tamilnadu

img

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர்... 125 ஆண்டுகள் நிறைவு...

1790-ஆம் ஆண்டு மார்ச் 6-ஆம் தேதி சென்னை மாகாணத்தின் மதுரை மாவட்டம் உருவானது. ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் மாவட்ட ஆட்சியாளராக ஏ.மிக்லட் நியமிக்கப்பட்டார். 1798-ஆம் ஆண்டு இராமநாதபுரம் மன்னர் சேதுபதி, முல்லை, பெரியாறு நதிகளை இணைத்து அணைகட்டி தண்ணீர் முழுவதையும் மதுரை,இராமநாதபுரம் பகுதிக்கு கொண்டுவரத் திட்டமிட்டார். இதற்காக முத்து இருளப்பபிள்ளை தலைமையில் 12 பேர்அடங்கிய குழுவை மேற்கு தொடர்ச்சி மலைக்கு அனுப்பினார். அந்தக் குழு அங்கு தங்கி காடுகளை அழித்து, அணைகட்டும் இடத்தை தேர்வு செய்து மதிப்பீடுதயார் செய்தது. ஆயினும் நிதி வசதியின்றி திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. 

1807-ஆம் ஆண்டு மதுரை ஆட்சியராக இருந்த ஜார்ஸ்பேரிஸ், மேற்கு தொடர்ச்சி மலைக்குச் சென்று பெரியாறுஅணை கட்ட திட்டமிட்டுள்ள இடத்தைபார்வையிட்டு, ஆய்வு செய்ய மாவட்டபொறியாளர் ஜேம்ஸ் கார்டுவெல்லுக்கு உத்தரவிட்டார். ஆனால் 1808-ஆம் ஆண்டு நடைமுறைக்கு ஒத்துவராத திட்டம் என கார்டுவெல் அறிக்கை தந்தார். 1837-ஆம் ஆண்டு கர்னல் பேபர் சின்னமுல்லையாறு தண்ணீரை மண் அணைமூலம் திருப்பும் பணியில் ஈடுபட்ட போது, வேலையாட்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டதாலும், கூலி அதிகம் கேட்டதாலும் பணி நடக்கவில்லை என்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன.1867-ஆம் ஆண்டு மேஜர் ரைவ்ஸ் மேற்கே செல்லும் தண்ணீரை கிழக்கேதிருப்புவதுதான் முக்கிய நோக்கம் என்று 17.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். பெரியாற்றின் குறுக்கே மண் அணைஅமைத்து அந்த ஆற்றின் நீரைக் கிழக்குப்பக்கமாகத் திருப்புவதற்கான வரைவுத்திட்டம் ஒன்றை சுமித் என்கிற ஆங்கிலேயர் தயார் செய்தார். இந்தத் திட்டத்திற்கு தலைமைப் பொறியாளராக இருந்த வாக்கர் எதிர்ப்புத் தெரிவித்தார். இதனால் இந்த அணைத் திட்டத்தை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டது. 

கட்டுமானப்பணி
இறுதியாக 1882-ஆம் ஆண்டு இந்தத்திட்டம் ஆங்கிலேய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டு மேஜர் ஜான் பென்னிகுவிக்கிடம் அதன் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அதற்காக அவர் 1884- ஆம்ஆண்டு தயாரித்து சமர்ப்பித்த செலவுத் திட்டமும் உயர் அதிகாரிகளின் ஒப்புதலைப்பெற்றது.அவரது தீவிர முயற்சியால் பெரியாறு அணை 1893-இல் 60 அடி உயரத்திற்கும், அதன்பின்பு 1894-ல் 94 அடிஉயரத்திற்கும் 1895 டிசம்பர் மாதத்தில்155 அடியும் கட்டி முடிக்கப்பட்டு கைப் பிடிச்சுவரும் கட்டப்பட்டது.  இந்த அணையின் கட்டுமானப்பணிகளுக்காக 80 ஆயிரம் டன் சுண்ணாம்புக்கல் பயன் படுத்தப்பட்டது. 1895-ஆம் ஆண்டு (இந்திய நேரப் படி) அக்டோபர் 10, 1895 மாலை 6 மணிக்கு சென்னை மாகாண கவர்னர் வென்லாக் தேக்கடிக்கு வந்து, பெரியாறு அணைத் தண்ணீரைத் தமிழகப் பகுதிக்கு திறந்துவைத்தார்.அன்றிலிருந்து இன்று வரை 125 ஆண்டுகளாக தலைமுறைகள் கடந்தும் தண்ணீர் கொடுத்துத்  தமிழகத்தின் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது, முல்லைப்பெரியாறு அணை.அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு சனிக்கிழமை (10.10.1895) உடன் 125 வது ஆண்டுகள் நிறைவடைகிறது. முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகத்துக்கு, முதன்முதலாக தண்ணீர் திறக்கப்பட்ட நாளான அக்டோபர் 10- ஆம் தேதியை விவசாயிகள் சிறப்பாகக் கொண்டாடினர். பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டதால் முதலில் பெரியாறு அணை என்றழைக்கப்பட்ட இந்த அணை, முல்லையாறு மற்றும் பெரியாறு இரண்டும் சேருமிடத்தின்கீழ் அமைந்துள்ளதால் இருஆறுகளின் பெயர்களையும் இணைத்து ‘முல்லைப் பெரியாறு அணை’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.