விவசாயிகளுக்கு பயிர்க்கடன் அவசியமானது. ஆனால் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் பயிர்க் கடன் கேட்டால் தருவதில்லை, தவிர்த்து விடுகிறார்கள். ஏழை, சிறு குறு விவசாயி களுக்கு வங்கிக்கடன் எட்டாக்கனியே. நகைக்கடன் தருகிறார்கள், கடனை கட்ட முடியாதவர்களின் நகைகளை ஏலம் விட்டு விடுகின்றனர். டிராக்டர் கடன்தருகிறார்கள், கட்ட முடியாதவர்களிடம் டிராக்டரை ஜப்தி செய்து கொள்கின்றனர். பொதுவாக கிராமப்புறங்களில் விவசாயிகள் தனியார் கந்துவட்டிக்காரர்களிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்குவது அதிகரித்துள்ளது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தரும் மொத்த கடனில் 18 சதவீதம் வேளாண் துறைக்கு விவசாயிகளுக்கு கடன் தர வேண்டுமென்பது விதி. ஆனால் வங்கிகள் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு விவசாயக் கடன் தருவதில்லை. கொடுக்கிற கடனிலும் பெரும்பகுதியை வேளாண்துறை சார்ந்த தொழில்களுக்கே கொடுக்கின்றனர். இதை வசதிபடைத்தவர்கள், முதலாளிகள், தொழிலதிபர்கள் பெற்றுக் கொள்கின்றனர். இவற்றை விவசாயிகளுக்கு கடன் தந்ததாக வங்கிகள் கணக்கு காட்டு கின்றன.
மிகப்பெரும் மோசடி
தஞ்சை மாவட்டம் திருமாண்டகுடியில் இயங்கி வரும் திருஆரூரான் சர்க்கரை ஆலை, துகிளியில் உள்ள ஸ்ரீஅம்பிகா ஆலை, கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் உள்ள ஸ்ரீஅம்பிகா ஆலை சித்தூரில் உள்ள திரு ஆரூரான் சர்க்கரை ஆலைகள் ஒரே நிர்வாகத்தின் கீழ் உள்ளன. ராம் தியாகராஜன் ஆலையின் உரிமையாளர், அம்பிகா, ஆரூரான் சர்க்கரை ஆலைகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயி கள் பெயரில் கடனை வாங்கி மோசடி செய்துள்ளனர். சுமார் 600 கோடி ரூபாய்க்கு மேல் வங்கிகள் விவசாயிகள் பெயரில் சர்க்கரை ஆலைகளுக்கு கடன் கொடுத் துள்ளன. விவசாயிகளுக்கே தெரியாமல் அவர்கள் பெயரில் கடன் வாங்கி சர்க்கரை ஆலை எடுத்துக் கொண்டது மிகப் பெரும் மோசடியாகும். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள கார்ப்பரேசன் வங்கி, வாங்காத கடனுக்கு விவசாயிகளுக்கு வக்கீல் நோட்டீஸ் 17-7-2018 அன்று அனுப்பியது. அதிர்ந்து போன விவசாயிகள் வங்கிக்கு சென்று விளக்கம் கேட்டனர். கரும்பு வெட்டுக்கூலி கொடுக்க வும் வாகன வாடகை தரவும் கடன் தருமாறு நீங்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் உங்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. திருஆரூரான் சர்க்கரை ஆலை கார்ப்பரேட் கேரண்டி கொடுத்துள்ளது. 10.10 சதவீதம் வட்டி விகிதத்தில் 12 மாதங்களில் திருப்பி செலுத்தும்படி விவசாயிகளுக்கு கடன் கொடுத் தோம். கடனை கட்டாமல் தவணை தவறியதால் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் என்று கூறியுள்ளனர்.
கே.ராமகிருஷ்ணன், கபிஸ்தலம்
கபிஸ்தலத்தை சார்ந்த கே.ராம கிருஷ்ணன் என்கிற விவ சாயிக்கு ஒரு ஏக்கர் நிலம் தான் உள்ளது. இதில் கரும்பு பயிரிட்டு முப்பது டன்கள் வெட்டி ஆரூரான் ஆலைக்கு அனுப்புவார். இவர் 30.10.2014ல் கார்ப்பரேசன் வங்கியில் வங்கிக் கணக்கு துவக்கியதாகவும் இவர் கேட்டுக் கொண்டதன்படி 29.1.2015ல் ரூ.23.5 லட்சம் கடன் கொடுக்கப்பட்டது எனவும், இந்த கடன் தொகையை 31.5.2016ல் ஆரூரான் சர்க்கரை ஆலை வங்கிக்கு செலுத்திவிட்டனர். மீண்டும் ராமகிருஷ்ணன் கடன் கேட்டதன் அடிப்படையில் 6.6.2016 அன்று ரூ.23 லட்சம் கடன் அவருக்கு வழங்கப் பட்டுள்ளதாகவும் அசலும், வட்டியும் சேர்த்து ரூ.28.44 லட்சத்தை ஒரு வார காலத்திற்குள் வங்கிக்கு செலுத்துமாறு கார்ப்பரேசன் வங்கி ராமகிருஷ்ணனுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
ஆர்.குணசேகரன் - கபிஸ்தலம்
கபிஸ்தலத்தை சார்ந்த ஆர்.குணசேக ரன் ரூ.20 லட்சம் கடன் பெற்றதாகவும் வட்டியும் அசலும் சேர்த்து ரூ.25 லட்சம் செலுத்து மாறு வங்கி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆர்.ராஜேந்திரன் - கம்பர்நத்தம்
ஆர்.ராஜேந்திரன் நிலமில்லாத கரும்பு வெட்டும் தொழிலாளி. இவர் பெயரில் ரூ.23 லட்சம் கடன் கொடுத்த தாக கார்ப்பரேசன் வங்கி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நான் கரும்பு வெட்டும் சாதாரண தொழிலாளி என் பெயரில் மோசடியாக கடன் கொடுத்துள்ளனர் என்று தஞ்சை மாவட்ட எஸ்.பியிடம் புகார் அளித்துள்ளார்.
ஏ.கோவிந்தராஜ்- அருந்தவபுரம்
ஏ.கோவிந்தராஜ் என்கிற நிலமற்ற கரும்பு வெட்டும் தொழிலா ளிக்கு கும்பகோணம் கார்ப்பரேசன் வங்கி ரூ.17 லட்சமும், பாப நாசம் பாரத ஸ்டேட் வங்கி ரூ.3 லட்சமும் கடன் கொடுத்ததாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளன. 11.08.2018 அன்று கும்பகோணம் கார்ப்ப ரேசன் வங்கி அனுப்பிய வக்கீல் நோட்டீசில் 212 விவசாயிகள் பெயரை குறிப்பிட்டு இவர்களுக்கு ரூ.45 கோடி வெட்டுக்கூலி கொடுப்பதற்கு கடன் கொடுத்ததாகவும் அரூரான் சர்க்கரை ஆலை கார்ப்பரேட் கேரண்டி கொடுத்திருப்பதாகவும், அசலும், வட்டியும் சேர்த்து 46 கோடியே எண்பத்தி ஒன்பது லட்சம் ரூபாயை வங்கிக்கு செலுத்து மாறு விவசாயிகளுக்கு தனித்தனியாக நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதே போல துகிளியில் உள்ள ஸ்ரீஅம்பிகா சர்க்கரை ஆலை ஆடுதுறையில் உள்ள கார்ப்பரேசன் வங்கியில் விவசாயிகள் பெயரில் கடன் பெற்றுள்ளது. செருகுடி கிராமத்தை சார்ந்த டி.கோவிந்தராஜ் என்கிற விவசாயி 5.12.2015ல் ரூ.15 லட்சம் கடன் பெற்றுள்ளதாகவும் 17.8.2018 வரை அசலும் வட்டியும் சேர்த்து ரூ.20.60 லட்சம் வங்கிக்கு செலுத்துமாறு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதே போல கடலூர் மாவட்டம் சித்தூரில் உள்ள ஆரூரான் சர்க்கரை ஆலை மற்றும் பெண்ணாடத்தில் உள்ள ஸ்ரீஅம்பிகா சர்க்கரைஆலை ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பெயரில் பல வங்கிகளில் கடனை வாங்கி உள்ளனர். வாங்கிய கடனில் ஒரு பகுதியை ஆலை நிர்வாகம் வங்கிக்கு செலுத்தியதாகவும் ஒரு பகுதி கடன் இதுநாள் வரை கட்டவில்லை என்றும் வட்டியுடன் கடனை வங்கிக்கு செலுத்துமாறு வங்கிகள் விவசாயிகளுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி யுள்ளன.
கே.கொளஞ்சிநாதன் - கூடலூர்
கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சி பாரத ஸ்டேட் வங்கியில் கரும்பு வெட்ட கடன் கேட்டு 17.3.2017ல் விண்ணப்பித்ததாகவும் அன்றே உங்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் கடன் வழங்கினோம். இதில் ரூ.1.55 லட்சம் பாக்கி உள்ளதாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
சி.சீனிவாசன் - சேவூர்
விழுப்புரம் மாவட்டம் கழுதூர் கிராமத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் சேவூர் கிராமத்தை சேர்ந்த சி.சீனிவாசன் உட்பட 28 விவசாயிகள் பெயரில் கடன் நிலுவை உள்ளதாகவும் வட்டியுடன் 22 லட்சத்து 69 ஆயிரத்தை வங்கிக்கு செலுத்துமாறு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி யுள்ளனர்.
கரும்பு பதிவுக்கு என வாங்கிய கையெழுத்து...
கடலூர், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஆறா யிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பெயரில் கடன் வாங்கி ஸ்ரீஅம்பிகா, திரு ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் தன் சொந்த தேவைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. விவசாயிகள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் காவல்துறை விசாரணை செய்து வருகிறது. ஆலை நிர்வாகம் விவசாயிகளிடம் ஆவணங்களில் கையெழுத்துக்களை பெற்று வங்கிகளுக்கு கொடுத்துள்ளார்கள். இது குறித்து விவசாயிகளிடம் கேட்டால் கடன் வாங்குவதற்காக என்று கையெ ழுத்துக்கள் கேட்கவில்லை. கரும்பு பதிவு செய்திட வேண்டும். வங்கியில் புதிய கணக்கு துவங்கிட வேண்டும் என்று கையெழுத்து கேட்டார்கள். அதற்காக கரும்பு கோட்ட அலுவலகத்தில் வைத்து கையெழுத்துக்களை போட்டதாக விவசாயிகள் கூறுகின்றனர். பல விவசாயிகளிடம் அவர்களின் வீட்டிற்கு கரும்பு அலுவலர் சென்று ஆவணங்களில் கையெழுத்து பெற்றுள்ளனர். சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளிடம் பொய் சொல்லியே கையெழுத்து பெற்று அவர்கள் பெயரில் கடன் வாங்கி மோசடி செய்துள்ளது. விவசாயிகள் பெயரில் கடன் கொடுத்ததாக ஆவணங்களை உருவாக்கிக் கொண்டு சர்க்கரை ஆலைகளுக்கு அந்தப் பணத்தை அப்படியே கொடுப்பதற்கு வங்கி அதிகாரிகள் உடந்தையாக செயல்பட்டுள்ளனர். வங்கியின் ஆவணங்களின்படி கரும்பு விவசயிகளுக்கு கடன் கொடுத்ததாக உள்ளது.
இந்த மோசடி குறித்து விசாரித்து நட வடிக்கை எடுத்திடக் கோரி மாநில சர்க்கரை துறை ஆணையர் அனு ஜார்ஜ் இடம் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் 31.7.2018 அன்று மனு கொடுத்தோம். மாநில சர்க்கரை துறை ஆணை யர் கடலூர் மற்றும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர்களுக்கு விசாரணை செய்திடுமாறு கடிதம் அனுப்பினார். அதன்படி விசாரித்து சிவங்கை மாவட்ட வங்கி அதிகாரிகள் இனிமேல் விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப மாட்டோம் என்றனர். இது போதாது, மோசடி செய்த சர்க்கரை ஆலைகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்திட வேண்டு மென தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். 15.11.2018ல் நெல்லிக்குப்பத்தில் நடைபெற்ற தனியார் சர்க்கரை ஆலைகளின் கரும்பு விவசாயிகள் கோரிக்கை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி மாநில அரசுக்கு அனுப்பி வைத்தோம். மாநில தொழில்துறை அமைச்சர் சம்பத், (21.2.2019 அன்று) மாநில சர்க்கரை ஆணையர் ரீட்டா மேத்தா தாக்கூர் ஆகியோரிடம் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மனு அளித்தோம். ஆனால் மாநில அரசு, மோசடி குறித்து முறையான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வழக்குப் பதிவும் கடிதங்களும்
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பா ளரிடம் சித்தூர் ஆரூ ரான் சர்க்கரை ஆலை விவசாயிகள் கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு திருஆரூ ரான் உரிமையாளர் ராம் தியாகராஜன் மற்றும் ஆலை நிர்வாகிகள், எஸ்.பி.ஐ வங்கி அதிகாரிகள் பெயரில் 406, 420, 468, 469 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பா ளரிடம் விவசாயிகள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு விசாரித்து வருகிறது. திருஆரூரான் சர்க்கரை ஆலை விவசாயிகள் பெயரில் பெறப்பட்ட கடன்களை கார்ப்பரேட் கேரண்டி நாங்கள் கொடுத்துள்ளதால் மொத்த கடன்களையும் சர்க்கரை ஆலை பெயரில் மாற்றி விடுமாறு உயர் வங்கி அதிகாரிகளிடம் கேட்டுள்ளோம். அடுத்த 45 நாட்களில் கடன் தொகையை ஆலை பெயரில் மாற்றிக் கொள்கிறோம். விவசாயிகள் பேரில் மேல் நடவடிக்கை வராமல் பார்த்துக் கொள்கிறோம் என மாவட்ட குற்றப்பிரிவுக்கு எழுத்துப்பூர்வ கடிதத்தை ஆரூரான் சர்க்கரை ஆலை கொடுத்துள்ளது. ஆரூரான் சர்க்கரை ஆலை பொறுப்பேற்றுக் கொண்டதால் இனி விவசாயிகளை தொந்தரவு செய்ய மாட்டோம் என்று கும்பகோணம் கார்ப்பரேசன் வங்கி மேலாளர் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பிக்கு கடிதம் கொடுத்துள்ளார்.
வழக்கமானது தான்
சர்க்கரை ஆலை கள் வங்கிகளில் விவசாயிகள் பெயரில் கடன் வாங்குவது வழக்கமானது தான். அம்பிகா, ஆரூரான் மட்டும் அல்ல; தரணி, சக்தி, ராஜஸ்ரீ போன்ற தனியார் சர்க்கரை ஆலைகளும் விவசாயி கள் பெயரில் கடன் வாங்கி பயன்படுத்திக் கொள்கின்றன. நாடு முழுவதும் இது நடக்கிறது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். வங்கியில் உள்ளது மக்களின் பணம், அதை விவசாயிகள் பெயரில் கடன் கொடுத்ததாக காட்டி, சர்க்கரை ஆலைகள் பெற்றுக் கொண்டு அப்பணத்தை கட்டாமல் மோசடி செய்தது பல ஆயிரம் கோடி ரூபாய் வரும் போல தெரிகிறது. விவசாய கடன் தள்ளுபடி என்று அரசு அறிவித்தால் தனியார் சர்க்கரை ஆலைகள் தான் பயன்பெறுவார்கள். விவசாயிகளுக்கு பலன் இல்லை. இப்படி எத்தனை ஆண்டுகளாக நடக்கிறது. எத்தனை ஆண்டுகள் தனியார் சர்க்கரை ஆலைகள் பயன்பெற்றுள்ளனர் என்பது முழுமையான விசாரணையில் தான் வெளிப்படும். இது மோசடியா இல்லையா என்பது குறித்தே பெரும் விவாதம் நடைபெறுகிறது. காவல்துறை அதிகாரிகள் சட்ட வல்லுநர்களிடம் கருத்துக் கேட்டு வருகின்றனர். அம்பிகா ஆலை உரிமையாளர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுத்திடக் கோரி 18.5.19 அன்று பெண்ணாடத்தில் அம்பிகா ஆலை முன்பு கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்ட மும், 30.5.19 அன்று பாபநாசத்தில் ஆரூரான் ஆலை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுத்திடக் கோரி ஆர்ப்பாட்டமும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்றது. இந்த மோசடி குறித்து மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரித்திட தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று மாநில முதலமைச்சருக்கு 22.5.2019 அன்றும், மாநில சர்க்கரைத் துறை ஆணையருக்கு மோசடி செய்த தனியார் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், கரும்பு பண பாக்கியை உடனடியாக பெற்றுத்தரக்கோரியும் 31.05.2019 அன்றும் மனு அளிக்கப்பட்டது. அம்பிகா, ஆரூரான் சர்க்கரை ஆலை கள் விவசாயிகளிடம் 2017-18க்கு கொள்முதல் செய்த கரும்புக்கு மத்திய அரசு விலையில் FRP 82 கோடி ரூபாயும், 2013-14 முதல் 2016-17 வரையிலான 4 ஆண்டு காலத்திற்கு SAP 122 கோடி ரூபாயும் பாக்கி வைத்துள்ளனர். கரும்பு ஏற்றி வந்த லாரிகளுக்கு வாடகை பாக்கி வைத்துள்ளனர். பல மாதங்களாக ஆலைத் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. கரும்பு கட்டுப்பாடு சட்டம் 1966ன் படி 14 நாட்களுக்குள் கொடுக்க வேண்டிய கரும்பு பணத்தை ஆண்டுக்கணக்கில் தராமல் விவசாயிகளை அலைக்கழித்து வருகின்றன.
சர்க்கரை ஆலைகளுக்கு மத்திய அரசின் சலுகைகள்
கரும்பு பணப் பாக்கியை கொடுப்ப தற்கு என்று தேசியமய மாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கடந்த ஆறு ஆண்டுகளில் சர்க்கரை ஆலைகளுக்கு மத்திய அரசு ரூ.24000 கோடி கடனாக கொடுத்துள்ளன. இந்த கடனுக்கான வட்டியில் ஒரு பகுதியை மத்திய அரசே செலுத்துவதாக அறிவித்தது. இது தவிர பல்வேறு வகைகளில் வங்கிகளில் கடன் பெற்று தனியார் ஆலை முதலாளிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர். சர்க்கரை உற்பத்தி மட்டும் இல்லாமல் எத்தனால், மின்சாரம் உற்பத்தியிலும் லாபம் ஈட்டுகின்றனர். உபபொருட்களின் உற்பத்தியில் கிடைக்கும் லாபத்தில் கரும்பு விவசாயிகளுக்கு ஆலைகள் பங்கு தருவதில்லை. சர்க்கரை ஆலை முதலாளிகளுக்கு சாதகமாக மாநில அரசின் கரும்புக்கான பரிந்துரை விலை அறிவிப்பை (State Advised Price) கைவிடச் செய்து தற்போது வருவாய் பங்கீட்டு முறைப் படி கரும்பு விலை நிர்ணயிக்கும் சட்டத்தை கொண்டு வந்து விட்டனர். 8.5 பிழிதிறனுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டு வந்ததை படிப்படியாக மாற்றி 10 பிழிதிறனுக்கு விலை நிர்ண யிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் தனியார் சர்க்கரை ஆலைகள் 2013-14 முதல் 2016-17 வரை மாநில அரசு அறிவித்த பரிந்துரை விலையை விவசாயிகளுக்கு தரவில்லை. ரூ.1217 கோடி பாக்கி வைத்துள்ளனர். 2004 முதல் 2009 வரையில் தர வேண்டிய லாபப்பங்குத் தொகை ரூ.240 கோடியை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தனியார் ஆலைகள் தரவில்லை. 2011ல் 22 லட்சம் டன்களாக இருந்த சர்க்கரை உற்பத்தி தமிழ்நாட்டில் தற்போது 9 லட்சம் டன்களாக குறைந்துவிட்டது. சர்க்கரை உற்பத்தி ஏன் குறைந்தது என்பதை பற்றி மாநில அரசு ஆய்வு செய்ய வேண்டும். இத்தகு நிலையில் தான் தனியார் சர்க்கரை ஆலை முதலாளிகள் விவசாயிகள் பெயரில் விவசாயிகளுக்கே தெரியாமல் வங்கிகளில் கடனை பெற்று மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து மாநில அரசு இதுவரை வாய் திறக்கவில்லை. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில், தமிழகத்தின் பல மாவட்டங்களில், பல ஆயிரம் விவசாயிகள் பெயரில் தனியார் சர்க்கரை ஆலை முதலாளிகள் கடன் பெற்று மோசடி செய்துள்ளதை மத்திய புலனாய்வுத் துறை விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட வேண்டும்.
கட்டுரையாளர் : பொதுச்செயலாளர், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம்