இந்தியாவிலும் ஆரம்ப காலத்தில் நிலங்கள் முழுவதும் சமூகத்திற்கு சொந்தமாக இருந்தது. தனி உடமை என்பது இல்லை. நிலங்களில் விவசாயம் செய்து மக்கள் பங்கிட்டு கொண்டனர். விவசாயத்திற்கு நீர்பாசன வசதி செய்து கொடுப்பது மட்டுமே மன்னனின் கடமை. ஓராண்டு உற்பத்தியில் ஆறில் ஒரு பங்கை மன்னனுக்கு வழங்கிவிட்டு, ஐந்து பங்கை மக்கள் தங்களுக்குள் பங்கிட்டு கொண்டனர். உலகின் தொன்மையான மூத்த அணை கல்லணை. 1080 அடி நீளமும், 40 முதல் 60 அடி அகலமும், காவிரி வெள்ளத்தை தாங்குவதற்கு ஏற்றாற்போல் வளைவு, நெளிவு கொண்ட தொழில்நுட்பத்தோடு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் கரிகாலனால் கட்டப்பட்டது. 4700 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தில் சட்எல்கப்பா எனும் அணை கட்டப்பட்டு முதல் வெள்ளத்திலேயே அடித்துச்செல்லப்பட்டதாக ஆய்வுகள் கூறுகிறது. உலகின் முதல் அணை இதுதான். சட் எல் கப்பா என்பதற்கு இயற்கையை வழிபடுவோர் அணை என்று பொருள். விவசாயத்திற்கு நீர்ப்பாசன வசதி மட்டுமே செய்து கொடுக்கும் மன்னனின் கடமைக்கு சான்று கல்லணை.
முகலாயப் பேரரசு வீழ்ச்சியை நோக்கி பயணித்த காலம். பேரரசை தக்க வைக்கும் ஏற்பாடாக நிலத்தின் மீது கொடூரமான முறையில் வரிவிதிக்கப்பட்டது. அடக்குமுறை ஏவிவிடப்பட்டது. வரி விதிப்பிற்கெதிராக விவசாயிகள் நடத்திய போராட்டங்கள் வரலாறுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 1672 நார்நால் சத்னாமி மதப்பிரிவினரும், 1690 கங்கை பகுதியிலும், அஸ்ஸாமில் மாவோ மோரியா இயக்கமும், தென்பகுதி இராமநாதபுரத்திலும், மதுரை கள்ளர் சமுதாய மக்களும் நடத்திய போராட்டங்கள் முக்கியத்துவம் பெற்றன.இங்கிலாந்தில் ஏற்பட்ட கடும்நிதி நெருக்கடியை சமாளிக்க, பிரிட்டிஷ் அரசு கிழக்கிந்திய பகுதிகளில் வாணிபம் செய்யும் உரிமையை ஏலமிட்டது. 20லட்சம் பவுன்களை ஆண்டுக்கு 8 சதவீதம் வட்டிக்கு தரும் நிறு வனத்திற்கு வணிக உரிமை தர முடிவு செய்யப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனி மோசடிகள் மூலம் அந்த உரிமையைப் பெற்றது. தேசத்தில் கால்பதித்தது. சென்னப்ப நாயக்கரிடமிருந்து சென்னையை 1639 ஆகஸ்ட் 22ல்ஒப்பந்தம் மூலம் விலைக்கு வாங்கினர். 1641 புனித ஜார்ஜ் கோட்டையை பாதுகாப்பிற்காக கட்டி வாணிபம் துவக்கினர். 1661 பம்பாயை ஆண்டுக்கு 10 பவுன் வாடகைக்கு எடுத்தனர்.
பிரிட்டிஷ் வருகைக்கு பிறகு நிலங்களின் மீதான மக்களின் உரிமை மாற்றப்பட்டது. நிலம் முழுமையும் அரசுக்கு சொந்தமானது. நிலம் எந்த தன்மையில் இருந்தாலும் வரி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டது. வரி வசூலிக்க வருவாய் அமைப்பு உருவாக்கப்பட்டது. வருவாய் அமைப்பு நீங்கலாக அரசுக்கும் மக்களுக்குமிடையே இடைத்தட்டு ஏற்படுத்தப்பட்டது. பாசன வசதியுடைய நிலத்திற்கு பட்டாவும், குத்தகைவிடும் உரிமையும், விற்கவும், வாங்கவுமான உரிமை படைத்த ரயத்வாரி நிலப்பிரபுக்கள் ஒருபுறமும், மன்னர்களால் கோவில்களுக்கும், மடங்களுக்கும் கொடுத்த இனாம் நிலங்கள், மன்னர்களுக்கு சேவை செய்தவர்களுக்கு கொடுத்த இனாம் நிலங்கள், தர்ம காரியங்களுக்காக வழங்கப்பட்ட இனாம் நிலங்கள் என்ற வகையில் இனாம்தார்கள் மறுபுறமும், மானாவாரி பாசன நிலங்களையும், ஏரி, குளம் இறவைப் பாசனம் உள்ளிட்ட நிலங்களையும், விவசாயிகளிடம் வரி வசூலித்து மூன்றில் ஒரு பங்கை வைத்துக் கொண்டு இரண்டு பங்கை அரசுக்கு செலுத்திய ஜமீன்தார்கள் இன்னொருபுறமாக அரசுக்கும், மக்களுக்குமிடையே உருவாயினர்.நிலங்களின் மீதான பிரிட்டிஷ் வரி விதிப்பால் பேரழிவுக் கொள்ளை நடத்தப்பட்டது. 1770 வங்கப்பஞ்சம் கொடூரத்தின் உச்சத்தை தொட்டது. 1772 இந்தியப் பஞ்சம் குறித்த அறிக்கை பின்வருமாறு கூறியது. மே மாதம் பீகாரில் மட்டும் 2 லட்சம் பேர் இறந்திருப்பார்கள். ஜுன் மாதத்தில் எட்டில் மூன்று பகுதியினரும், ஜூலையில்ஒரு நாளைக்கு ஐநூறு பேரும் இறந்து போனார்கள். மொத்தத்தில் 10 மில்லியன் மக்கள் இறந்தார்கள். வந்தே மாதரம் பாடலை எழுதிய பங்கிம் சந்திர சட்டோபாத்யா கூறுகிறார். முதலில் மக்கள் பிச்சையெடுத்தார்கள். யார் பிச்சை போடுவது? அவர்கள் வண்டியை விற்றார்கள். தங்கள் பெண் குழந்தைகளை விற்றார்கள். மனைவியை விற்றார்கள். தொடர்ந்து மனைவியை, குழந்தைகளை வாங்க யாரும் இல்லை. மரங்களுக்கு மேலேயும், அடியிலும் வாழ்ந்தார்கள். நாய்களையும், பூனைகளையும் எலிகளையும் சாப்பிட்டார்கள். பலர் எங்கோ மறைந்துபோனார்கள். எஞ்சியவர்கள் பசியாலும், நோயாலும் ஆயிரக்கணக்கில் இறந்து போனார்கள். போராட்டங்களும் தீவிரமடைந்தன.
காட்டின் மீது பழங்குடியினர் உரிமை இழந்தனர். நிலத்தின் மீதான உரிமை மட்டுமல்லாது சமூக உரிமைகளையும் விவசாயிகள் இழந்தனர். உணவுப் பயிர்களை விட்டு தொழிற்பயிர்கள் உற்பத்தி செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இண்டிகோ, கஞ்சா, புகையிலை பயிரிடப்பட்டு உற்பத்தி செய்யப்பட்டது. இதன் விளைவு பெரும் கிளர்ச்சிகள் உருவாக காரணமாயின. பிரிட்டி ஷாரின் நில உறவு மாற்றங்களின் விளைவாக பதவி யிழந்த ஹிந்து முஸ்லிம் சிறு ஆட்சியாளர்கள், முகலாயப்பேரரசின் முன்னாள் வருவாய் ஏஜெண்டுகள், பழங்குடிகளின் தலைவர்கள் தலைமையில் ஒரு நூறாண்டு காலம் போராட்டங்கள் நடந்தன. 1775 முதல் 1875 வரை விவசாயிகள் பழங்குடிகள் நடத்திய கிளர்ச்சி கள் வரலாற்றில் ரத்தம் சொட்ட சொட்ட பதிவாகின. 1778 ஆவத்ராஜா சாய்த்சிங் கிளர்ச்சி, 1779 கோரக்பூர், பெனாரஸ் எழுச்சி மற்றும் ஆந்திர, கர்நாடக ராணுவ அதிகாரிகள் கிளர்ச்சி, 1796 மலபார் பழசிராஜா எழுச்சி, 1809 திருவாங்கூர் வேலுத்தம்பி எழுச்சி, 1831 மம்ப்ராம் தங்கலின் தலைமையில் மாப்ளா கலகம். 1857 முதல் இந்திய சுதந்திரபோர். 1860 இண்டிகோ விவசாயிகள் போராட்டம். 1867 குஜராத் நாய்க்டா மற்றும் முண்டா, மில் பழங்குடியினர் எழுச்சி. 1873 பாட்னா விவசாயிகள் போராட்டம். 1875 மகாராஷ்டிரா டெக்கான் கலகம் ஆகியபோராட்டங்கள் முக்கியத்துவம் பெற்றன. போராட்டங் களை ஒருங்கிணைக்கும் முயற்சிகளும் நடந்தது.வலுவான போராட்டங்களை சிதைக்க, இந்து- முஸ்லிம் வகுப்புவாத துவேஷத்தை பிரிட்டிஷார் திட்டமிட்டு உருவாக்கினர். இத்தகைய செயல் 1905 அக்டோபர் 16 வங்கப் பிரிவினையில் முடிந்தது. விவசாயிகள் மத்தியில் கடும் ஆத்திரத்தை உருவாக்கி யது. இதே 1905 ஜார் மன்னனுக்கு எதிராக ரஷ்ய மக்களின் பெரும் கிளர்ச்சியும், அதையொட்டி 1917 அக்டோபர் புரட்சியின் தாக்கமும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. 1918 ரௌலட் சட்டம், 1919 ஜாலியன் வாலாபாக் படுகொலை 1920 ஒத்துழையாமை இயக்கம்,ஏஐடியுசி உருவாக்கம், வேலைநிறுத்தங்கள், கிளர்ச்சிகள், போராட்டங்கள் ஆகியவை உள்ளூர் அளவிலான போராட்டங்களை ஒருங்கிணைத்து, பரந்துபட்ட போராட்டங்களை நடத்தவேண்டுமென்ற உணர்வையும், நம்பிக்கையையும் உருவாக்கியது.
ஒத்துழையாமை இயக்கம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. 1922 பிப்ரவரி 5 உ.பி. கோரக்பூர் மாவட்டம் சௌரி சௌரா எனுமிடத்தில் விவசாயிகள் போராட்டம் நடந்தது. போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். கோபத்தின் உச்சத்திற்கு சென்ற விவசாயிகள் அங்குள்ள காவல்நிலையத்திற்கு தீ வைத்தனர். 22 போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டனர். இயக்கம் வன்முறைப் பாதைக்கு திரும்பி விட்டதாக கூறி, தேசம் தழுவிய இயக்கத்தை நிறுத்துவதாக காந்தி அறிவித்தார். காந்தியின் இந்த அறிவிப்பு அவர் மீதான நம்பகத்தன்மையை தகர்த்தது. பின்னாளில் ஜவஹர்லால்நேரு தனதுசுயசரிதையில் பின்வருமாறு எழுதினார். சௌரிசௌரா சம்பவத்திற்கு பிறகு திடுமென இயக்கம் நிறுத்தப்பட்டது. காந்தியைத் தவிர இதர முன்னணித் தலைவர்கள் அனைவருக்கும் கஷ்டமாகஇருந்தது. இளைஞர்கள் இயல்பாகவே கோப மடைந்தார்கள். மலைபோல் கொண்டிருந்த நம்பிக்கை கள் தரைமட்டமாகும் போது இப்படித்தான் ஆகும். எது ரொம்ப கஷ்டப்படுத்துகிறது என்றால் இந்த இயக்கம் நிறுத்தப்பட்ட காரணமும் அதன் விளைவுகளும்தான். சௌரி சௌரா அகிம்சாவழிக்கு எதிரானதுதான். ஆனால்எங்கோ ஒரு குக்கிராமத்தில் உணர்ச்சி வசப்பட்ட விவசாயிகள் நாட்டின் விடுதலைக்கான ஒரு பெரும் தேசியஇயக்கத்தை நிறுத்திவிட்டனரே?இதுதான் வன்முறைப் பாதையின் விளைவு என்றால், அஹிம்சாவழிப் போராட்டத்தில், தத்துவத்தில் ஏதோ ஊனமிருக்கிறது...இதையொட்டி 1922 காங்கிரஸ் செயற்குழு நிறைவேற்றிய தீர்மானம் விவசாயிகள் மத்தியில் நம்பிக்கையை தகர்த்தது மட்டுமல்லாமல் மாற்றை உருவாக்கும் சிந்தனையை நோக்கிச் சென்றது. ஜமீன்தார்களுக்கு வாரம் கொடுக்க மறுப்பது என்பது காங்கிரஸ் தீர்மானங்களுக்கு முரணானது என்றும் நில பிரபுக்களோடு எழும் பிரச்சனைகளை சமரசம் மூலம் தீர்வுகாண காங்கிரஸ் அமைப்புகளை கேட்டுக் கொண்டதாய் தீர்மானம் அமைந்தது. விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற ஒரு சொந்த அமைப்பு தேவை என்ற தன்மைக்கும் இட்டுச் சென்றது. 1925 கான்பூரில் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடும், 1929 பகத்சிங் உள்ளிட்ட தோழர்களின் நாடாளுமன்ற குண்டு வீச்சும், அதையொட்டிய காந்தியின் அணுகுமுறையும், 1931 பகத்சிங் தூக்கிலிடப்பட்டதும் மாற்றத்திற்கான தீவிர சிந்தனையை நோக்கிச் சென்றது.
இத்தகைய பல்வேறு விதமான தாக்கங்களின் விளைவாக நிலப்பிரபுத்துவத்தை ஒழிப்பது, குத்தகை காலப்பாதுகாப்பு, வாரத்தை குறைப்பது, கைப்பற்றிய நிலங்களை திரும்ப ஒப்படைப்பது, ஜமீன்தார்கள் விதித்த வரிகளை ஒழிப்பது நிலவரியை குறைப்பது, அடக்குமுறைக்கு முடிவு கட்டுவது போன்ற முழக்கங்களோடு 1936 ஜனவரி 15 அகில இந்திய கிஸான் சபா தோன்றியது. தமிழகத்திலும் போராடிய விவசாயிகளை ஒருங்கிணைத்து 1944 மே 3, 4 தேதிகளில் முதல் மாநில மாநாடு ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின் மன்னார்குடியில் நடைபெற்றது. தலைவராக பி.சீனிவாசராவும் பொதுச் செயலாளராக மணலி. கந்தசாமியும் தேர்வு செய்யப்பட்டனர்.1944-2019 75 ஆண்டுகளில் தமிழக அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்களில் விவசாயிகள் சங்கம் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆண்டைகளிடமும், கோவில்கள் மற்றும் மடங்களின் கட்டுப்பாட்டில் பெரும்பாலான நிலங்கள் இருந்தன. விவசாயிகளின் உழைப்புச் சுரண்டல் பெருமளவு நடைபெற்றது. பொருளியல் ஒடுக்குமுறை மட்டுமல்லாது சமூக ஒடுக்குமுறையும் கோலோச்சியது. பொருளியல் ஒடுக்கு முறைக்கு எதிராகவும், சமூக ஒடுக்குமுறைக்கு எதிராகவும்இணைந்த போராட்டத்தை விவசாயிகள் இயக்கம் நடத்தியது. ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் இவ்வியக்கம் பேரெழுச்சி பெற்றது. தமிழக அக்ரஹார அதிகாரங்களை காலி செய்ததில் விவசாயிகள் சங்கம் நடத்திய குத்தகை வாரப் போராட்டங்களுக்கு பெரும் பங்குண்டு.
தேசம் முழுமையும் விவசாயிகளின் அலை அலையான போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற விவசாயிகளின் நீண்ட நெடும்பயணம் சமீபத்திய பெரும் எழுச்சியாகும். உலகமயக் கொள்கை விவசாயிகளை பெருமளவில் நிலத்திலிருந்து வெளியேற்றியுள்ளது. மறுபுறம் உரிமைக்கான போர்க்குரல்கள் எழுகிறது. நாடாளு மன்றத்தில் விவசாயத்திற்கு தனி நிதிநிலை அறிக்கை என்ற பிரதான கட்சிகளின் அறிவிப்பும் போராட்டங் களுக்கு கிடைத்த முக்கிய வெற்றியாகும். இந்த குரல்களின் மைய ஒருங்கிணைப்பாக செயல்படும் தமிழ்நாடு விவசாயிகள் இயக்கம் உருவாக்கப்பட்டு 75ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.இந்தியாவின் மொத்த நிலப்பரப்பு 32 லட்சத்து 87 ஆயிரத்து 263 சதுர கிலோமீட்டர். இதை ஏக்கரில் கணக்கிட்டால் கூடுதலாக இரண்டு சைபரை இணைக்க வேண்டும். இவ்வளவு பிரம்மாண்ட நிலப்பரப்பில் ஒரு சென்ட் நிலம் கூட சொந்தமில்லாத மக்கள் 135 கோடி யில் 52 கோடி. தான் வாழும் நாட்டில் தனக்கென்று ஒருஇடம் இல்லாத நாட்டில், நாட்டில் உள்ள மக்களுக்கு பொதுவான போதனைகள் அள்ளி அள்ளி வழங்கப்படுகிறது. விழிப்புணர்வு இல்லை, சமூக அக்கறை இல்லை, பொது இடத்தை சுத்தமாக வைத்திருக்கும் எண்ணம் இல்லை என்கிறார்கள். இடஒதுக்கீடுக்கு ஆதரவான குரல்கள் தொடர்ந்து ஒலிக்கட்டும். நில ஒதுக்கீடுக்கு ஆதரவான குரல்கள் எழட்டும். சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் பொருளியல் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியே. வீரம்செறிந்த விவசாயிகள் இயக்கம் வைர ஆண்டில் புத்தெழுச்சி உண்டாகட்டும். புதிய யுகம் படைக்கட்டும்.