தஞ்சாவூர்:
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் அவரது சொந்த ஊரான ராஜகிரி கிராமத்தில் அரசு மரியாதையுடன் ஞாயிற்றுக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் ராஜகிரி கிராமத்ததை சேர்ந்தவர் வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு,72. கடந்த 13 ஆம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப் பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், சனிக்கிழமை இரவு 11.15 மணிக்கு மரணமடைந்தார்.இதையடுத்து, இவரது உடல் ராஜகிரி கிராமத்துக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மதியம் 1 மணிக்கு ஆம்புலென்ஸ் மூலம் கொண்டுவரப் பட்டது. அவரது உடலை கண்ட மனைவி, மகன், மகள்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.பின்னர், வீட்டின் பின்புறம் உள்ள அய்யனார் கோவில் திடலில், அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.
சுகாதார துறையினர் அவரது உடலை, ஆம்புலென்ஸ் வாகனத்தில் இருந்து சிகப்பு கம்பளம் விரிக்கப்பட்ட மேடையில் வைத்தனர். பின்னர் போலீசார் முழு அரசு மரியாதையுடன் எடுத்து வரப்பட்ட தேசியகொடியை அவரது உடல்மீது போர்த்தினர்.இதை தொடர்ந்து துரைக்கண்ணு வின் உருவப்படத்துக்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அமைச்சர்கள் வேலுமணி (உள்ளாட்சித் துறை), தங்கமணி (மின்சாரத் துறை), அன்பழகன் (உயர் கல்வித் துறை) மணியன் (கைத்தறித் துறை), வெல்லமண்டி நடராஜன் (சுற்றுலா துறை), வளர்மதி (பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை), காமராஜ்(உணவுத்துறை), செங்கோட்டையன் (கல்வித்துறை), சண்முகம் (சட்டத்துறை), உடுமலை ராதாகிருஷ் ணன் (கால்நடைத்துறை), ராஜேந்திர பாலாஜி(பால்வளத்துறை), துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி, ராஜய்சபா எம்.பி., வைத்திலிங்கம், தேனி தொகுதி எம்.பி., ரவீந்திரநாத் குமார், ஆட்சியர் கோவிந்த ராவ் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து பொதுமக்கள் ஆயிரக் கணக்கனோர் அஞ்சலி செலுத்தினர்.பின்னர், வன்னியடி சாலையில் உள்ள மணல்மேட்டில் உள்ள அவருக்குசொந்தமான தோப்பில், கொரோனா விதிமுறைப்படியும், அரசு மரியாதையுடனும், 21 போலீசார் 63 குண்டுகள்முழங்க அவரது உடல் ஞாயிற்றுக் கிழமை மாலை 4.50 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது. மத்தியமண்டல ஐ.ஜி.,ஜெயராம், எஸ்.பி., தேஷ்முக் சேகர் சஞ்சய் தலைமையிலான 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
தொடர்ந்து 3 முறை வென்றவர்
மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு இளங்கலைப் பட்டப்படிப்பு (பி.ஏ.) படித்தவர். தொடக்கத்தில் கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றிய இவர், 1972ம் ஆண்டில் அ.தி.மு.க.,வில் இணைந்தார். கிளைக் கழகச் செயலர், மாணவரணி, இளைஞரணியில் பல்வேறு பொறுப்புகளை வகித்த இவர் எம்.ஜி.ஆர். காலத்திலேயே பாபநாசம் ஒன்றியக் கழகச் செயலரானார். இதேபோல, ஜெயலலிதா காலத்திலும் ஒன்றியச் செயலராகப் பதவி வகித்த இவர் கடந்த 2018ம் ஆண்டு முதல் தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலராக இருந்து வந்தார். இதனிடையே, மாவட்ட வேளாண் விற்பனைக் குழுத் தலைவராகவும் இருந்தார்.இவர் 2006– 2011ம் ஆண்டுகளிலும், 2011–16ம் ஆண்டுகளிலும் பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தார். இதே தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக 2016ம் ஆண்டுசட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, வேளாண் துறை அமைச்சரானார். இவருக்கு மனைவி பானுமதி, 4 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகன் சிவ வீரபாண்டியன் வேளாண் துறையில் விதை சான்று உதவி இயக்குநராகவும், இளைய மகன் அய்யப்பன் தற்போது மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் செயலராக உள்ளார்.