tamilnadu

நெற் பயிரில் குலைநோய் தாக்குதல் கட்டுப்படுத்தும் முறைகள்

 தஞ்சாவூர் டிச.21- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாரத்தில் தொடர் மழைக்குப் பிறகு தற்சமயம் மிதமான தட்பவெப்பம் நிலவுதால்  சாகுபடி செய்யப்பட்ட சம்பா பயிரில் நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. குறிப்பாக, குலைநோயின் தாக்குதல் தென்பட வாய்ப்புள்ளதால் விவசாயிகள் முன்னெச்சரிக்கை யுடன் தொடர் கண்காணிப்பு மேற்கொண்டு தங்கள் வயலை நோய் தாக்குதலிருந்து காப்பாற்றிக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். இலைகளின் மேல் சாம்பல் நிற கண் வடிவ புள்ளிகள் காணப் பட்டால் அது குலை நோயின் அறிகுறியாகும். தற்சமயம் கதிர்  உருவாகும் பருவத்தில் கதிரின் கழுத்துப்பகுதியில் குலைநோய் ஏற்பட்டால், கழுத்துப்பகுதி கருப்பு நிறமாக மாறி சுருங்கி வளர்ச்சி பாதிக்கப்பட்டு கழுத்துப்பகுதி ஒடிந்து தொங்கும். இதனால் பெருமளவு மகசூல் பாதிப்பு எற்படும். இதனைக் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு 1 கிலோ சூடோமோனஸ் புளோரோசன்ஸ் பவுடரை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும் அல்லது ஒரு ஏக்கருக்கு 200 கிராம் கார்பன்டாசிம் அல்லது 200 கிராம் டிரைசைக்லோசோல் இதில் ஏதாவது ஒன்றை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிர் நன்கு நனையும் படி தெளிக்க வேண்டும்” இவ்வாறு பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.மாலதி தெரிவித்துள்ளார்.