tamilnadu

img

வெளிநாடு வாழ் கேரளியர்களுக்காக 2.5 லட்சம் தனிமை அறைகள் தயார்

திருவனந்தபுரம், ஏப்.16- வெளிநாடுகளில் வாழும் கேரளியர்கள் நாடு திரும்புகையில் அவர்கள் தங்குவதற்கான இரண்டரை லட்சம் தனிமை அறைகள் கேரளத்தில் தயாராக உள்ள ன. இவற்றில் ஒன்றரை லட்சம் அறைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டு விட்டன.

வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை திருப்பிக் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. பல்வேறு நாடுகளும் தங்கள் நாட்டில் உள்ள வெளிநாட்டினரை திருப்பி அழைத்துச் செல்ல அந்தந்த நாடுகளை அறிவுறுத்தி வந்தன. இந்நிலையில் புதனன்று இரவு வெளிநாடு வாழ் இந்தியர்களை அழைத்துவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவிலேயே மிக அதிக எண்ணிக்கையில் கேரளியர் வெளிநாடுகளில் வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் ஊர் திரும்பியதும் கொரோனா பாதிப்பு இல்லை என்பதை உறுதிப்படுத்தும் வரை தனிமையில் தங்கப்பட வேண்டும். அதற்கு தேவையான அறைகளை தயாராக வைக்குமாறு கேரள அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், விடுதிகள், பயன்படுத்தாமல் உள்ள கட்டடங்கள் போன்றவற்றை கண்டறியுமாறு அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது. பொதுப்பணித்துறையிடம் இதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கான கேர் சென்டர்கள் தயாராக உள்ளன.

30 லட்சம் பேர்

வளைகுடா நாடுகளில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மலையாளிகள் உள்ளனர். வெளிநாடு வாழ் மலையாளிகளில் 89 சதவிகிதம் வளைகுடா நாடுகளில் உள்ளனர். இதில் யுஏஇ- 10 லட்சம், சவுதி- 8 லட்சம், குவைத்- 5 லட்சம், ஓமன்- 3 லட்சம், கத்தர்- 2 லட்சம், பக்ரைன்- 1.5 லட்சம், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அதிக எண்ணிக்கையிலும் கேரளியர் உள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் கல்வி பயிலும் ஏராளமான கேரள மாணவர்கள் உள்ளனர். 

வளைகுடா நாடுகளில் தனிமை கண்காணிப்பு மையங்கள் அமைக்கும் முயற்சியில் கேரள அரசு ஏற்கனவே ஈடுபட்டுள்ளது. மலையாளிகளின் பல்வேறு அமைப்புகளின் ஒத்துழைப்புடன் இந்த மையங்கள் அமைக்கப்படுகின்றன. மலையாளிகளான தொழிலதிபர்கள் நடத்தி வரும் பள்ளிக்கூடங்கள், ஓட்டல்கள், உள் விளையாட்டு அரங்குகள் இதற்காக பயன்படுத்தப்பட உள்ளன. லேபர் கேம்புகளிலும், கூட்டாக பல்வேறு இடங்களில் வசிப்போருக்கும் இத்தகைய தனிமை கண்காணிப்பு மையங்கள் தேவையாக உள்ளது. வளைகுடா நாடுகளில் நான்கில் ஒரு பகுதி மலையாளிகள் பாதுகாப்பான வசிப்பிடங்களில் உள்ளனர். கேரளத்திற்கு முன்னுரிமை அடிப்படையில் இவர்கள் அழைத்து வரப்பட உள்ளனர். முதியோர், கர்ப்பிணிகள், இதயம் பாதிப்பு போன்ற நோய்களுக்கு உள்ளானோர், விசா காலம் முடிந்தவர்கள் முன்னுரிமை பெறுவார்கள்.