இன்றைய உலகின் பெரும்பகுதி நாடுகள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கடந்து வந்த சமூக பொருளாதார பாதையை முற்றாக கைவிட வேண்டிய சூழல் இன்று ஏற்பட்டுள்ளது.அதாவது நவீன தாராளமயம் எனும் பாதை மிகப்பெரும் தோல்வி அடைந்து விட்டது என்பதற்கு தினந்தோறும் நடக்கும் நோய்தொற்று பாதிப்புக்களும்,மரணங்களும் எடுத்துக்காட்டுகளாக அமைந்துள்ளன. சுகாதாரம்,கல்வி போன்ற சமூக நல நடவடிக்கைகளில் அரசாங்கம் தன்னை விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற நவீன தாராளமயம் பொருளாதாரக் கொள்கையாகவும் வளர்ச்சிக்கான சித்தந்தமாகவும் போதிக்கப்பட்டு வந்தது.பொதுத்துறை உள்ளிட்டு அனைத்திலும் தனியார் தங்கு தடை யின்றி நுழைந்திடவும் செயல்படவும் அனுமதிக்க வேண்டு மென்றும்,சொல்லப்பட்டு,அந்தப் பாதையில் நாடுகள் நடைபோட்டன! பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களும் பெரு முதலாளிகளும் அதிக இலாபம் ஈட்டி, தங்கள் மூலதனத்தை பெருக்கிக் கொண்டால் அது நாட்டு வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும் என்ற பரப்புரை வலுவாக நடத்தப்பட்டது. சமூகத்தின் மேல்தட்டில் உள்ள மூலதன உடைமை யாளர்களும் அவர்களது நிர்வாகப் பிரிவினரும் உலக சந்தையின் நுணுக்கங்களை அறிந்து செல்வத்தைப் பெருக்கும் வல்லமை கொண்டவர்கள் என்றும் அவர்களது சுதந்திரமான முன்முயற்சிகள்,சுதந்திரமான போட்டி போன்ற வற்றை ஊக்குவிக்கும் வேலையை மட்டும் அரசாங்கங்கள் செய்தால் போதும் என்ற “தத்துவங்கள்” உலகம் முழுவதும் வலம் வந்தன.
நவீன தாராளமயமே காரணம்
இன்று கொரோனா நோய்த்தொற்று சூழலில் அந்த வாதங்கள் அனைத்தும் கடைந்தெடுத்த பொய்மை களாக அம்பலப்பட்டு நிற்கின்றன.நவீன தாராளமய காலத்தில் மக்கள் நலனை கைவிட்டு பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சேவை செய்யும்சேவகர்களாக அரசுகள் செயல்பட்டன. பல பத்தாண்டுகளாக அரசாங்கங்கள் செய்த தவறுகள்தான் மக்கள் துயரங்களை அனுபவிப்பதற்கு முக்கிய காரணம்.குறிப்பாக சுகாதாரத்தில் பொது முதலீடு தொடர்ந்து குறைக்கப்பட்டு,சுகாதாரத்திலும் உலக காப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிக்க அனுமதிக்கப்பட்டனர்.அதன் விளைவுகளை இன்றைக்கு உலகம் முழுவதும் மக்கள் வேதனையோடு அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். நோய் தொற்றினால் ஏற்படும் பாதிப்பு மட்டுமல்ல; வாழ்வாதாரங்கள் இழப்பு பெரும் துயரமாக இன்று மக்களை வாட்டிக் கொண்டிருக்கிறது.தற்போது மட்டுமல்ல எதிர்வரும் நீண்ட காலத்திற்கு இந்த வேதனைகள் தொடரும் என பல ஆய்வுகள் நாள்தோறும் அறிவிக்கின்றன.
குறிப்பாக வளரும் நாடுகள் என சொல்லப்படுகிற இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் பெரும் பாதிப்பை சந்திக்க உள்ளன.ஏனென்றால் நவீன தாராளமயம் என்பதை வேத மந்திரமாக எடுத்துக்கொண்டு அமலாக்கி வந்துள்ள நாடுகள் இவை.இன்றுஆசியாவிலுள்ள ஏழை நாடுகள் நோய் தொற்று பாதிப்பு, வாழ்வாதாரம் இழப்பு என பன்முக பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இந்த நாடுகளில் எதிர்வரும் நவம்பரில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்ற நிலை இருந்த போதிலும், இன்று, ஊரடங்கு தளர்வுகள், மீண்டும் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வது என பல நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்ப முயற்சிக்கின்றன.ஆனால், பல்வேறு பொருளாதார அறிக்கைகள் நிலைமை இன்னும் மோசமாகும் என்று அபாய சங்கை ஊதி வருகின்றனர். உலக அளவிலும்,முன்னேறிய நாடுகளிலும் பொருளா தார நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அது, ஏழை நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.இதனால். ஏழை, வளர்ந்துவரும் நாடுகளும் தங்களது பொருளாதார நிலையில் முன்னேற்றம் காண்பது கடினம்.இந்நாடுகளில், தொடர்ந்து நோய்தொற்று பரவலை தடுப்பதற்கான முயற்சிகள் எடுக்க வேண்டிய கட்டாயமும் இருக்கிற சூழலில் இது பொருளாதாரத்தில் தேக்கத்தை ஏற்படுத்தும்.
ஆசியாவின் துயரம்
ஆசியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி 1.6 சதவீதம் குறையும் என்று சொல்லப்படுகிறது.தென் கொரியா 2 சதவீதமும் இந்தியா 4.5% ஜப்பான் 5.8% குறையும் என்று சர்வதேச பொருளாதார நிறுவனங்கள் சொல்லி வருகின்றன.இந்த நாடுகள் ஒப்பீட்டு நோக்கில் வளர்ச்சியடைந்த நாடுகள் என்று வகைப்படுத்தப்பட்ட நாடுகள்.சர்வதேச நிதி நிறுவனம் 57 நாடுகளில் விவரங்கள் எடுத்து வெளியிட்டுள்ளது.முழுமையாக ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டாலும் தொழில் உற்பத்தி 12 சதவீதத்திற்கும் மேலாக குறைந்துவிடும் என்று அதில் சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக,கணிசமான வருமானம் ஈட்டுகிற சுற்றுலா தொழில் முடங்கிவிடும் நிலை உள்ளது.வெளிநாடுகளி லிருந்து இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த நாடுகளில் உள்ள குடும்பங்களுக்கு அனுப்பி வந்த பணமும் ஒரு பெரும் அளவுக்கு குறையும்.குறிப்பாக தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர் களுடைய பணம் கிட்டதட்ட 10 பில்லியன் டாலர் குறைந்து மாபெரும் இழப்பு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.
நாட்டின் வருமானம் பாதிக்கப்படுவதோடு இந்த பணவரவு இல்லாத காரணத்தினால் தொழிலாளர்களின் குடும்பங்கள் கடும் பாதிப்பை சந்திக்க இருக்கின்றன. வெளிநாட்டுக்குசென்ற தொழிலாளர்களும் கூட அங்கு அதிக அளவில் வேலை இழப்பால் வருமானம் இழந்து அவதிப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். ஆசிய நாடுகளின் உற்பத்தியும் இந்த ஆண்டு குறையும் என்று சொல்லப்படுகிறது.ஆசிய நாடுகளில் ஏற்றத்தாழ்வு அதிகரிப்பதும் வேலையின்மைக்கான வாய்ப்புகள் குறைவதும் ஒருசேர நிகழ்ந்து வருகிறது.ஐக்கிய நாட்டு சபையின் பொருளாதார நெருக்கடி பற்றிய அறிக்கை தென்கிழக்கு ஆசியாவினைச் சார்ந்த 21 கோடியே 80 லட்சம் முறைசாரா தொழிலாளர்கள் வேலை இழந்து வாழ்வு இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது.அவர்களுக்கு மாற்று ஏற்பாடும் இல்லை. அரசாங்கமும் சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள் எதையும் செய்யாத சூழலில் அந்த மிகப் பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்களும் அவர்களது குடும்பங்களும் கடுமையான வறுமையை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அபாய மணி அடிக்கிறது.
அரசாங்கங்களின் பொறுப்பு
எனவே, அரசாங்கங்களுக்கு இப்போது பொறுப்பும் கடமையும் கூடியிருக்கிறது.முதலில் தொற்று நோய் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நோய்த்தொற்று நிலைமைகளால் மிகப்பெரும் அளவில் வாழ்வை இருக்கிற உழைக்கும் மக்களுக்கும் உடனடியாக உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது.ஆசிய நாடுகளில் ஏற்கனவே சுமார் 35 கோடிபேர் ஊட்டச்சத்துக் குறைவால் வாடுகிறன்றனர்.மோசமான நோய்தொற்று நிலைமைகளில் உடனடியாக உணவு பாதுகாப்பினை உறுதி செய்ய நேரடி பொது விநியோகம் மிக முக்கியமானது. மற்றோரு முக்கியமான பிரச்சினை வேலையின்மை.ஏப்ரல் மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரை சுமார் 40 கோடி மக்கள் வேலை இழந்துள்ளனர். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒப்பீட்டு நோக்கில் முன்னேறிய நாடாக கருதப்படுகின்ற தென்கொரியாவில் மட்டும் 10 லட்சம் வேலைகள் இழப்பு ஏற்பட்டது.இந்நிலையில் அரசாங்கங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க முடியுமா? வேலை யில்லா கால நிவாரண உதவிகளை அதிகரிக்க வேண்டியது மனிதாபிமானம் மட்டுமல்ல; அரசாங்கங்களின் கடமையும் ஆகும்.
ஆரோக்கியமான குடியிருப்பு வசதிகள், சுகாதாரம், பாதுகாக்கப்பட்ட குடிநீர், மின் உற்பத்தி, போக்குவரத்து போன்ற அடிப்படை கட்டமைப்புகளில் அரசாங்கம் பொது முதலீட்டை அதிகரிக்கவேண்டும். இது வேலைவாய்ப்பையும் அதிகரிக்கச் செய்திடும். இந்தியாவில் இருப்பது போன்று கிராமப்புற வேலை உறுதி திட்டம் போன்றவற்றை விரிவாக்கிட வேண்டும்.அத்துடன் நகரங்களில் 200 நாட்கள் உறுதி செய்கிற நகர்ப்புற வேலை உறுதி திட்டம் கொண்டுவரப்பட வேண்டும். சிறு குறு நடுத்தர தொழில்களுக்கு அரசின் நிதி உதவிகள், கடன் வசதிகள் அதிகரிக்க வேண்டும். இந்த மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கூறுகிறவர்கள் வருமானத்தை பெருக்கிட பல ஆலோசனைகள் கூறுகின்றனர்.ஆனால்,நவீன தாராள மய காலங்களில் தங்களுடைய சொத்தினை வரலாறு காணாத அளவில் பெருக்கிக் கொண்ட பெரு முதலாளிகள், உலகப்பெரும் நிறுவனங்களிடமிருந்து நிதி ஆதாரங்களை திரட்டும் ஆலோசனை அவர்களிடமிருந்து வருவதில்லை.
ஐநா அறிக்கை கூட, வருமானத்தைப் பெருக்கிட வரி ஏய்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டுமென அரசாங்கங் களை அறிவுறுத்துகிறது.ஆனால் அது மட்டும் போதுமா? வளர்ந்துவரும் நாடுகள் பலவற்றில் நேரடி வரி விதிப்பு விகிதம் குறைவு.இந்தியா போன்ற நாடுகளில் பெருமுத லாளிகளுக்கு வரிச் சலுகைகள் ,கடன் தள்ளுபடிகள் என கொரோனா காலத்திலும் தொடர்கிறது.அவர்களுக்கு மேலும் மேலும் சலுகைகளை கொடுப்பது இந்த நோய்த்தொற்று காலத்தில் கடுமையான குற்றமாகும்.மனித விரோதமும் ஆகும்.இந்தக் கொள்கைகள் முற்றாக மாற்றியமைக்கப்பட வேண்டும். இந்த மாற்றுக் கொள்கைகளை அமலாக்கிட ஆளுகிற வர்க்கம் தானாக இறங்கி வராது.உலகளாவிய உழைக்கும் மக்களின் இயக்கம் பலமாக எழ வேண்டும்.மார்க்சிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்துள்ள ஆகஸ்ட் 20-28 இயக்கம் உலக மக்கள் இயக்கத்திற்கு வலு சேர்த்திடும்.
கட்டுரையாளர் : சிபிஐ(எம்) மாநிலச் செயற்குழு உறுப்பினர்