நாகர்கோவில், மார்ச் 31- “பல்வேறு மாநிலங்களில் இந்தியா கூட்டணி சுமூக உடன்பாடு கண்டிருப்பதுதான் பாஜகவை அச்சுறுத்திக்கொண்டே இருக்கிறது” என்று கே.பாலகிருஷ்ணன் கூறினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மார்ச் 30 சனிக்கிழமையன்று குழித்துறையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி தலைமை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.லீமாறோஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அண்ணாத்துரை ஆகியோர் பேசினர். இக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:
கடந்த பத்தாண்டுகளில் இல்லாத வகையில் மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தும் ஒன்றுதிரண்டு இந்தியா கூட்டணியாக வளர்ந்திருக்கிறது.
நாடு முழுவதும் பாஜகவை வீழ்த்துவதுதான் இந்தியா கூட்டணியின் முக்கிய நோக்கம். வட மாநிலங்களில் எங்கெல்லாம் பாஜக கோட்டை என்கிறார்களோ அங்கெல்லாம் இந்தியா கூட்டணி வெற்றிகரமாக தொகுதி உடன்பாடு கண்டுள்ளது. மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், பீகார், அசாம் ஆகிய மாநிலங்களில் சுமூகமான உடன்பாடு ஏற்பட்டுள்ளது. பல வடகிழக்கு மாநிலங்களிலும் இந்தியா கூட்டணி கட்சிகளுக்குள் உடன்பாடு ஏற்படும் நிலை உள்ளது.
திடீர் சம்பள உயர்வு ஏன்?
பல்வேறு மாநிலங்களில் இந்தியா கூட்டணி உடன்பாடு கண்டிருப்பதுதான் பாஜகவை அச்சுறுத்திக்கொண்டே இருக்கிறது. கடந்த சில நாட்களாக மோடியின் முகத்தைப்பார்த்தாலே தெரியும். அச்சத்தின் வெளிப்பாடாக அவரது நடவடிக்கைகள் உள்ளன. இதைத்தான் நூறுநாள் வேலைக்கான சம்பளத்தை திடீரென உயர்த்தியிருப்பதில் பார்க்க முடிகிறது. இத்திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கவும், நகர்ப்புறத்துக்கு விரிவாக்கம் செய்யவும் கேட்டு தொடர்ச்சியாக நாம் போராட்டம் நடத்தினோம். மோடி அரசு அதற்கு நேர்மாறாக நிதி ஒதுக்கீட்டைக் குறைத்து, அந்த திட்டத்தை ஒழிக்கும் நோக்கத்துடன் சீரழிவுக்கு கொண்டு சென்றது. திடீரென சம்பளம் உயர்வு என அறிவித்திருப்பது, கடைசி நேரத்திலாவது மக்கள் மத்தியில் நம்பிக்கையைப் பெற்று ஓட்டு வாங்க முடியுமா என்கிற முயற்சிதான்.
அதேபோன்றுதான் மார்ச் 8 மகளிர் தினம் கொண்டாடுகிறபோது திடீரென சமையல் எரிவாயு விலையில் நூறு ரூபாய் குறைப்பதாக அறிவிப்பு வெளியிடுகிறார். இது மகளிர் தின அன்பளிப்பு என்றார். 2014 இல் ஆட்சிக்கு வந்தபோது 480 ரூபாயாக இருந்த சமையல் எரிவாயு விலையை ஆயிரம் ரூபாயாக உயர்த்தியது மோடி அரசுதான். எதற்கும் அஞ்சாத நபர் என்று கூறிவந்த மோடி தேர்தல் நேரத்தில் விலை குறைப்பு செய்ததே தோல்வி குறித்த அச்சத்தில்தான். இந்தியா கூட்டணி பலமாக அமைந்ததுதான் இந்த விலைக்குறைப்புக்கு காரணம். மோடியின் ஆட்சியை ஆட்டம் காண வைத்திருக்கிறது இந்தியா கூட்டணி.
ஜே.பி.நட்டாவை கைது செய்யாதது ஏன்?
தேர்தல் குறித்து நடந்துள்ள ஆய்வுகளில் பாஜக 200 இடங்களில் வெற்றி பெறுவதே சிரமம் என தெரிவித்துள்ளனர். முன்னாள் நீதிபதிகள், அறிவுஜீவிகள் ஒன்றாக மோடி அரசுக்கு எதிராக களமிறங்கி இருக்கும் புதிய சூழல் உருவாகி இருக்கிறது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு நடத்தை விதிகளுக்கு புறம்பாக தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்திருக்கிறார்கள். குற்றம்சாட்டப்படும் முறைகேட்டில் கெஜ்ரிவால் ஈடுபட்டார் என்பதற்கு எந்த சான்றும் இல்லை. ஒரே ஒரு சாட்சி சரத் சந்திர ரெட்டி அளித்த வாக்கு மூலம் மட்டும்தான். இந்த நபர் பாஜகவுக்கு தேர்தல் பத்திர நன்கொடையாக ரூ.55 கோடி கொடுத்தது இப்போது அம்பலமாகி இருக்கிறது. ஆதாரப்பூர்வமாக பாஜக முறைகேடு செய்தது தெரிந்தும் அந்த கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா கைது செய்யப்படவில்லை.
எதிர்க்கட்சி தலைவர்களை வேட்டையாடுவது தான் மோடி அரசின் நோக்கம். ஏற்கனவே தெலுங்கானா முதல்வராக இருந்த சந்திரசேகரராவின் மகள் கவிதாவை கைது செய்து சிறைக்குள் வைத்திருக்கிறார்கள். இப்போது கேரள முதல்வரின் மகள் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். தேர்தல் நடக்கும் போது முக்கியமான தலைவர்கள், முதல்வர்கள் வெளியே இருக்கக் கூடாது; எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்கிற நோக்கம்தான் இதில் வெளிப்படுகிறது. அது நிறைவேறாது. மக்கள் விழிப்புடன் இருந்து மோடி அரசின் முயற்சிகளை தடுப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு, வட்டாரக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் மற்றும் முன்னணி ஊழியர்கள் பெரும் திரளாக கலந்துகொண்டனர்.