tamilnadu

img

கொள்ளிடம் ஆற்றில் மணல் கொள்ளை 4 லாரிகள் சிறைபிடிப்பு

தஞ்சாவூர், ஜூன் 8- தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை அடுத்த கோவிலடி, சுக்காம்பார் ஆகிய கிராமப் பகுதி கொள்ளிடம் ஆற்றில், இரவு நேரத்தில் அரசு அனுமதியின்றி மணல் கொள்ளை, அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் துணையோடு நடப்பதாக, அப்பகுதியினர் பல முறை ஆட்சியரிடம் மனு அளித்து, பல்வேறு பேராட்டங்களை நடத்தியுள்ளனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்கு, மணல் அள்ள வந்த 4 லாரிகளை,  கிராம மக்கள் சிறைபிடித்தனர். இச்சம்பவம் குறித்து, பூதலூர் வட்டாட்சியர் சிவக்குமார் மற்றும் திருக்காட்டுப்பள்ளி காவல்துறைக்கு கிராம மக்கள் தகவல் அளித்தனர். ஆனால் வெகு நேரமாகியும் சம்பவ இடத்திற்கு அதி காரிகள் யாரும் வராததால் வெறுத்துப்போன  மக்கள், மணல் அள்ள வந்தவர்களை எச்ச ரித்து, லாரிகளையும் அனுப்பி வைத்தனர்.

அதன் பிறகு சம்பவ இடத்திற்கு, 3 மணிநேரம் கழித்து, நள்ளிரவு சுமார் இரவு 2 மணிக்கு வந்த வட்டாட்சியர் சிவக்குமார், தாங்கள் செய்தது சரியான செயல், தான் வருவதற்கு டிரைவர் இல்லாததால், பைக்கில் வந்ததால் சிறிது காலதாமதம் ஏற்பட்ட தால், உடனடியாக வர முடியாமல் போய் விட்டது என பதிலை அளித்துள்ளார். அத்துடன்,  இனி எப்பொழுது வேண்டுமானா லும் அழையுங்கள் உடனடியாக வருகிறேன். மணல் எடுக்க யாருக்கும் அனுமதி வழங்கப் படவில்லை, அப்படி எடுத்தால் சட்டப்படி நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும் என கிராமமக்களிடம் தெரிவித்துள்ளார். எனினும் அவரது பதிலால் திருப்தியடையாத நிலையில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.