திருவண்ணாமலை, மார்ச் 6- திருவண்ணாமலை கிரிவலப் பாதையில், (ஈசான்ய லிங்கம் அருகில்,) இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறையின் அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் மற்றும் பொதுப்பணித் துறை மூலமாக ரூ.28 கோடியில் யாத்ரி நிவாஸ் கட்டப்பட்டுள்ளது. 123 அறைகளுடன் 430 நபர்கள் தங்கும் வகையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தின் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் க. சு. கந்தசாமி சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திருவண்ணாமலை தானிப்பாடியார் தர்ம சத்திரம் எனும் அறக்கட்டளைக்கு சொந்தமான 3.35 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு 12.09.2017 அன்று பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டது. “யாத்ரி நிவாஸ்” கட்டடத்தில், காட்டேஜ் பிளாக்கில் தரை தளம், முதல் தளம், இரண்டாம் தளம் என மூன்று தளங்களாக கட்டப் பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு தளத்திற்கும் 8 காட்டேஜ்கள் வீதம் 96 நபர்கள் தங்கும் வகையில் 24 காட்டேஜ்கள் கட்டப்பட்டுள்ளது. மேலும், ஓட்டல் பிளாக்கில் மூன்று தளங்களில் 124 நபர்கள் தங்கும் வகையில் 63 அறைகளும், டார்மிட்டரி பிளாக்கில் மூன்று தளங்களில் 210 நபர்கள் தங்கும் வகையில் 36 அறைகளுடன் கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் மூன்று பிளாக்குகளையும் சேர்த்து 123 அறைகள் 430 நபர்கள் தங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இதில் குளிர்சாதன வசதி கொண்ட மற்றும் குளிர்சாதன வசதியில்லாத அறைகளும் அமைக்கப்படுகிறது. இதனை தவிர தனியாக உணவு விடுதியும், ஓட்டுநர்கள் தங்குவதற்கான பகுதியும் மற்றும் துணிகளை சலவை செய்வதற்கான பகுதியும் கட்டப்பட்டுள்ளது.