tamilnadu

img

மதுரை ஆதினம் முன் செய்தியாளர்கள்  தர்ணா

கஞ்சனூருக்கு  வருகை தந்த மதுரை ஆதினத்தின் செய்தியாளர் சந்திப்பின் போது பாஜகவினரின் அத்துமீறலை கண்டித்து ஆதினத்தின் முன் செய்தியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான கஞ்சனூர் சுக்கிரன் தலத்திற்கு நேற்று இரவு மதுரை ஆதீனம் முதன் முறையாக சுவாமி தரிசனத்திற்காக வருகை தந்தார். அப்போது ஊர் மக்கள் யாரும் அவரை வரவேற்க வரவில்லை. பாஜகவினர் மட்டும் கோவிலுக்கு வந்துள்ளனர்.  அதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ள மதுரை ஆதீனம், தனக்கு மிரட்டலும் அச்சுறுத்தலும் இருப்பதாகவும், இதுதொடர்பாக பிரதமரை விரைவில்  சந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  

அப்போது, பட்டினப்பிரவேசம் பல்லாக்கு தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, இந்த கேள்வி வேண்டாம் என்று பதிலளிக்க மறுத்துள்ளார்.  கஞ்சனூர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் குத்தகை பாக்கி உள்ளதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு மதுரை ஆதீனம் பதில் கூறுவதற்கு முன்னரே, அங்கிருந்த பாஜகவை சேர்ந்த திருப்பனந்தால் ஒன்றிய தலைவர் சிவகுமார் மற்றும் சிலர் செய்தியாளர்களை அங்கிருந்து வேகவேகமாக அப்புறப்படுத்த முயன்றுள்ளனர். இதனால் செய்தியாளர்களுக்கும் பாஜகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, செய்தியாளர்கள் மதுரை ஆதீனம் அறை முன்பு தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். அங்கிருந்த சிலர் செய்தியாளர்களைச் சமாதானப்படுத்தி தர்ணாவிலிருந்து கலைந்து போகச் செய்துள்ளனர்