tamilnadu

img

ஊரடங்கால் முடங்கிப்போன தையல்  தொழில் வாழ்வாதாரத்திற்கு வழிசெய்யக் கோரிக்கை

 தமிழகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான சிறிய, பெரிய ஆயுத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான நிறுவனங்கள் சென்னை, திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ளன. தமிழகம் முழுவதும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட தையல் தொழிலாளர்கள் உள்ளனர். “ஆள் பாதி ஆடை பாதி” என்பார்கள், ஆனால் கொரோனா நோய் காரணமாக கடந்த 40 நாட்களாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இந்த தையல் தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து சென்னை பெருநகர தையல் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் சி.திருவேட்டை கூறுகையில், இந்த தையல் தொழிலில் 80 விழுக்காடு பெண்கள் ஈடுபட்டுள்ளனர். ஆடைகள் தயாரிக்கும் பெரிய நிறுவனங்களில் 6 லட்சம் பேர் வேலை செய்கின்றனர். இந்த 6 லட்சம் தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ. வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட சலுகைகள் உண்டு. அதேபோல் தோல் பை உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கும் நிறுவங்களில் சுமார் 1 லட்சம் தையல் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.

மாநிலம் முழுவதும் 79 மகளிர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இதில் உறுப்பினராக உள்ள ஒரு லட்சம் தொழிலாளர்கள் அரசின் இலவச பள்ளி சீருடை தைத்து கொடுப்பவர்கள். இவர்களுக்கு இ.எஸ்.ஐ. வருங்கால வைப்பு நிதி போன்ற சலுகைகள் எதுவும் கிடையாது. இவர்கள் ஒரு பேண்ட், ஒரு சட்டை தைத்து கொடுத்தால் அவர்களுக்கு வழங்கும் கூலி வெறும் 52 ரூபாய். இதிலும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை அரசு கூலி பாக்கி வைத்துள்ளது. அப்படி சுமார் 1 கோடி ரூபாய் வரை அரசு பாக்கி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுமட்டுமல்லாமல் சாதாரண கடைகளில் வேலை செய்பவர்கள் 2 லட்சம் பேர் உள்ளனர். வீட்டிலேயே வைத்து தையல் வேலை செய்பவர்கள் 8 லட்சம் பேர் உள்ளனர். இந்த 10 லட்சம் தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ. வருங்கால வைப்பு நிதி போன்ற எந்த சலுகையும் கிடையாது.

அரசின் நலவாரியாத்தில் சுமார் 1 லட்சம் பேருக்கு குறைவானவர்களே பதிவு செய்திருப்பார்கள். அவர்களுக்கு அரசு ஆயிரம் ரூபாய் மட்டும் நிவராணமாக வழங்குகிறது. ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதில்லை. எனவே அரசு அனைத்து தையல் தொழிலாளர்களையும் கணக்கெடுத்து அனைவருக்கும் மாதம் 5 ஆயிரம் ரூபாய் வீதமும், ரேஷன் பொருட்களும் வழங்க வேண்டும்.  கடை வைத்திருப்பவர்களுக்கு மொத்தத்தில் (கடை வாடகை உள்ளிட்டு குடும்ப செலவுகளுக்கு) 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். 3 மாதத்திற்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். அதேபோல் ஊதியம் வழங்காத ஏற்றுமதி ஆடை நிறுவனங்களை கண்டறிந்து ஊதியம் வழங்க் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆடைகள் தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து (முகவர்கள்) ஒப்பந்த அடிப்படையில் துணிகளை எடுத்து தைத்து கொடுக்கும் தொழிலாளர்களை கணக்கெடுத்து அரசு நிவாரணம் வழங்க வேண்டும். ஆடை தயாரிக்கும் நிறுவனங்களும் இந்தத் தொழிலாளர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்றார்.

திருமுல்லைவாயல் சரஸ்வதி நகரில் வசிக்கும் தையல் தொழிலாளி நடேசன் என்பவர் கூறுகையில், நான் சிறிய தையல் கடை நடத்தி வருகிறேன். எனக்கு உதவியாக எனது மனைவி செந்தூர்கனி தைத்து கொடுப்பார். சில ஆண்டுகளாகவே ஆயத்த ஆடைகளின் (ரெடிமேட் ஆடைகள்) உபயோகம் அதிகமானதால், துணி எடுத்து தைப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. ஏற்கனவே தொழில் நசிந்து போயுள்ள நிலையில், தற்போது கொரோனா நோய் காரணமாக கடந்த 40 நாட்களாக கடையை திறக்க முடியவில்லை. இதனால் எந்த வருமானமும் இன்றி குடும்பம் நடத்தவே அவதிப்படுகிறோம். நாங்கள் வாடகை வீட்டில்தான் குடியிருக்கிறோம். வீட்டு வாடகை, கடை வாடகை இரண்டும் சேர்த்து 9 ஆயிரம் ரூபாய். வீட்டிற்கும், கடைக்கும் சேர்த்து மின்சார கட்டணம் 1,500 ரூபாய் செலவாகிறது. இதுபோக குழந்தைகளை படிக்க வைக்க வேண்டியுள்ளது.

நாங்கள் இருவரும் நலவாரியத்தில் உறுப்பினராக உள்ளோம். ஆனால் அரசு அறிவித்த 1,000 ரூபாய் நிதி கூட இன்னும் கிடைக்கவில்லை. ஊரடங்கு முடிந்து நாங்கள் கடையை திறந்தால் கூட, வழக்கம் போல் மீண்டும் வேலை வர குறைந்தபட்சம் 6 மாதமாகும். எனவே அரசு எங்களுக்கு குறைந்தபட்சம் மாதம் 5 ஆயிரம் ரூபாயும், ரேஷன் கடை மூலம் இலவச பொருட்களும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் கடைக்கு 6 மாத காலத்திற்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்றார்.