தஞ்சாவூர்:
5 ஆயிரம் ஏக்கர் பரப்பு சாகுபடிக்கு தண்ணீர திறக்காததை கண்டித்து, புதுக்குடிஅருகே வாய்க்காலுக்குள் இறங்கி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தஞ்சை மாவட்டம், பூதலூர் தாலுகா வெண்டையம்பட்டி, ராயமுண்டான்பட்டி, நவலூர், வடுகன் புதுப்பட்டி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தண்ணீர்பாசனம் தரக்கூடிய உய்யக்கொண்டான் வாய்க்காலில், மேட்டூர் அணை திறந்து 4 மாதமாகியும், கரூர் மாவட்டம் மாயனூர்காவிரி ஆற்று தடுப்பணையிலிருந்து, ஆக. 26 ஆம் தேதி வாழவந்தான்கோட்டையில் தண்ணீர் திறந்து விடப்பட்டும், இதுவரை உய்யக் கொண்டான் வாய்க்காலுக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.
இதனால் 50 ஏரிகளில் தண்ணீர் நிரப்பமுடியாமல், 5 ஆயிரம் ஏக்கர் பரப்புவிளைநிலங்களில் நாற்று நட முடியாமலும், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், வேறு வழி இல்லாமல் வெள்ளிக் கிழமை தஞ்சை மாவட்டம் புதுக்குடியில் உள்ள உய்யக்கொண்டான் பாசன ஏரிக்குள் இறங்கி பொதுப் பணித்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச்செயலாளர் என்.வி.கண்ணன் தலைமை வகித்தார். சிபிஎம் பூதலூர் தெற்கு ஒன்றியச்
செயலாளர் சி.பாஸ்கர் முன்னிலை வகித்தார். விதொச ஒன்றியச் செயலாளர் வியாகுலதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து, பூதலூர் வட்டாட்சியர் சிவகுமார், பொதுப்பணித்துறை திருச்சிஆற்றுப்பாசனக் கோட்டம் செயற்பொறியாளர் கண்ணன் மற்றும் காவல்துறையினர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடனடியாக மாலையிலேயே தண்ணீர் திறந்து விடப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.