tamilnadu

img

விண்ணை முட்டும் மின்சார கொள்முதல்....

2011 ஆம் ஆண்டு அதிமுக அரசு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த போது தமிழக மின்நுகர்வோர்கள் எண்ணிக்கை 2,23,00,000 ஆகும். அப்போதைய மின்சார உற்பத்தி 10,364 மெகாவாட்டாகும். இதில் மத்திய தொகுப்பிலிருந்து பெற்ற 3520 மெகாவாட் அடங்கும். அப்போதைய மின்சார தேவை 12000 மெகாவாட் ஆக இருந்தது. அப்போதே மின்சார உற்பத்திக்கும் மின்நுகர்வோர் தேவைக்கும் இடைவெளி சுமார் 2000 மெகாவாட் ஆக இருந்த போதும் தமிழகம் மிகை மின் மாநிலம் என்ற பறை சாற்றி இடைவெளியை ஈடு செய்ய 72887 மில்லியன் யூனிட் மின்சாரத்தை கொள் முதல் செய்தது என்பதுதான் வரலாறு.

2011 ஆம் ஆண்டில் ஆட்சியில் அமர்ந்த அதிமுக அரசு தமிழகம் மிகை மின் மாநிலம் மட்டும் அல்ல கூடுதலான மின்சாரத்தை உற்பத்தி செய்து மின்சார சந்தையில் விற்பனை செய்ய  போகின்றோம் என வாய்ச் சவடால் அடித்து, கீழ்கண்ட இடங்களில் மின் நிலையங்கள் அமைக்கப் போகின்றோம் என்று அறிவித்தார்கள்.

1.எண்ணூர் அனல் மின்நிலைய  விரிவாக்கம்                             600 மெகாவாட்

2. எண்ணூர் சிறப்பு பொருளாதார அனல் மின் திட்டம்              1320 மெகாவாட் 

3.வடசென்னை அனல் மின் திட்டம்                                                 800 மெகாவாட்

4.உப்பூர் அனல் மின் திட்டம் (2×800)                                                1600 மெகாவாட்            

5.உடன்குடி அனல்மின் திட்டம் (2×660)                                          1320மெகாவாட்

6.குந்தா நீர் மின் திட்டம்                                                                       500 மெகாவாட்

ஆக 6200 மெகாவாட் மின் உற்பத்திக்கு  2012 ஆம் ஆண்டு வாக்கில் திட்டமிட்டார்கள். 8 ஆண்டுக்கு பின்னரும் ஓரிரு திட்டங்கள் தவிர மற்றவை அனைத்தும் துவங்கிய நிலையிலேயே உள்ளதோடு சில திட்டங்களுக்கு மூடு விழா நடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்ற நிலைதான் உள்ளது.

உதாரணத்திற்க்கு எண்ணூர் விரிவாக்க அனல் மின்நிலையம் அமைக்கும் பணி 2014 இல் துவங்கி  2018 இல் பணிகளை முடித்து உற்பத்தியை துவக்கி இருக்க வேண்டும். ஆனால் 2020 ஆன பின்னரும் துவக்க நிலையிலேயே உள்ளது. இம் மின் நிலையத்தை அமைக்க பெல்(BHEL) போன்ற அனுபவம் வாய்ந்த பொதுத்துறை நிறுவனங்களும் வேறு சில  தனியார்நிறுவனங்களும் முன் வந்த போதும் அவர்களுக்கு அப் பணியை வழங்காமல் சிறிதும் பணி அனுபவமும் அற்ற பொருளாதார ரீதியாக மிகவும் மோசமான லாண்கோ நிறுவனத்திற்கு அப்பணியை அளிக்க, அந்த நிறுவனம் பாதியிலேயே அப்பணியை விட்டுச் செல்லும்  நிலை ஏற்பட்டது.இந்த மோசமான அனுபவத்திற்கு பிறகும் கூட, இம் மின் நிலையத்தை அமைக்கபெல் போன்ற நிறுவனங்களுக்கு அளிக்காமல், ஏற்கனவே மேட்டூர் அனல் மின் நிலையம் 2ஆம் நிலை மின்சார நிலையத்தை அமைக்க ஏற்றுக் கொண்ட நாளில் முடிக்காததால் அதற்கான அபராத தொகை விதிக்கப்
பட்ட பிஜிஆர் (BGR) என்ற நிறுவனத்திற்கு எண்ணூர் பணியை அளித்து ஒரு வருடம் கடந்த பின்னரும் பணியை தொடங்காமல் உள்ளது. 

உப்பூர் அனல் மின் திட்டம்
இராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைகுடி கிராமத்தில் ரூபாய் 12000 கோடி செலவில்  1600 மெகாவாட். உற்பத்தி திறன் கொண்ட அனல் மின் நிலையம் அமைக்க அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் 2016 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டதுதான் உப்பூர் மின் திட்டம். நிலம் கையகப்படுத்தலில் ஏற்பட்டுள்ள பிரச்சனை, எரிப்பொருளை கொண்டு வருவதற்கு கூடுதல் செலவாகும் பிரச்சனை போன்றவற்றுக்கு தீர்வு கண்டு திட்டப் பணிகளை துரிதப்படுத்தி முடிப்பதற்கு பதிலாக திட்டத்தை மூடுவதற்காக திட்டமிட்டு அங்குபணியாற்றும் பொறியாளர்கள், ஊழியர்களை கொரோனா தாக்குதல் என்றும் பாராமல்கொடூரமான முறையில் ஊர் மாற்றம் செய்துள்ளது மின்வாரியம்.

ஊசலாடும் உடன்குடி மின் திட்டம்
2007 ல் ஆட்சிக் கட்டிலில் இருந்த திமுக அரசு மின் பற்றாக்குறையை எதிர்கொள்ள தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் 2×800 ஆக 1600 மெகாவாட் திறன் கொண்ட மின்நிலையம் அமைப்பதற்கு திட்டமிட்டு மின்வாரியமும் பொதுத் துறை நிறுவனமான ‘பெல்’ இணைந்து 2009  ல் பணிகளை துவங்கியது. இதற்கிடையில் தமிழகத்தில் 2011 ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அ.தி.மு.க ஆட்சிஅமைந்தவுடன் 2012 ல் முந்தைய அரசு துவங்கிய அனைத்து பணிகளையும் நிறுத்தியது. திட்டத்தில் மாற்றங்களை செய்து- அதாவது 1 அலகு 800 மெகாவாட் என்பதை 660மெகாவாட் என குறைத்து அரசுவிரும்பும் நிறுவனத்திற்கு பணிகள் அளித்து நடைபெற்று வருகின்றன. ஆனால்மின்வாரிய அதிகாரிகள், பொறியாளர்கள் மேற்பார்வையில் பணிகள் நடைபெற்றதை மாற்றி பல கோடி ரூபாய் செலவில் டாடாகன்சல்டன்சி என்ற தனியார் நிறுவனத்தின்மேற்பார்வையில் பணிகள் மேற்பார்வையிடப்படும் என்ற நிலையை மின்வாரியம் உருவாக்கி உள்ளது.  தனியார் நிறுவனம் அமைக்கும் மின் நிலைய பணிகளை வேறு ஒரு தனியார் நிறுவனமே மேற்பார்வை இடும் என்ற நிலை உருவாகும் போது பணியின்தன்மை எப்படி இருக்கும்?

நிலையான அணுகுமுறை இல்லாத காரணத்தால் 2007 ல் துவங்கிய உடன்குடிஅனல் மின்நிலையப் பணிகள் 13 ஆண்டுகள் கடந்த பின்னரும் முடியவில்லை.தமிழகத்தில் பொதுவாக மின்நிலையம் அமைக்கும் பணியில் அரசு அக்கறை காட்டுவதை விட சுய லாபத்தை முன் நிறுத்தி மின்சாரத்தை வெளிசந்தையில் கொள்முதல் செய்வதிலேயே அதிக அக்கறை காட்டுகிறது. தமிழக அரசைப் பொறுத்தவரையில் நிரந்தர தீர்வான தனது உற்பத்தியை அதிகப்படுத்துவதற்கு பதிலாக தனது மின் நிலையத்தையே நிறுத்தச் சொல்லி மின்சார கொள்முதலில் அக்கறை காட்டும் அரசாக உள்ளது  என்பதற்கு கீழ்கண்ட விவரங்களே சான்று:

1.2010 ஆம் ஆண்டு மின்சார கொள்முதல் 72887 மில்லியன் யூனிட். அதற்கானசெலவு ரூ. 17052  கோடி

2.2014 ஆம் ஆண்டு மின்சார கொள்முதல் 94128மில்லியன் யூனிட். அதற்கான செலவு ரூ.29278 கோடி

3. 2016 ஆம் ஆண்டு மின்சார கொள்முதல்  105 728 மில்லியன் யூனிட். அதற்கானசெலவு ரூ. 35692 கோடி

4. 2019 ஆம் ஆண்டு மின்சார கொள்முதல் 113 790 மில்லியன் யூனிட். அதற்கானசெலவு ரூ.39058 கோடி

2018 ஆம் ஆண்டு மின்சார விற்பனை மூலம் வாரியத்திற்கு கிடைத்த வருவாய் ரூ.43686 கோடி. அந்த ஆண்டு மின்சார கொள்முதலுக்காக செலவு செய்த தொகையோ ரூ.39058 கோடியாகும். வாரிய வருமானத்தில் ஒரு பெரும் தொகையை மின்சார கொள்முதலுக்காக செலவு செய்யும் அநியாயத்தை அரங்கேற்றி வருகின்றது. மின்சார கொள்முதலுக்காக ஓராண்டு செலவு செய்யும்தொகையை வைத்தாலே பல ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மின்நிலையத்தை அமைக்க முடியும். ஒரு முறை முதலீடு செய்து மின்நிலையத்தை அமைத்தால் பல ஆண்டுகளுக்கு முதலீடு இல்லாமல் மின்சாரம் கிடைக்கும். ஆனால் ஆண்டுக்கு ஆண்டு பல கோடி ரூபாய் செலவுசெய்து மின்சார கொள்முதல் செய்தால்கிடைக்க வேண்டியவருக்கு கமிஷன்கிடைக்கும்.தனியாரின் கொள்ளைக்கு தான் வழி வகுக்கும்.

கட்டுரையாளர் : எஸ்.எஸ்.சுப்பிரமணியன், முன்னாள் தலைவர், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு)