tamilnadu

img

தீவிரமடைந்தது பருவமழை... பேரிடர் மேலாண்மை எச்சரிக்கை....

சென்னை:
தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய துணைத் தலைமை இயக்குனர்  பாலசந்திரன் திங்களன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மிகக் கனமழையும், 15 மாவட்டங்களில் கன மழையும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 18 செமீ மழையும், காஞ்சிபுரத்தில் 16 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கடலூர், மயிலாடுதுறை, நாகை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிகக் கனமழையும், விழுப்புரம், தஞ்சை, நெல்லை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், மதுரை, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, சிவகங்கை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும். சென்னையில் விட்டுவிட்டு கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தூத்துக்குடியில்  90 நிமிடங்களில் 100 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது.

அறிவுறுத்தல்
தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பொதுமக்களுக்கு தமிழக பேரிடர் மேலாண்மை அமைப்பு சில அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் கனமழை தொடர்வதால் பழைய கட்டிடங்களில் தங்குவதோ, அருகில் செல்லவோ வேண்டாம்.பழைய கட்டிடங்களில் தங்கி இருப்பவர்கள் உடனடியாக வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவ்வாறு கூறியுள்ளது.