புதுதில்லி, ஜூலை 25 - தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக கருத்து தெரிவித்த திரைக்கலைஞர்கள் சூர்யா, ரஜினிகாந்த் ஆகியோரை தமிழக பாஜகவினர் மிரட்டுவதற்கு மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி உறுப்பினர் சு.வெங்கடேசன் எதிர்ப்பு தெரிவித்தார். மக்களவையில் வியாழனன்று கேள்வி நேரம் முடிந்தபிறகு பேசிய அவர் கூறியதாவது: தேசிய கல்விக் கொள்கை 2019 வரைவை விவாதத்திற்காக மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான கால அவகாசம் ஒரு மாதம் மட்டுமே வழங்கப் பட்டது. எதிர்க்கட்சிகள் மற்றும் கல்வியாளர்களின் பெரும் வற்புறுத்தலுக்கு ஏற்ப மேலும் ஒரு மாதம் கருத்துக் கூற அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த வரைவு அறிக்கையின் ஆபத்தான அம்சங்களை திரைக்கலைஞர் சூர்யா சுட்டிக் காட்டினார். நடிகர் சூர்யா வன்முறையைத் தூண்டுவதாக தமிழகத்தைச் சேர்ந்த மத்திய ஆளுங்கட்சி தலைவர் ஒருவர் மிரட்டுகிறார்.
நடிகர் சூர்யாவின் கருத்தை ஆதரித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்தார். உடனடியாக மத்திய ஆளுங்கட்சியைச் சேர்ந்த மற்றொரு தலைவர் ரஜினிகாந்த் குழப்பத்தை உருவாக்குகிறார் என்று சாடியுள்ளார். அனைத்துத் தரப்பினரின் கருத்தையும் கேட்பதற்காகவே வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ள தாக கூறிவிட்டு, எதிர்த்து கருத்து தெரிவிப்பவர்களை மிரட்டுவது என்ன நியாயம்? நீங்கள் கருத்து கேட்கிறீர்களா? அல்லது ஆதரவு திரட்டுகிறீர்களா? என்பதை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் இந்த அவைக்கு தெளிவு படுத்த வேண்டும். கருத்து கேட்பதாக இருந்தால் காதுகளை திறந்து வையுங்கள். சகிப்புத்தன்மையோடு எதிர்த்தரப்பு கருத்துக்களையும் கேட்க முயலுங்கள். இவ்வாறு சு.வெங்கடேசன் பேசினார்.