tamilnadu

img

உர விலையை உயர்த்தி விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து தஞ்சையில் ஆர்ப்பாட்டம்....

தஞ்சாவூர்:
விவசாயத் தேவைக்கான உரங்கள் மற்றும் இடுபொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து, தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு ஒன்றியங்களில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயம் தொடர்பான உரம் மற்றும் இடு பொருட்களுக்கான விலை உட்பட அனைத்து அதிகாரத்தையும் தனியாரிடம் ஒப்படைக்காமல் அரசே ஏற்க வேண்டும். இதுவரை இருந்து வந்த நடைமுறைக்கு மாறாக தற்போது உர விலையை, உற்பத்தி நிறுவனங்களே எந்த கட்டுப்பாடுமின்றி நிர்ணயித்துக் கொள்ளலாம் என்ற முடிவின் தொடர்ச்சியாக, தற்போது 60 சதவீதமான விலை உயர்வு விவசாயிகளை மிகவும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. 

இதன் காரணமாக, ஏற்கனவே ரூ.1,200-க்கு விற்கப்பட்ட டிஏபி உரம் தற்போது ரூ.1,900-க்கு வி‌ற்பனை செய்யப்படுகிறது. யூரியா தவிர அனைத்து உரங்களின் விலையும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் மீதும், விவசாயத்தின் மீதும் மத்திய அரசு நடத்தி வரும் தொடர் தாக்குதலைக் கண்டித்தும், உர விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தஞ்சாவூர் 
தஞ்சாவூர் ரயிலடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் தலைமை வகித்தார். இந்திய மாணவர் சங்கம் மாவட்டச் செயலாளர் ஜி.அரவிந்தசாமி, சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.கலைச்செல்வி, மாநகரச் செயலாளர் வசந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை ஒன்றியச் செயலாளர் எம்.மாலதி, ஏஐடியுசி துரை.மதிவாணன், மக்கள் கலை இலக்கியக் கழகம் ராவணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக்குழு சி.பாஸ்கர், தரைக்கடை வியாபாரிகள் சங்க (சிஐடியு) மாவட்டச் செயலாளர் மில்லர் பிரபு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாநகரச் செயலாளர் ஹரிபிரசாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

தஞ்சாவூர் ஒன்றியம்
தஞ்சாவூர் ஆலக்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் எஸ்.ஞானமாணிக்கம் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் கண்டன உரையாற்றினார். சிபிஎம் தஞ்சாவூர் ஒன்றியச் செயலாளர் எம்.மாலதி, விதொச ஒன்றியப் பொறுப்பாளர் ஏ.கருப்புசாமி, என்.கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டை தலைமைத் தபால் நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் எம்.செல்வம் தலைமை வகித்தார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி, த.வி.ச மாவட்டக்குழு உறுப்பினர் திருவோணம் கே.ராமசாமி, மதுக்கூர் ஏ.எம்.வேதாச்சலம் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

பூதலூர் 
பூதலூர் வடக்கு ஒன்றியம் திருக்காட்டுப்பள்ளியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் உதயகுமார் தலைமை வகித்தார். பூதலூர் தெற்கு ஒன்றியம், பூதலூர் 4 சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் தலைமை வகித்தார். 

ஒரத்தநாடு 
ஒரத்தநாட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்க மாவட்டத் துணைத் தலைவர் கோவிந்தராசு தலைமை வகித்தார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் என்.சுரேஷ்குமார், நகரச் செயலாளர் வசந்தகுமார், வி.ச ஒன்றியத் தலைவர் மோகன்தாஸ், சசிகுமார், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஜெய்சங்கர், வி.சிதம்பரம், கிளைச் செயலாளர் சௌந்தர்ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

திருவையாறு 
திருவையாறு பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் எம்.ராம் தலைமை வகித்தார். வி.ச மாவட்டப் பொருளாளர் எம்.பழனிஅய்யா, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா, நகரச் செயலாளர் விஜயகுமார், வி.தொ.ச ஒன்றியச் செயலாளர் பிரதீப் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

அம்மாபேட்டை 
அம்மாபேட்டை ஒன்றியம் கோவிலூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் கே.முனியாண்டி தலைமை வகித்தார். ஒன்றியத் தலைவர் கருப்பையன், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.பக்கிரிசாமி, ஒன்றியச் செயலாளர் ஏ.நம்பிராஜன், மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.கலைச்செல்வி, ஒன்றியக்குழு உறுப்பினர் தங்கையன் மற்றும் கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

;