தொழிலாளிக்கு கொலை மிரட்டல்- ஒருவர் கைது
தாராபுரம், மே 25 -தாராபுரத்தில் தொழிலாளிக்கு கொலைமிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.தாராபுரத்தை அடுத்துள்ள கொளிஞ்சிவாடி மீனாட்சிபுரத்தை சேர்ந்த மருதாசலம் என்பவரின் மகன் பிரபாகரன் (29). கூலித்தொழிலாளியான பிரபாகரன் தனது பாட்டியுடன் மீனாட்சிபுரத்தில் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு எதிரே வசித்து வருபவர் விவசாயி சாமிநாதன் (37). இவர் வீட்டில் மாடு வளர்ப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, பிரபாகரன் மற்றும் அவருக்கு ஆதரவாக பேசியஅவரது அண்ணன் வீரக்குமார் ஆகிய இருவரையும் சாமிநாதன் கம்பியால் தாக்கி கொலை மிரட்டல்விடுத்துள்ளார். இதில் காயமடைந்த வீரக்குமார்தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பிரபாகரன் அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து சாமிநாதனை கைது செய்தனர்.
தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கூட்டம்
சேலம், மே 25-சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கூட்டம் சனியன்று நடைபெற்றது.சேலம் ஐந்து ரோடு அருகே உள்ள தியாகராஜர் பாலி டெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கூட்டம் பாலிடெக்னிக் கல்லூரியின் தலைவர் வள்ளியப்பா, தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் பிரதிநிதி முன்னிலையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கலந்தாய்வில் சிவில், மின்னியல், மின்னணுவியல், உற்பத்தியியல், கணிப்பொறி யியல் உள்ளிட்ட 9 வகையான பாடப்பிரிவுகள் உள்ளன. மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், தரவரிசைப் பட்டியல் மற்றும் அரசின் இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலும், காலி இடங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.இந்த கலந்தாய்வில் ஏராளமான மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோருடன் வந்துகலந்து கொண்டனர், இன்றும் (மே 26) கலந்தாய்வு கூட்டம் நடை பெறுகிறது.