இளம்பிள்ளை, மே 2- சேலம் மாவட்டம், இளம்பிள்ளையில் வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல கிராம நிர்வாக அலுவலகம் முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது .
மத்திய அரசு மேலும் இரண்டு வாரங்களுக்கு என மே 17 ஆம் தேதி வரை பொது ஊரடங்கை நீட்டித்து அறிவித்துள்ளது. இந்தநிலையில் இளம்பிள்ளை சுற்றியுள்ள இடங்கணசாலை, பெருமாகவுண்டம்பட்டி, நடுவனேரி, வேம்படிதாளம், மகுடஞ்சாவடி, கே.கே.நகர், தப்பக்குட்டை, சித்தர்கோவில், உள்ளிட்ட பகுதிகளில் வட மாநிலத்தை சேர்ந்த 5000 மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். கடந்த 40 நாட்களுக்கு மேலாக வேலை இல்லாமலும் , போதிய உணவின்றி தவித்து வருகின்றனர். இருப்பினும் மாநில , மாவட்ட நிர்வாகம் உதவிகளை செய்து வருகின்றன.
இச்சூழலில் மத்திய அரசு வட மாநில தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு சிறப்பு ரயில்கள் இயக்க உத்தரவு பிறப்பித்த நிலையில், இளம்பிள்ளை கிராம நிர்வாக அலுவலகம் முன்பு வட மாநிலத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு செல்ல விருப்ப மனுக்கள் அளிக்க திரண்டிருந்தனர். ஏற்கனவே 200-க்கு மேற்பட்டோர் விண்ணப்பங்கள் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோன்ற இடங்கணசாலை, வேம்படிதாளம், தப்பக்குட்டை, மகுடஞ்சாவடி உள்ளிட்ட கிராம நிர்வாக அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். மேலும் அந்த விருப்பம் மனுவில் பெயர், முகவரி,செல் நம்பர், ஆதார் எண் செல்லும் மாநிலம் உள்ளிட்ட விவரங்களை வருவாய்த்துறையினர் சேகரித்து வருகின்றனர்.