புதிய இந்தியாவை நேரடியாகக் காண்பதற்காக இந்தியாவிற்கு அழைக்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி, இந்திய வரலாற்றின் மத்தியகால பகைமை உணர்வுகளில் மூழ்கிப் போன பழைய இந்தியாவைத்தான் காண முடிந்தது.
தயார் நிலையில் இருந்த வன்முறையை தில்லியில் கட்டவிழ்த்து விட்டிருந்தார்கள். ஏனெனில் பாகுபாடுகள் நிறைந்த குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019க்கு எதிராக தில்லி ஷாகீன் பாக்கில் நடைபெற்று வரும் போராட்டத்தை சட்டவிரோதப் போராட்டம் என முத்திரை குத்த வேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக தில்லியின் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், அச்சுறுத்தல்களுக்கும், தூண்டுதல்களுக்கும் இரையாகாமல் அமைதியான முறையில் முதியவர்கள், இளையவர்கள் என முஸ்லீம் பெண்கள் அங்கு போராட்டம் நடத்தி வருவதை ஒட்டு மொத்த தேசமும் கவனித்து வருகிறது.
இந்தியக் குடிமக்கள் என்றும், இந்திய நாட்டின் மதச் சிறுபான்மையினர் என்றும் தங்களைப் பிரகடனப்படுத்திக் கொள்ள அவர்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டம், தேசியக் கொடி, தேசிய கீதம் போன்றவற்றையெல்லாம் பயன்படுத்தி வருவதையும் நாம் காண முடிகிறது. மதச் சார்பின்மையின் அடையாளமாக ஷாகீன் பாக் மாறியுள்ளது. உலக மீடியாக்களின் கவனத்தையும் அது ஈர்த்துள்ளது. புதிய இந்தியாவின் கர்த்தாக்கள் என்று தங்களைச் சொல்லிக்கொள்பவர்கள் ஒரு நிதானத்திற்கு வரும் முன்பே இந்தியா முழுமையும் நகரங்களிலும், சிற்றூர்களிலும் ஷாகீன் பாக் போன்ற போராட்ட அலைகள் எழுந்து விட்டன.
அவமானத்தின் பிடியில் ஆட்சியாளர்கள்
இந்திய அரசியல் நிலப்பரப்பு முழுமையும் ஒரு புதிய எதிர்ப்புணர்வு எழுந்துள்ளதைக் காண முடிகிறது. இந்தியாவின் தெருக்களிலும், இந்திய மீடியாக்களிலும், தேச உருவாக்கத்திலும் தங்களுக்குத்தான் மிதமிஞ்சிய அதிகாரம் இருக்கிறது என நினைத்து வந்தவர்களுக்கு இப் போராட்டங்கள் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளன. புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் மதவாதத்தை முன்னுக்குக் கொண்டுவர நினைத்தவர்களுக்கு ஷாகீன் பாக்கின் அமைதியான போராட்டங்கள் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. சாணக்கியர்கள் என தங்களைச் சுயதம்பட்டம் அடித்துக் கொள்ளும் இவர்களுக்கு மேலும் எரிச்சலூட்டும் விஷயம் என்னவென்றால், ஷாகீன் பாக் போராட்டத்தை முஸ்லீம்களின் போராட்டமாக மட்டும் சித்தரிக்க இயலாமற் போனதுதான். அரசியல் எதிர்ப்பினையும், ஜனநாயக முறையிலான போராட்டங்களையும் அடக்குமுறையின் மூலம் ஒடுக்கிவிட முடியும் என நினைத்துக் கொண்டிருந்த நமது நாட்டின் புதிய ஆட்சியாளர்களுக்கு இது ஒரு அவமானமாக மாறியுள்ளது.
தங்களது பாடல்கள் மூலம் புதுமையான முறையிலும், வசீகரிக்கும் வகையிலும் குடியரசின் மாண்புகளையும், மதச்சார்பின்மையின் மாண்புகளையும் வெளிப்படுத்தி ஷாகீன் பாக்கில் மக்கள் நடத்தும் போராட்டம், புதிய இந்தியாவை உருவாக்குபவர்களாக தங்களைச் சொல்லிக் கொள்பவர்களுக்கு காணச் சகிக்காத ஒன்றாக மாறியுள்ளது. அசாத்தியமான தன்னம்பிக்கை கொண்டிருந்த பாஜக தலைமையானது, தில்லி தேர்தல்களை ஒரு வாய்ப்பாகப் பார்த்தது. மத்திய உள்துறை அமைச்சரில் ஆரம்பித்து இந்திய நாடு முழுமையிலுமிருந்து பாஜகவின் தலைவர்கள் வரவழைக்கப்பட்டு பம்பரமாகச் சுழன்று தேர்தல் வேலை செய்தனர். வன்முறையைத் தூண்டும் பேச்சும், தேசபக்தி என்ற சொல்லாடலும் அவர்களது பிரச்சாரத்தின் மையமாக இருந்தது. ஷாகீன் பாக் போராட்டக்காரர்களுக்கு பாடம் புகட்டுமாறு வாக்காளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். பாஜக தனது மதவாத நிகழ்ச்சிநிரலுக்கும் தனது தலைவர்களது செல்வாக்கிற்குமான வாக்கெடுப்பாக தில்லி தேர்தலை மாற்ற முயற்சித்தது. ஆனால் தில்லி வாக்காளர்களோ பாஜகவின் இந்த முயற்சியினை உறுதியோடு நிராகரித்தார்கள்.
ஆனால் இத்தோல்வியினால் சற்றும் கலக்கமுறாத பாஜகவும், அதன் தலைவர்களும் இத் தோல்வியினை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். தங்களது வாக்கு சதவீதத்தை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சித்தனர். மீண்டும் ஷாகீன் பாக் போராட்டக்காரர்களை உசுப்பிவிடும் வேலையினைச் செய்ய ஆரம்பித்தனர். ஜாபராபாத்திலுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கெதிரான போராட்டக்காரர்களை அப்புறப்படுத்துவதற்கு காலக்கெடு நிர்ணயம் செய்து கபில் மிஸ்ரா போன்றவர்கள் வார்த்தைகளை உமிழ்ந்தனர். முல்லாக்களும், மௌல்விக்களும், இமாம்களும் பின்னுக்குத் தள்ளப்பட்டு, முஸ்லீம் பெண்களால் நடத்தப்படும் இப் போராட்டங்களை விரும்பாத பழமைவாத முஸ்லீம் தலைமையை பாஜக தலைமையானது ஓரளவு புரிந்து வைத்துள்ளது என்றுதான் கூற வேண்டும். ஷாகீன் பாக் மாடல் போராட்டமானது, காவிச் சிந்தனை கொண்டவர்களுக்கு மட்டுமல்ல, அந்தச் சமூகத்தின் பழமைவாதத் தலைமைக்கும் ஒரு சவாலாகவே மாறியுள்ளது. உச்ச நீதிமன்றத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ள பேச்சுவார்த்தைக் குழுவினர், தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல், முஸ்லீம் பெண்களிடமே பேச்சுவார்த்தை நடத்துவதில், முஸ்லீம் பழமைவாதத் தலைமை வருத்தத்துடன் உள்ளது.
உத்தரப்பிரதேச பயங்கரத்தின் பின்னணியில்...
ஷாகீன் பாக்கிலிருந்து சில மைல்கள் தூரத்திலேயே உள்ள யோகி ஆதித்யநாத்தின் உத்தரப்பிரதேசத்தில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது போலீஸ் அடக்குமுறை ஏவிவிடப்பட்டதை பாஜகவின் தலைமை ஒன்றும் அறியாமலில்லை. முஸ்லிம்கள் மீது உத்தரப்பிரதேச காவல்துறை ஏவிய வன்முறையைப் பற்றிய விபரங்கள் யமுனை நதியினைக் கடந்தும் வரத்தான் செய்கின்றன. லக்னோவில் பழிவாங்கும் உணர்வோடு ஏவிவிடப்பட்ட அரசு அடக்குமுறையைக் கண்டித்து எந்தக் குரலும் எழுப்பப்படாதது மிகவும் மோசமான ஒன்றாகும். காவல்துறையின் பாரபட்சமான அடக்குமுறையைக் கண்டித்து எந்த அரசியல் கட்சியுமோ, அல்லது நீதிமன்றமோ, ஊடகங்களோ, சமூக அமைப்புகளோ குரல் எழுப்பவோ அல்லது தலையீடு செய்யவோ இல்லை. முஸ்லிம் போராட்டக்காரர்களிடம் கோபம் இருந்தது. ஆனால் அவர்கள் கையறு நிலையில் இருந்தனர். போராட்டக் களத்திலுள்ள எளிய முஸ்லீம் மக்கள் தாக்குப்பிடிக்க மாட்டார்கள் என முஸ்லீம் பழமைவாதத் தலைமையும் நினைத்தது.
இரண்டு உணர்ச்சிகரமான, தீவிரமான போராட்ட உணர்வுகள் ஓரிடத்தில் கொண்டு வந்து நிறுத்தப்பட வேண்டும் என அரசு நினைத்தது. ஒன்று ஒற்றுமை உணர்வோடும், மதச் சார்பின்மை உணர்வுகளோடும் நடத்தப்படும் ஷாகீன் பாக் போராட்டம் மழுங்கடிக்கப்பட வேண்டும். இரண்டாவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை முன்வைத்துப் போராடுகின்ற பெண்கள், ஒரு கும்பலாகச் சித்தரிக்கப்பட வேண்டும். அதுதான் தில்லியில் கடந்த வாரத்தில் நடந்தது. 2002ல் குஜராத்தில் வன்முறையை நடத்திய அனுபவம்(!) கொண்டவர்கள், தெருக்களில் வன்முறையை ஏவுவதில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்களென தங்களை நினைத்துக் கொண்டவர்கள்; பொய்களை, வதந்திகளை உற்பத்தி செய்கின்றவர்கள், தில்லியில் வன்முறை வெடித்ததில் மகிழ்ச்சியடையலாம்.
51 சதவீதமும் 49 சதவீதமும்
ஆழமாகப் பிளவுபட்டுள்ள ஒரு சமூக அமைப்பு, பட்டவர்த்தனமாக செயல்படக்கூடிய சில பிரிவினை சக்திகளுக்கு உதவக்கூடும். ஆனால் ஒரு மதவாத அரசினையும், அதன் விபரீதமான கொள்கைகளையும் முறியடிக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாக மாறியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளில் ஒருவரான தீபக் குப்தா, நம்முடைய , நம் ஆட்சியாளர்களுடைய குழப்பத்தின் மையப் பொருளைக் குறிப்பிட்டுச் சொன்னார்: “பெரும்பான்மைதான் ஆள முடியும் என்பது நமது ஜனநாயகத்தின் ஒருங்கிணைந்த அம்சமாகும். ஆனால் பெரும்பான்மைவாதம் ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒரு அரசியல் கட்சியானது 51 சதவீத வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்திருக்கலாம். ஆனால் அப்படி வந்ததினால் மட்டுமே மீதமுள்ள 49 சதவீதத்தினர் அடுத்த 5 வருடங்களுக்கு எந்த அதிகாரமும் அற்றவர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை.”
நீதிபதி குப்தாவின் வார்த்தைகள் இதைத்தான் நமக்கு நினைவூட்டுகின்றன - இந்திய நாட்டின் ஜனாதிபதியிலிருந்து, பிரதமரிலிருந்து சாதாரண போலீஸ் கான்ஸ்டபிள் வரை அனைத்து மக்களின் நலனுக்காகவே அவர்கள் பணி செய்ய வேண்டும். இத்தகு சிந்தனைகளையே ஷாகீன் பாக்கின் போராட்டம் நமக்கு நினைவுபடுத்துகிறது. ஒரு ஜனநாயகக் கட்டமைப்பில், சிறுபான்மையினரின் குறைகளையும், எதிர்பார்ப்புகளையும் அரசு தீர்த்து வைக்கும் என்கிற அசையா நம்பிக்கையோடு அமைதியான முறையில் ஷாகீன் பாக் போராட்டமானது நடைபெற்றுவருகிறது. அவர்கள் மீது ஏவப்பட்டுள்ள வன்முறையானது அப் போராட்டத்தை, அவர்களின் ஜனநாயகப்பூர்வமான உணர்வுகளை சட்டவிரோதமாக்குவதற்கு பயன்படுத்தப்படுமானால், அது அளவற்ற துயரத்தைத் தரும் ஒன்றாகவே இருக்கும்.
நன்றி : தி இந்து (ஆங்கிலம்) 28.2.2020
தமிழில் : செ.சிவசுப்ரமணியன்