tamilnadu

அக்.28-ல் பருவ மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை:
வடகிழக்கு பருவமழை இம்மாதம் 28ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன்,” அக்டோபர் 26, 27 தேதிகளில் காற்றின் திசை மாறக்கூடும்.எனவே அக்டோபர் 28 ஆம் தேதி வடகிழக்கு பருவ மழை தொடங்க வாய்ப்புள் ளது” என்றார்.தற்போது வளிமண்டலத்தில் ஏற்படும் மேலடுக்குகளால் மழை பெய்து வருகின்றது. அடுத்த இரண்டு நாள்களுக்கு சென்னை, புதுச்சேரியில் மழை பெய்யக் கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வட தமிழக கடலோர பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழக மாவட் டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.அடுத்த 48 மணி நேரத்திற்கு வட தமிழகம், கடலோர தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.