கடந்த சில நாட்களில் ஒரு நாள் நான் பயணத்திற் கிடையே ஒரு நூலகத்திற்குச் சென்று புதிதாக வெளிவந்த புத்தகங்களை எடுத்து வெறுமனே பக்கங்களைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். மிக முக்கியத்துவத்துடன் முன்வரிசையில் வெளியிடப்பட்டுள்ள ஒரு புதிய புத்தகம் அப்போதுதான் கண்ணில் பட்டது. இந்தியாவின் முக்கியமான இந்துத்துவப் பிரமுகர்களில் ஒருவர் எழுதிய புத்தகம் அது. உலகப் பிரசித்திப் பெற்ற புத்தக வெளியீட்டாளர்களாகிய பென்குவின் புக்ஸ்-ஸின் இந்தியக் கிளைகளில் ஒன்றின் வெளியீட்டாளர் அந்நூலை வெளி யிட்டிருந்தார்.‘வலதுசாரித் தேசியத்தின் வரலாற்றையும் அதன் தத்துவ இயலையும் குறித்து விவாதிக்கிற புத்தகம் இது’ என்று முகப்பு அட்டையிலேயே அறிவிக்கப்பட்டிருந் தது. புத்தகத்தைக் கையில் எடுத்துப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தேன். நூலாசிரியரின் பொதுவான நீண்ட முகவு ரைக்கு அடுத்து பிரபல சிந்தனையாளர்களின் பெயர்களை முதலில் கவனித்தேன். பங்கிம்சந்திர சாட்டர்ஜி, விவேகா னந்தர், அரவிந்தகோஷ் முதலானோரின் பெயர்கள் இருந்தன. தொடர்ந்து பார்த்தபோது வேறு சிலரின் பெயர்க ளையும் கண்டேன். அவர்கள் சாவர்க்கர், ஏ.பி.வாஜ்பாய்...கடைசியாக குருமூர்த்தியின் பெயர்.
தேசப் பிதாவையே கூட ...
அது, இந்தியாவின் புதிய அரசியல் காலநிலையை வெளிப்படுத்துகிற புத்தகம் என்று எனக்குத் தோன்றியது. விவேகானந்தரும் சாவர்க்கரும் ஒரேமாதிரியான அரசியல் சிந்தனையின் பிரதிநிதிகள் என்றும், அந்த அரசியல் சிந்தனைதான் இந்திய தேசியத்தின் அடிப்படை என்றும் சொல்லுகிறது அந்தப் புத்தகம். அந்தச் சிந்தனையில் நவீன தாராளமயப் பொருளாதாரத் தத்துவத்தின் மற்றும் கார்ப்பரேட் மூலதன நலன்களின் கண்ணோட்டத்தையும் ஒன்றிணைத்து வலதுசாரி தேசியவாதத்தின் சமகாலச் சித்திரத்தை அந்தப் புத்தகம் காட்சிப்படுத்துகிறது. வரவிருப்பது சூத்திரரின் ஆட்சி என்றும், பசியோடு இருப்பவனிடம் மதத்தைப் பற்றிப் பேசுவது நகைப்புக்குரி யது என்றும் அறிவித்த சுவாமி விவேகானந்தர், மதத்தை அடிப்படையாகக் கொண்ட தேசியவாதத்தின் மற்றும் நவீன தாராளமய மூலதன நலன்களின் முன்னோடியாக முன் நிறுத்தப்படுகிறார். தேசியவாத அரசியலுக்கான புதிய சந்தர்ப்பம் பிறப்பெடுத்ததன் அடையாளம் இதைவிடச் சிறந்த முறையில் வேறொன்றைக் காணமுடியாது அல்ல வா? இந்துத்துவா படுகொலை செய்த தேசப்பிதாவையே இந்துத்துவ தேசியத்தின் தலைவர் என்று அவர்கள் முன்வைக்கிற காலம் அவ்வளவு தூரத்தில் இல்லை. ஒரு புதிய அரசியல் கட்டம்
இடதுசாரிகள் தங்களின் செயல் திட்டங்களை உணர்வுப்பூர்வமாக மறுசீரமைக்க வேண்டும் என்பது முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒரு தேவையாகும். அத்த கைய மறுசீரமைப்பு மூலமாக மட்டுமே இந்திய இடதுசாரி களுக்கு தேர்தல் அரசியலில் அதன் அடித்தளத்தை விரிவாக்க முடியும். இந்தியா ஒரு புதிய அரசியல் கட்டத்தை நோக்கிச் செல்லு கிறது. நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வலதுசாரிகள் பெற்ற வெற்றி இந்திய அரசியலின் பாதையை இதற்குள் புதிய திசைக்குக் கொண்டுபோய்விட்டது. ஜனநாயகம், சமூக நீதி, சமவாய்ப்பு முதலானவை அரசியல் செயல்பாட்டின் மையத்திலிருந்து பெரும்பாலும்-முழுமையாகக்கூட-பின் வாங்கியிருக்கிறது. இதற்கு மாறாக மதரீதியான தேசியமும், மதவாதமும், கார்ப்பரேட் மூலதன நலன்களும் கைகோர்க் கிற புதிய நிலைமை முன்னுக்கு வந்துள்ளது. பிஜேபிக்குக் கிடைத்துள்ள பெரும் வெற்றியும், இடதுசாரி களுக்கும் சோஷலிச மற்றும் மதச்சார்பற்ற இயக்கங்களுக் கும் ஏற்பட்ட தோல்வியும் இந்தியாவின் எதிர்கால அரசியல் வாழ்வைக் குறித்த பலவித விளக்கங்களுக்கு வழிதிறந்துள் ளது. வலதுசாரிகளுக்கு உலகெங்கும் ஏற்பட்டுக்கொண்டி ருக்கிற புத்துயிர்ப்பின் பகுதியாக இதைப் பார்ப்பவர்கள் முதல், இது தாராள ஜனநாயகக் கண்ணோட்டத்தின் மற்றும் இடதுசாரி அரசியலின் முடிவு என்று கூறுகிறவர்கள்வரை இக்கூட்டத்தில் உள்ளனர். மதவாதத்திற்கும் பாசிச அரசிய லுக்கும் இவை போன்ற மற்றவற்றுக்கும் எதிரான போராட் டங்களையும் எதிர்ப்புகளையும் நிறுத்திவிட்டு புதிய வழி களைக் கண்டறிய வேண்டுமென்று பலர் இடதுசாரிகளிடம் சொல்கிறார்கள். இந்திய மத்தியதர வர்க்கத்தின், மற்றும் மூலதனச் சக்திகளின் அபிலாசைகளை உள்வாங்காமல் இடதுசாரிகளால் முன்னோக்கிச் செல்ல முடியாது என்று அவர்கள் கூறுகிறார்கள். இதற்கு உதவுகிற உணர்வுப்பூர்வ மான நிலைபாடுகளை இடதுசாரிகள் ஏற்கவேண்டுமென்ற உபதேசங்களை அவர்கள் இடதுசாரிகளுக்குத் தாராளமாக வழங்குகிறார்கள்.
ஜனநாயகம் என்பது வெறும் பெரும்பான்மை அல்ல
இடதுசாரி செயல்திட்டத்தில் மூன்று விஷயங்களுக்குப் பெரும் முக்கியத்துவம் உண்டு. அதில் முதலாவது ஜனநாய கம் நிலைத்திருப்பது. ஜனநாயகம் என்பது அடிப்படையில் பல்வேறுபட்ட மக்கள் ஒன்றுபட்டு வாழ்வதும் அவர்களுக்கி டையே ஒத்துழைப்புமாகும். அதுவல்லாமல் வெறும் பெரும்பான்மை அல்ல. அரசியல் நிர்ணய சபையின் விவாதத்தில் இந்திய ஜனநாயகம் எதிர்கொள்ளவிருக்கிற பெரும் ஆபத்துகள் குறித்து பேசுகிறபோது அம்பேத்கர் சுட்டிக்காட்டிய ஒரு விஷயம் இங்கு முக்கியமானதாகும். இந்தியாவில் அரசியல் பெரும்பான்மை என்பது மதவாதப் பெரும்பான்மையாக பரிணமிக்கிற வாய்ப்பு உண்டு என்கிற விஷயத்தையே அம்பேத்கர் குறிப்பிட்டார். அரசியல் பெரும்பான்மை என்பது பொதுவான சில கருத்துக்க ளை முன்னிறுத்தி வெவ்வேறு பிரிவினர் ஒன்றுபட்டு நிற்பதன் மூலம் உண்டாவதாகும். மதவாதப் பெரும்பான்மையோ, மத ரீதியான பெரும்பான்மைச் சிந்தனை வெவ்வேறு பிரிவு மக்களைக் கீழடக்குவதன் மூலம் நடைமுறைக்கு வருவதா கும். சமூக, பொருளாதார ரீதியிலான ஜனநாயகத்தைக் கைவிட்டும், அரசியல் ஜனநாயகத்தை மதத்தின் அடிப்படை யிலான பெரும்பான்மைக்கு உட்பட்டதாக மாற்றியும், ஜன நாயகத்தையே அர்த்தமற்றதாக்குகிற ஒன்றாக மத ரீதியான பெரும்பான்மை இருக்கும் என்று அம்பேத்கர் சுட்டிக்காட்டியிருந்தார். இந்தியாவில் இன்று நடப்பது வேறொன்றுமல்ல; சமூகநீதி, பொருளாதார நீதி ஆகியவைதான் ஜனநாயகத் தின் அடிப்படை என்கிற கண்ணோட்டமே அரசியல் செயல் பாட்டிலிருந்து அகற்றப்பட்டிருக்கிறது. பெரும்பான்மைக்கு இசைவாக நடந்துகொள்கிற அரசு இயந்திர நடவடிக்கைதான் ஜனநாயகம் என்ற கருத்து முற்றிலுமாக வலுப்பெற்றிருக்கி றது. பல்வேறுபட்ட மக்களிடையே ஒற்றுமை என்கிற கருத்தி னை முழுமைப்படுத்துவதற்கு உதவுகிற அரசியலமைப்பு நிறுவனங்கள் படிப்படியாகப் பலவீனப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அம்பேத்கர் சுட்டிக்காட்டிய அடிப்படை யான திருப்பத்திற்கு இந்திய அரசியல் வாழ்க்கை இலக்காகிக் கொண்டிருப்பதன் அடையாளங்கள்தான் இவையெல்லாம். விவேகானந்தரையும் சாவர்க்கரையும் ஒன்றாக மாற்று கிற அரசியல் தந்திரம் முதல், ஒரு தேசம், ஒரு தேர்தல் என்கிற புதிய முழக்கம்வரை ஜனநாயகத்திற்கு எதிரானவை என்ப தற்கான சான்றுகளாகும். இதற்கு எதிராக ஜனநாயகம் என்கிற கொள்கையின் அடிப்படைக்காக உறுதியுடன் செயல் படுவது என்பதே இடதுசாரி அரசியல் நிலைபாட்டின் மிக முக்கியமான அம்சமாகும். உலகெங்கும் அரங்கேறுகிற வலதுசாரிமயத்திற்கு எதிரான அரசியல் தடையின் மையம் வேறொன்றாக இருக்க முடியாது.
பொருளாதார நீதிக்கான போர் முகம்
இரண்டாவது அம்சம் பொருளாதார நீதிக்கான போராட் டங்களாகும். கார்ப்பரேட் மூலதன சக்திகளுக்கு உதவுகிற அரசியல் நடைமுறையை நோக்கி அரசாங்க நிர்வாகம் செல்கிற காட்சி தெட்டத் தெளிவாக உள்ளது. மூலதனத்திற் கும் அரசுக்குமிடையேயான முழுமையான ஒருங்கிணைப் பே பாசிசம் என்று முசோலினி பாசிசத்தை விளக்கியிருக்கி றார். இந்தியாவில் அதன் வெளிப்படையான தோற்றம் தினந்தோறும் வாழ்க்கையின் பல்வேறு அனுபவங்கள் மூலமாகத் தெரிகிறது. நாட்டின் பாதிக்கு அதிகமான பிரதேச மும் அங்கு வாழும் மக்களும் கடும் வறட்சியில் சிக்கிய அதே ஆறுமாத கால அளவில் இந்தியாவின் பெரும் பணக்காரர்க ளாகிய ஆறு பேரின் சொத்து மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்திருக்கிறது! பொருளாதார நீதி எவ்வளவு பெரிய கானல் நீராக மாறிக்கொண்டிருக்கிறது என்பதையே இது தெளிவாக்குகிறது. பொருளாதார நீதிக்கான போர்முகத்தைத் திறந்துவைக்காமல் நமது ஜனநாயகம் உண்மையில் ஒரு அடிகூட முன்னோக்கிச் செல்லமுடியாது.
மதத்தை அணுகுவது எப்படி?
மூன்றாவது அம்சம், மதவாழ்க்கையை ஜனநாயக மயப்படுத்துவதற்கான முயற்சிகளைப் பற்றியதாகும். பிற மதத்தின் மீதான துவேஷத்தை அடிப்படையாகக் கொண்ட தீவிர வெறிஉணர்வு கொண்டதாக மதத்தை மாற்றி அமைக்க வும், அதை அரசியல் நடவடிக்கையின் அடிப்படையாக ஆக்க வுமே மதவாதச் சக்திகள் எப்போதும் முயற்சித்துவந்துள்ள னர். அதில் அவர்கள் பெற்ற வெற்றியைத்தான் நாம் இப்போது பார்க்கிறோம். மதத்தை வெறுமனே ஒதுக்குகிற தர்க்க ரீதியான நிலைபாடுகள் மூலமாகவோ அல்லது வெறும் அறிவார்ந்த ஆய்வுகள் மூலமாகவோ சொற்போர் நிகழ்த்த முடிகிற விஷயமல்ல இது. மத அனுபவத்தை ஒரு பக்கம் ஒழுக்க நெறிகள் சம்பந்தப்பட்டதாகவும், மறுபக்கம் வரலாற்று ரீதியான ஸ்தாபனங்களில் ஒன்றாகவும் மதிப்பிட்டு விரிவான சொற்போர் மூலம் மதவாழ்க்கையை அணுகு வதே இதற்கான தீர்வுக்கு வழி. நீண்ட, பொறுமையான முயற்சி இதற்கு அவசியம். இடதுசாரிகளின் அரசியல் செயல்திட்டத்தைத் தவிர இத்தகைய ஓர் அணுகுமுறை வேறு எங்கும் இல்லை. இந்தியா என்கிற நவீனக் கருத்திய லும், அதைப் பின்பற்றிய தேசமும் நடைமுறைக்கு வந்த தற்கும், மதம் குறித்த பன்முகத்தை அடிப்படையாகக் கொண்ட கண்ணோட்டத்திற்கும் பெரும் பங்கு உண்டு. முதலில், பழங்காலப் பழக்கவழக்கங்களைக் கொண்ட ஆச்சார ரீதியான தீவிர மதத்தை முன்வைக்கவும், தேசம் என்கிற கருத்தியலின் அஸ்திவாரமாக அதை உறுதிப்படுத்த வுமான முயற்சிதான் இப்போது நடக்கிறது. ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட புத்தகங்களும் மற்றவையும் செய்வது இதுதான். மதவாழ்க்கையைப் பற்றிய பல்வேறு மதிப்பீடுக ளையும் மதத்தீவிரத்தின் ஒற்றை அடுக்கில் சேர்க்கவே மதவாதம் முயற்சி செய்கிறது. அதற்கு எதிராக மதத்தினுள்ளே இருக்கிற பன்முகங்களை வெளிக்கொணர்ந்து அவற்றை ஜனநாயகப்படுத்துவதற்காக இடதுசாரிகளின் அதிக அள விலான முயற்சி இந்திய நிகழ்கால அரசியல் வாழ்க்கைக்கு இன்று மிக முக்கியமானதாகத் தேவைப்படுகிறது. நிச்சயமாக இந்த விஷயத்தை நிறைவேற்றுவது எளி தானதல்ல- முக்கியமாக தேசத்தின் வாழ்வும் ஜனநாயகக் கருத்தியலும் ஆபத்தான மாற்றங்களைச் சந்திக்கிற இந்தக் காலத்தில் இது எளிதான விஷயமல்லதான். என்றாலும், இதன் மூலமாக அல்லாமல் இந்தியா என்கிற கருத்திய லையோ, ஜனநாயக ரீதியிலான சமூகக் கருத்தியலையோ எவராலும் உயர்த்திப் பிடிக்க இயலாது. மேலும், இடதுசாரி களின் அடிப்படையான முக்கியத்துவமும் வேறு எவரிடத்திலும் இல்லை.
கட்டுரையாளர்: சுனில் பி.இளயிடம் கேரளத்தில் பிரபல எழுத்தாளர்; கலாச்சார விமர்சகர்; நூலாசிரியர்; மார்க்சிசம், பின் நவீனத்துவம் முதலானவைப் பற்றி பல நூல்கள் எழுதியுள்ளார். கேரள சாகித்ய அகாடமி விருது, லலிதகலா அகாடமி விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்; மகாபாரத்தின் கலாச்சார வரலாற்றைப் பற்றிய சொற்பொழிவும் நிகழ்த்தியுள்ளார்.
இவர் மலையாள நாளிதழ் தேசாபிமானியில் எழுதிய கட்டுரை இது.
தமிழாக்கம்: தி.வரதராசன்