சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இன்று 6 இடங்களில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக உள்ள ஜெகநாதன், பூட்டர் பவுண்டேஷன் என்ற நிறுவனத்தை தொடங்கி, பல்கலைக் கழகத்தில் பணியாற்றக்கூடிய ஆசிரியர்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழக தொழிற் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங் கோவன் என்பவர் அரசு அனுமதி பெற்று சேலம் கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அதிரடியாகச் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திலிருந்து துணை வேந்தர் ஜெகநாதனை கடந்த டிச.26 ஆம் தேதி காவல் துறையினர் கைது செய்தனர். அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட துணைவேந்தர் ஜெகநாதனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், சேலம் பல்கலைக்கழக துணைவேந்தர் முறைகேடு தொடர்பான பல்வேறு ஆவணங்களை கைப்பற்றப்பட்ட நிலையில், இன்று பதிவாளர் அறை, துணைவேந்தர் அறை, பேராசிரியர்கள் இல்லம் உள்ளிட்ட 6 இடங்களில் காவல்துறையினர் மீண்டும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
முறைகேடு புகாரில் கைதாகி ஜாமீனில் உள்ள துணைவேந்தர் ஜெகநாதனை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.