஸ்கிருதத்தை தமிழகத்தில் வலுவாக திணிப்பதற்கான ஏற்பாட்டை இந்த அறிவிப்பு வருவதற்கு முன்பே மத்திய அரசு தொடங்கியுள்ளது என்பதைநாம் புரிந்து கொள்ளவேண்டும். 

கட்டுரையாளர்:  மாநில துணைத்தலைவர், 
இந்திய மாணவர் சங்கம்.