tamilnadu

img

கும்பகோணம்: விஷவாயு தாக்கி துப்புரவு தொழிலாளி பலி

கும்பகோணத்தில் விஷவாயு தாக்கி துப்புரவுத்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேலக்காவிரி பகுதியை சேர்ந்தவர் சாதிக்பாட்சா(55). இவர் நகராட்சி தனியார் ஒப்பந்ததாரரிடம் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வந்தார். கும்பகோணம் ரயில் நிலையம் சாலையில் கடந்த 2 நாட்களாக பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டதாக புகார் வந்தது. அதன் பேரில் பராமரிப்பு பணிக்காக மேற்பார்வையாளர் ராஜா தலைமையில் துப்புரவு தொழிலாளர்கள் விபுத்ரன், வீரமணி, பாக்யராஜ், சாதிக்பாட்சா ஆகிய 4 பேரும் நேற்று மாலை 4 மணி அளவில் ரயில் நிலையம் எதிரே உள்ள பேருந்து நிறுத்தம் அருகே பாதாள சாக்கடை பராமரிப்பு பணியை தொடங்கினர்.
அப்போது பாதாள சாக்கடையில் ஆள் இறங்கும் குழியின் மூடியை 4 பேரும் சேர்ந்து அகற்றினர்.இதையடுத்து சாதிக்பாட்சா மட்டும் உடைகளை கழற்றிவிட்டு பிளாஸ்டிக் பைப்பால் பாதாள சாக்கடையின் அடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது சாக்கடையில் இருந்து விஷவாயு வெளியேறி அவரை தாக்கியது. இதில் மயக்கம் அடைந்த அவர் பாதாள சாக்கடைக்குள் விழுந்தார்.  சாதிக்பாட்சா விஷவாயு தாக்கியதில் மூச்சுத்திணறி இறந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து ராஜா, தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு படை வீரர்கள் இரவு 8.30 மணிக்கு சாதிக்பாட்சாவின் உடலை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு  செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.