tamilnadu

img

நெமிலிச்சேரி கிராம சேவை மையம் மக்கள் பயன்பாட்டிற்கு வருமா?

அம்பத்தூர், ஆக. 28- ஆவடி தொகுதிக்கு உட்பட்ட நெமிலிச்சேரி ஊராட்சியில் 17 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட கிராம சேவை மைய கட்டடம் திறக்கப்படாமல் 2 ஆண்டாக பூட்டியே கிடக்கிறது. ஆவடி சட்டமன்ற தொகுதியில் நெமிலிச்சேரி ஊராட்சி உள்ளது. இதில் நாகாத்தம்மன் நகர், எம்ஜிஆர் நகர், அண்ணா நகர், ஸ்ரீநாத் நகர், மகாதேவன் நகர், டி.ஐ. நகர், ரயில் நகர், பத்மாவதி நகர், ராஜேஷ் நகர், இந்திரா நகர், தேவி நகர், ராஜீவ் நகர், முத்து நகர். முல்லை நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மேற்கண்ட பகுதியை சார்ந்த மக்கள் சாதி, இருப்பிடம், வருவாய், வாரிசு, முதல் பட்டதாரி உள்ளிட்ட சான்றிதழ்கள் பெற ஆவடி அல்லது திருநின்றவூர் பகுதியில் உள்ள இ - சேவை மையத்தில் பதிவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே கிராம சேவை மைய கட்டடத்தை நெமிலிச்சேரி ஊராட்சியில் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் கிராம சேவை மையக் கட்டடம் கட்ட அரசு முடிவு செய்து, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 17 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நெமிலிச்சேரி ரயில் நகர் பகுதியில் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் கிராம சேவை மைய கட்டடத்தை அதிகாரிகள் திறக்கவில்லை. இதனால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சான்றிதழ்கள் மற்றும் அரசு உதவித் திட்டங்களை பெறுவதற்கு 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆவடி மற்றும் திருநின்றவூர் பகுதிக்குத்தான் மீண்டும் சென்று விண்ணப்பங்களை பதிவு செய்யும் சூழ்நிலை உள்ளது. பல லட்ச ரூபாய் செலவில் பூட்டியே கிடப்பதால் அந்த கட்டடம் வீணாகும் அவல நிலையும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நெமிலிச்சேரி ஊராட்சியில் உள்ள கிராம சேவை மைய கட்டடத்தை உடனடியாக திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.