நெற்பயிரை தண்ணீர் சூழும் அபாயம்
சீர்காழி, நவ.25- நாகை மாவட்டம் சீர்காழி அருகே பழையாறு துறைமுகப் பகுதியை ஒட்டி பக்கிம்காம் கால்வாய் செல்கிறது. வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் இந்தக் கால்வாய் நீர் வழி போக்குவரத்தாகப் பயன்படுத்தப்பட்டது. சென்னையி லிருந்து வேதாரண்யம் வரை சில பொருட்கள் விற்பனைக்கு படகின் மூலம் எடுத்துச் செல்ல இந்தக் கால்வாயை வெள்ளையர்கள் பயன்படுத்தினர். வேதாரண்யம் பகுதியில் எடுக்கப் படும் உப்பு இந்த வாய்க்கால் வழியே சென்னை போன்ற நகரங்களுக்கு முக்கிய பொருளாகப் படகின் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. அந்த வகையில் நீர்வழிப் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்ட பக்கிம்காம் கால்வாயின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தை கடந்து தான் பழையாறு மீன் பிடி துறைமுகத்துக்கு செல்ல முடியும்.
இந்த பக்கிம்காம் கால்வாய், மீனவர்களின் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப் பயன்படுகிறது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக பல இடங்களில் உள்ள மழை நீர் இந்தக் கால்வாயில் கலந்து வருவதால், பழையாறு அருகே புதுப்பட்டினம் மற்றும் புளியந்துறை ஆகிய கிராமங்களில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு பக்கிம்காம் கால்வாய் தண்ணீரில் மூழ்கியுள்ளது. கரையை ஒட்டியுள்ள சுமார் 200 ஏக்கர் தரிசு நிலங்களில் மழை நீர் புகுந்து தேங்கி நிற்கிறது. இக்கால்வாயில் ஓரத்தில் உள்ள நிலங்கள் தரிசாகக் கிடப்பதால் பாதிப்பு இல்லை. தொடர்ந்து மழை பெய்தால், பழையபாளையம், புளியந்துறை, புதுப்பட்டினம், தர்காஸ் ஆகிய கிராமங்களில் உள்ள சம்பா நெற்பயிரில் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.