tamilnadu

மணக்காடு கிராமத்தில் மின்தட்டுப்பாடு: மின்வாரியத்தைக் கண்டித்து மார்ச் 27-ல் பொதுமக்கள் மறியல்

 தஞ்சாவூர்: பேராவூரணி அருகே மணக்காடு கிராமத்தில் நிலவும் மின்பற்றாக்குறையை சரி செய்யாத மின்சார வாரியத்தைக் கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம் மணக்காடு ஊராட்சி, மணக்காடு கிராமத்தில் நீண்ட நாட்களாக நிலவும் மின் பற்றாக்குறையால், குடியிருப்பு பகுதியில் தர்ம ஊரணிக்கு அருகில் அமைந்திருக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, காவிரி கூட்டுக் குடிநீர் நீரேற்று நிலையம், தொடக்கப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள நீர்த்தேக்க தொட்டிகளில் தேவையான குடிநீர் நிரப்பிட முடியாமல் உள்ளது.  இதனால் கிராம மக்களும், மாணவர்களும் குடிநீரின்றி தவிக்கும் நிலை உள்ளது. மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் தூற்றும், எடை வைக்கும் மின் கருவிகளும் இயக்க முடியாமல் உள்ளது. இப்பகுதியின் தேவை கருதி மின்சார வாரியத்தால் புதிய மின் மாற்றி ஒதுக்கீடு செய்து, பல மாதங்களாகியும் பயன்பாட்டுக்கு வரவில்லை.  இந்த மின்மாற்றியை பயன்பாட்டுக்கு கொண்டு வரக்கோரி, மின் வாரியம் மற்றும் அலுவலர்களிடம் பலமுறை விண்ணப்பங்கள் அளித்தும் பயனில்லை. நேரடியாக பலமுறை முறையிட்டும் இதுகுறித்து மின் வாரிய அலுவலர்கள் மிகுந்த அலட்சியப் போக்கோடு நடந்து கொள்கிறார்கள். உடனடியாக அமைத்துத் தருவதாக கூறி சாக்குப்போக்கு சொல்லி நாட்களை கடத்துகிறார்கள்.  இன்னும் ஒரு வார காலத்திற்குள் மின்மாற்றியை செயல்பாட்டுக்கு கொண்டு வரவில்லை என்றால், ஊர் பொதுமக்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள் சார்பில் ரெட்டவயல் கடைத்தெருவில் மார்ச் 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று  போராட்டக்குழு சார்பில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் வீ.கருப்பையா தெரிவித்துள்ளார்.