தஞ்சாவூர், மே 26- பேராவூரணி அருகே ஆவணம் பகுதியில் குறைந்தழுத்த மின்சா ரத்தால் மின்சாதனப் பொருட்கள் இயங்காமல் தடைபடுவதால் மக்கள் தவித்து வருகின்றனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆவணம் கிளை சார்பில், ரியாஸ் தலைமையில் செவ்வாயன்று உதவி மின் பொறியாளரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் பேராவூரணி வட்டாரம் பெரிய நாயகிபுரம்-ஆவணம் பஞ்சாயத்தில் சில நாட்களாக மின்தடை அதிகரித்த வண்ணம் உள்ளது. மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகிறார்கள். குறைந்த அழுத்த மின்சாரம் வருவதால் வீட்டிற்கு குடிநீர் இறைக்க உதவும் மின் மோட்டார்கள் மற்றும் பஞ்சாயத்து குடிநீர் மின் மோட்டார்கள் பயன்படுத்த இயலவில்லை. மேலும் அடிக்கடி பழுதடைகின்றன. குறைந்த மின்னழுத்தத்தால் வீட்டு உபயோக எலெக்ட்ரானிக் பொருட்கள் பழுதடைகிறது. எனவே மின்னழுத்தத்தை சமநிலையில் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.