தொலைதூரத்தில் தேர்தல் பணி பெண் ஊழியர்கள் கடும் அவதி
தஞ்சாவூர்: சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் வேலை செய்து வரும் ஆசிரியைகளுக்கு தொலைதூரத்தில் தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளதால் கவலை அடைந்துள்ளனர். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரு கட்டங்களாக வரும் டிச 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரிய, ஆசிரியைகளுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை தஞ்சையில் நடைபெற்றது. இதில் சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர். இதுகுறித்து ஆசிரியைகள் கூறியதாவது, “எங்கள் ஒன்றியத்தைச் சேர்ந்த பலருக்கு தஞ்சை, ஒரத்தநாடு ஒன்றியத்தில் தேர்தல் பணி ஒதுக்கப்பட்டு, பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தின் கடைசியில் இருந்து 95 கி.மீ தொலைவில் உள்ள தஞ்சை, 70 கி.மீ தொலைவில் உள்ள ஒரத்தநாடு மற்றும் ஊரகப் பகுதிகளில் பணி நியமனம் என்பது பெண் ஊழியர்களை அலைக்கழிக்கும் வகையில் உள்ளது. தற்போது மழைக்காலமாக இருப்பதால் கடும் சிரமங்களை அனுபவிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, பக்கத்தில் உள்ள பேராவூரணி, பட்டுக்கோட்டை ஒன்றியத்தில் தேர்தல் பணி வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
நீரில் மூழ்கி இளம்பெண் பலி
சீர்காழி: நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஒதவந்தான்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி சூர்யா என்பவரின் மனைவி ராஜலெட்சுமி (25). இவர் சம்பவத்தன்று வீட்டிற்கு சற்று அருகாமையில் உள்ள புதுமண்ணியாறு பாசன வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த போது ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். நீச்சல் தெரியாத ராஜலெட்சுமி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து புதுப்பட்டினம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடங்குளம் 2-வது உலையில் மின் உற்பத்தி நிறுத்தம் திருநெல்வேலி, டிச. 16- பராமரிப்பு பணிக்காக கூடங்குளம் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பராமரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரு அணு உலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் முதல் அணு உலை கட்டுமானப்பணி முடிவடைந்து கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மின் உற்பத்தி தொடங்கியது. 2014-ம் ஆண்டு டிசம்பர் 31 அன்று வணிக ரீதியிலான மின் உற்பத்தி தொடங்கி நடந்து வருகிறது. தொடர்ந்து 2-வது அணு உலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு முதல் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இதையடுத்து 2017-ம் ஆண்டு மார்ச் 31 முதல் 2-வது அணு உலையில் வணிக ரீதியிலான மின் உற்பத்தி தொடங்கியது. இந்த இரு அணு உலைகளில் இருந்தும் உற்பத்தியாகும் மின்சாரம் நெல்லை அபிசேகப்பட்டியில் உள்ள மத்திய மின் தொகுப்பில் இணைக்கப்பட்டு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தற்போது 3 மற்றும் 4-வது அணு உலைகள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் முதலாவது அணு உலையில் இருந்து 900 மெகாவாட் மின் உற்பத்தியும், 2-வது அணு உலையில் இருந்து 600 மெகாவாட் மின் உற்பத்தியும் செய்யப்பட்டு வந்தது. அணு உலைகள் பராமரிப்பு பணிக்காக சில நாட்கள் நிறுத்தி வைக்கப்படும். அதன்படி கடந்த அக்டோபர் 22 அன்று முதல் தொடர்ந்து இயங்கி வந்த 2-வது அணு உலை பராமரிப்பு பணிக்காக ஞாயிற்றுக்கிழமை நிறுத்தப்பட்டது. இதையடுத்து அந்த அணு உலையில் பராமரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் இரண்டாவது அணு உலையில் மின் உற்பத்தி நடக்கவில்லை. முதல் அணு உலையில் மட்டும் 900 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
‘துப்புரவுப் பணியை தனியாரிடம் கொடுக்க கூடாது’ தொழிலாளர் சங்க பேரவை வலியுறுத்தல் திருநெல்வேலி, டிச.16- துப்புரவு பணியை தனியாரிடம் கொடுக்க கூடாது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நெல்லையில் நடைபெற்ற துப்புரவு தொழி லாளர்கள் சங்க ஆண்டு பேரவை கூட்ட த்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்க புரத்தில் மாவட்ட சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கத்தின் ஆண்டு பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தி ற்கு சங்க மாவட்டப் பொருளாளர் சின்னசாமி தலைமை வகித்தார். சங்க மாநில சம்மேளன பொது செயலாளர் கணேசன், சிஐடியு மாவ ட்டச் செயலாளர் ஆர்.மோகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநாட்டில் ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும், துப்புரவு பணியை தனியாரிடம் கொடுக்கக் கூடாது, தேவைக்கேற்ப ஊழியர்களை பணியமர்த்த வேண்டும், பணிக்கொடை மற்றும் பென்சன் வழங்கிட வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ.18 ஆயிரம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்ப ட்டன. புதிய தலைவராக ஆர்.மோகன், பொதுச் செயலாளராக எஸ்.சின்னசாமி, பொருளாள ராக செல்வம் ஆகியோரும் 10 துணைத்தலை வர்கள் 10 துணைச் செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில் சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எஸ்.வண்ணமுத்து உள்ளிட்டோர் பேசினர்.