tamilnadu

img

கிராம காவல் தெய்வங்கள்  சுடுமண்ணால் படைக்கப்படுகிறது கைவினைக் கலைஞர் வி.கே.முனுசாமி தகவல்

 தஞ்சாவூர், அக்.17- கிராமக் காவல் தெய்வங்கள் பழங்காலந்தொட்டே சுடுமண்ணால் படைக்கப்படுகிறது என புதுச்சேரி சுடுமண் கைவினை கலைஞர் வி.கே.முனுசாமி தெரிவித்தார்.  தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சிற்பத்துறை சார்பில் கடந்த திங்களன்று பக்தவச்சலனார் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு நடைபெற்றது. இதில் அவர் பேசுகையில், “சுடுமண் என்றாலே கிராமங்கள் தான் நம் முன்னே காட்சியளிக்கும். கிராமங்களில் காவல் தெய்வமாக தொன்றுதொட்டு வணங்கப்பட்டு வரும் அய்யனார், மாரியம்மன், காளியம்மன், முத்தாலம்மன், கருப்பசாமி, பைரவர், மதுரைவீரன், நொண்டிக் கருப்பு போன்ற எல்லை, காவல், குல தெய்வங்கள் மற்றும் அவற்றின் வாகனங்களும் சுடு மண்ணாலேயே செய்யப்பட்டன.  கிராமக் கோயில்களில் இன்றைக்கும் சுடுமண்ணால் செய்யப்பட்ட இறை வடிவங்களும், பொம்மைகளும் ஏராளமாக வைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் திருவிழா காலங்களில் மட்டும் இறை உருவங்கள் செய்து வணங்கிவிட்டு, திருவிழா முடிந்ததும் எடுத்துச் சென்று சிதைத்து விடுவர்” என்றார்.  முன்னதாக சிற்பத் துறை தலைவர் பா.ஷீலா வரவேற்றார். உதவிப்பேராசிரியர் வே.லதா நன்றி கூறினார்.