tamilnadu

img

சத்தமில்லாமல் ஒரு சாதனை! - சி.ஸ்ரீராமுலு

விளையாட்டு உலகில் தினம் தினம் பல சாதனை நிகழ்த்தப்படுகி றது. அதில் ஒரு சிலரின் சாதனைகள் மட்டுமே நிலைத்து நிற்கிறது. சமீபத்தில் இந்திய  வீராங்கனைகள் 3 பேர் சர்வதேச அளவில் தங்கப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தனர். இதில் இரண்டு வீராங்கனைகளின் வெற்றியை நாடே தூக்கிவைத்துக் கொண்டாடியது. சத்தமே இல்லாமல் சாதித்த மற்றொரு வீராங்கனையின் வெற்றி பெரிதாக பேசப்படவில்லை. அவர் தங்கம் வென்றதையும் முதலில் ஊடகங்கள் கண்டு கொள்ளவில்லை. கடினமாக உழைத்தால் சாதிக்க முடியும் என்பதை 130 கோடி மக்களுக்கும் நிரூபித்துக் காட்டியிருக்கும் அந்த இளம் வீராங்கனை மானசி ஜோஷி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்தவர்.

வலியோடு...
 

சர்வதேச அளவில் கால் பதிக்க வேண்டிய அந்த தருணம், இப்படி ஒரு நிலை ஏற்படும் என்று ஒருபோதும் நினைத்தது கிடையாது.  கடந்த 2011 ஆம் ஆண்டு இருசக்கர வாகனத்தில் அலுவலகம் செல்லும்போது வழியில் விபத்தில் சிக்கினார். கை-கால் முறிந்தது. உடலில் பலத்த காயங்கள். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. சுமார் 3 மணி நேரம் கழித்து கொண்டு செல்லப்பட்ட அவருக்கு சுமார் 10 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது. ஆனாலும் இடது கால் அகற்றப்பட்டது. தீவிர சிகிச்சைக்கு பிறகு செயற்கை கால் பொருத்தப்பட்டு நடைபயிற்சியை மேற்கொண்டார். அதில் வெற்றியும் பெற்றார். விளையாட்டு மீது கொண்டிருந்த அளவு கடந்த ஆர்வத்தால் தினசரி உடற் பயிற்சியோடு பேட்மிண்டன் பயிற்சியையும் தொடர்ந்தார். 2 ஆண்டு கால பயிற்சிக்குப் பின்னர் தொழில்முறை பாரா பேட்மிண்டன் வீராங்கனையாக மாறினார்.

இவர் அவரல்ல!

உலக பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து முதன் முறையாக தங்கம் வென்று சரித்திரம் படைத்த அதே ஸ்விட்சர்லாந்து நாட்டில், ஒரு நாள் முன்னதாக உலக பாரா (மாற்றுத்திறனாளிகளுக்கான) பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியும் நடைபெற்றது. உலகின் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையும் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அதிக அனுபவமும் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றவரும் சக நாட்டு வீராங்கனையுமான பருல் பார்மரை மிக மிக எளிதில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் மானசி ஜோஷி. அவர் பெரும் முதல் பட்டம் மட்டுமல்ல பி.வி.சிந்து பயிற்சி பெற்றுவரும் கோபிசந்த் அகாடமியில் தான் பயிற்சி பெற்றார். சிரமங்களை சமாளித்து எவ்வாறு வெற்றி அடைவது என்பதை எல்லோரும் மானசி ஜோஷியிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். உலக பாரா பேட்மிட்டன் போட்டியில் 12 பதக்கங்கள் வென்ற இந்திய விளையாட்டு வீராங்கனைகளில் மானசி ஜோஷியும் ஒருவர். அவரது தன்னம்பிக்கை, நாட்டிற்கு பெருமை சேர்த்ததும் பி.வி. சிந்துக்கு தங்கம் கிடைத்ததில் ஜோஷியின் சாதனையை போற்ற மறந்து விட்டார்கள்.

வல்லமை...

8 வயதில் தந்தையுடன் பேட்மிண்டன் விளையாடி துவங்கிய இவர், இளங்கலையில் பட்டம் பெற்றாலும் கணினி அறிவியல் மீதான ஆர்வத்தால் மும்பை பல்கலைக்கழகத்தில் பொறியியல் (எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்) பட்டத்தையும் முடித்தாலும் பேட்மிண்டன் போட்டி எங்கு நடந்தாலும் கலந்துகொண்டு வெற்றி பெறுவார். தேசிய அளவிலும் பதக்கம் வென்றார். சிறந்த எதிர்க்காலத்தால் மென்பொறியாளர் பணியை உதறித்தள்ளி முழு நேரமும் விளையாட்டில் கவனம் செலுத்தியபோதுதான் அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது. ஆனாலும், நம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை. ஒருகால் அல்லது இரண்டு கால்களையும் இழந்தவர்கள், நடக்க முடியாதவர்கள், ஓட முடியாதவர்கள் விளையாடும் எஸ்எல்-3 மாற்றுத் திறனுடையோர் மட்டும் பங்கேற்கும் பேட்மிண்டனில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு 2015 ஆம் ஆண்டில் கலப்பு இரட்டையர் பிரிவில் முதல் வெள்ளிப் பதக்கத்தை தட்டினார்.  

2017-ல் வெண்கலப் பதக்கமும் வென்றார். சர்வதேச போட்டிகளில் 7 வெள்ளி, 12 வெண்கலப் பதக்கங்களை வென்றாலும் தங்கப் பதக்கம் வெல்ல முடியவில்லை என்ற ஏக்கத்தையும் இந்த ஆண்டு நிறைவேற்றி அனைவரையும் பெருமைபட செய்து உலக தரவரிசையில் 2வது இடத்திற்கு முன்னேறினார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் 1982 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வுபெற்ற கிரீஸ் ஜோஷி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர்.  இவரது மூத்த மகன் குஞ்சன் ஜோஷி பூச்சியியல் துறை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இரண்டாவது மகள் மானிஷா ஜோஷி. மூன்றாவது மகள் நுன் ஜோஷி அனைவரும் மும்பையில் வசித்து வருகிறார்கள். அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது இவரது அடுத்த இலக்கு என்றாலும், அது தனிநபர் பிரிவில் முடியாது.

காரணம், ஒலிம்பிக்கில் இந்த முறை ஒற்றையர் போட்டி கிடையாது. ஆனாலும் கலப்பு இரட்டையர் பிரிவு உள்ளதால் தனது இணையாரான ராஜேஷ் பாண்டேவுடன் இந்த பிரிவில் பங்கேற்று பதக்கம் வெல்ல பயிற்சியை மேலும் தீவிரமாக்கியிருக்கிறார்.  ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்றால் முதல் ஆறு இடங்களுக்குள் வர வேண்டும். தற்போது 13வது இடத்தில் உள்ளதால் விடா முயற்சியையும், தன்னம்பிக்கையையும் இழக்காத மானசி, முதல் 6 இடத்திற்குள் இடம் பிடித்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்று  லட்சியத்தை நிறைவேற்றுவார்.