tamilnadu

காற்று-மாசு கண்காணிப்பு மையம் அமைக்கும் பணி தொடங்கப்படுமா?

வேலூர், மே 12-ராணிப்பேட்டை தொழிற்பேட்டையில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ள காற்று தர தொடர் கண்காணிப்பு மையம் அமைக்கும் பணி தொடங்குவது எப்போது? என பொதுமக்கள் கேள்விஎழுப்பியுள்ளனர்.அமெரிக்க, ஐரோப்பிய கண்டத்து நாடுகளுக்கு கணிசமான அளவில் தோல் மற்றும் தோல் பொருள்கள், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், ரசாயன மூலப்பொருட்கள் உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்வதில் வேலூர்மாவட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது.மேலும் தோல் பொருள் ஏற்றுமதியில்இந்திய அளவிலேயே அதிகப்படியான அன்னியச் செலாவணியை ஈட்டித்தரும் பெருமை இந்த மாவட்டத்துக்கு உள்ளது. இந்நிலையில் ராணிப்பேட்டையில் கடந்த 1971-ஆம் ஆண்டு சிப்காட் தொழிற்பேட்டை தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சிட்கோ 1, 2 மற்றும் 3 என சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்பட்டன. இந்தத் தொழிற் பேட்டைகளில் தோல், ரசாயனம், வாகன உதிரி பகங்கள் தயாரிக்கும் ஆலைகள் உள்பட 500-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர்.இந்தத் தொழிற்சாலைகளில் இருந்து 45 ஆண்டுகளுக்கும் மேலாக வெளியேற்றப்பட்ட திட, திரவ, வாயுக் கழிவுகளால் இப்பகுதியில் நீர், நிலம், காற்று மாசடைந்தது. இதனால் உலகளவில் மாசடைந்த தொழில் நகரங்கள் வரிசையில் ராணிப்பேட்டை முன்னிலை பெற்று மக்கள் வாழத் தகுதியற்ற நகரமாக மாறியுள்ளது. இந்நிலையில், காற்று மாசு அளவைக் கண்காணிக்க வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட தமிழகத்தில் மொத்தம் 25 இடங்களில் காற்றுத் தர தொடர் கண்காணிப்பு மையம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.அதன் பேரில் ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்றில்அளவுக்கு அதிகமாக கலந்துள்ள மாசு அளவை 24 மணி நேரமும் கண்காணிக்கும் நோக்கில் ரூ. 50 லட்சம் செலவில் நவீன கருவிகளைக் கொண்டு காற்று தர தொடர் கண்காணிப்பு மையம் அமைக்க தமிழக அரசு கடந்த 2016-இல் ஒப்புதல்வழங்கியது.அதன்படி மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரிய வழிகாட்டுதலின் பேரில் மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சிப்காட் தொழிற்பேட்டையில் அந்த மையத்தை அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கடந்த ஓராண்டுக்கு முன்பு தெரிவித்தனர்.அதன்படி, இந்த மையத்தின் மூலம்ராணிப்பேட்டை, சிப்காட் தொழிற்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றின் மாசு அளவீடுகள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு பதிவு செய்யப்பட உள்ளன. அப்போது தொழிற்சாலைகளில் இருந்து வழக்கத்தைவிட அதிக அளவு மாசு வெளியேற்றப்பட்டாலும், பிளாஸ்டிக் கழிவுகள் தீயிட்டு எரிக்கப்பட்டாலும் உடனடியாக கண்காணிக்கப்பட்டு காற்று மாசு ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உதவிகரமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.எனவே கிடப்பில் போடப்பட்டுள்ள காற்று தர மையம் அமைக்கும் பணியை விரைவில் தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.