தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் இயல்பு அளவை விட, 6% அதிகமாக மழை பெய்துள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று (டிச.12), செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், தமிழகம் மற்றும் புதுவையில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டலச் சுழற்சியின் காரணமாக, அடுத்த 24 மணிநேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், அடுத்த 48 மணிநேரத்திற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள உள்மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாடு முழுவதும் கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி முதல் தற்போது வரை, மழை பொழிவின் அளவு 43 செ.மீ. ஆக உள்ளது. இது இயல்பை விட 6% அதிகம். சென்னையைப் பொறுத்தவரை இயல்பு அளவான 68 செ.மீ.க்கு, 58 செ.மீ. மட்டுமே மழை பெய்துள்ளது. இது 14% குறைவாகும். அதே போல், புதுவையில் இயல்பு அளவு 77 செ.மீ.க்கு 54 செ.மீ. மழை கிடைத்துள்ளது. இது 30% குறைவாகும் என்று அவர் தெரிவித்தார்.