tamilnadu

img

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தடை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இந்திரா காந்தி உள்பட 4 ஆசிரியர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத தங்களைப் பணி நீக்கம் செய்யக் கூடாது என்று தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், "தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்காக சுமார் 60 ஆயிரம் பேர் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால், மனுதாரர்கள் வாய்ப்புகள் கிடைத்தும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் உள்ளனர்.

எனவே, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல், ஆசிரியர்களாகப் பணியாற்றி வருபவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி, அவர்களிடம் விளக்கம் பெற்று, சட்டப்படி தகுந்த உத்தரவை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும்" என்று கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து ஆசிரியர்கள் பலர் மேல்முறையீடு செய்துள்ளனர். அதில், தகுதித் தேர்வு அறிமுகப்படுத்தி 9 ஆண்டுகளில் ஆண்டுக்கு இரண்டு முறை என 18 தேர்வுகள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. மற்ற மாநிலங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக தெளிவான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுபோன்ற அரசாணை தமிழகத்தில் பிறப்பிக்கப்படவில்லை.

மத்திய அரசு சார்பில் தேசிய அளவில் ஆண்டுக்கு இரு முறை தகுதித் தேர்வு நடத்தப்பட்டாலும், அந்தத் தேர்வில் தமிழக ஆசிரியர்களால் கலந்துகொள்ள முடியாது. இதைப் புரிந்துகொள்ளாமல், தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென்று கூறியிருந்தனர். 

இந்த வழக்கு நீதிபதிகள் கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் வருகிற ஜூன் மாதம் நடைபெறக்கூடிய தகுதித் தேர்வில் பங்கேற்க வேண்டும். மேலும் அவர்கள் மீது பணி நீக்க நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டனர்.