tamilnadu

img

அரசு வழிகாட்டுதலோடு திரைப்பட படப்பிடிப்புகள்: முதல்வர் அறிவிக்க பாரதிராஜா கோரிக்கை

சென்னை:
தமிழக சுகாதாரத் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் திரைப்பட படப்பிடிப்புகள் நடத்த அனுமதிப்பது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுதந்திர தின உரையில் அறிவிக்கவேண்டும் என்று தமிழ் திரைப்பட மூத்த இயக்குநர் பாரதிராஜா வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதம் வருமாறு:தமிழகத்தில் பொதுமுடக்கம் தொடங்கி  150 நாட்கள் ஆகிவிட்டது. எங்கள் திரைப் படங்கள் திரையரங்கில் 150 நாட்கள் ஓடி சாதனை புரிந்தால் அப்படியொரு மகிழ்வும் கொண்டாட்டமும் கொள்வோம். ஆனால் பட வெளியீடுகள் இன்றிதிரையரங்கையும் மூடி,  படப்பிடிப்புகளையும் நிறுத்தி, நூற்றைம்பது நாட்கள் ஆகிறது  என்ற வேதனையை தமிழ்சினிமா முதன் முறையாக இப்போது சந்தித்துள்ளது. 

80-க்கும் மேற்பட்ட படங்களும், படப்பிடிப்புகளும் தேங்கி நிற்கின்றது. கொரோனா காலகட்டத்தில் நாங்கள் முழுமையாக அரசாங்கத்தோடு நின்று எங்களைக் கட்டுக்குள் வைத்திருக்கிறோம். அரசு கொடுத்த வழிமுறைகளைப் பின்பற்றி எங்கள் முடக்கத்தை முழுமையாக செய்துவிட்டோம். எத்தனையோ ஏழைத் தொழிலாளிகளின் வயிறு பட்டினியாகக் கிடக்கிறது. தொழில் நுட்பக் கலைஞர்களின் சிறு சேமிப்புகள் கரைந்து, திரைத்துறை மீண்டு வரும் நாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பணம் போட்ட தயாரிப்பாளர்கள், பண உதவி செய்தவர்கள் என எல்லோரும் முதலீட்டின் மீதான வரவை எதிர்பார்த்து, இழப்பு மேல் இழப்பை சுமந்துகொண்டிருக்கிறார்கள். 

முதலீடு போடும்போதே இழப்பு என்ற நிலை மிகக் கொடுமையானது. இந்நிலைதொடராமல் தடுத்து தமிழ் சினிமா மீண்டும் மூச்சுவிட தாங்கள் தயைகூர்ந்து வழிமுறைகளோடு கூடிய ஒரு வழிகாட்டலை திரைத் துறைக்கு வகுக்க கேட்டுக்கொள்கிறேன். சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அளித்த அனுமதியைப் போல எங்களுக்கும் குறுகிய குழுவோடு, பொது இடங்களில் இல்லாமல், ஸ்டுடியோ அல்லது வீடுகளுக்குள்  திரைப்பட படப்பிடிப்புகளைத் தொடர வழிவகை செய்ய, ஆவண செய்யுமாறு அத்தனை தொழிலாளர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.  

சுதந்திர தின அறிக்கையில் எங்கள் திரைத்துறை சிக்கல்களுக்கான விடுதலையும் இடம்பெற வேண்டும் என விரும்புகிறோம். எப்படிப்பட்ட  வழிமுறைகளை, விதிகளோடு தந்தாலும் நிச்சயம் அதிலிருந்து மீறாது,  தவறாது சீராக அவற்றைக் கடைப்பிடித்து.எம் பிள்ளைகள் கொரோனா தொற்று பரவாமல் பாதுகாப்போடு பணிசெய்துகொள்வோம் என உறுதி கூறுகிறோம். தங்களின் மேலான ஏற்புகளையும், வழிகாட்டலையும், படப்பிடிப்பிற்கான அனுமதியையும் எதிர் நோக்கிக் காத்திருக்கிறோம்.இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

;