சென்னை,பிப்.22- மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று சொல்லிவிட்டு அதைக் கட்டாமல் கிடப்பில் போட்ட ஒன்றிய பாஜக அரசைப் போல் அல்லாமல் 2026 ஜனவரியில் கோவையில் மாபெரும் நூலகம் திறக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதி நிலை அறிக்கை மீது நடைபெற்ற விவாதங்களுக்கு வியாழனன்று (பிப்.22) அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்தார். அவர் பேசி முடித்தவுடன் முதலமைச்சர் பேசினார்.
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதி லளித்திருப்பது உள்ளபடியே பாராட்டுக் குரிய வகையில் அமைந்துள்ளது எனக் குறிப்பிட்டு அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், “கோவையில் நூலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு நன்றி தெரிவித்த பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன், அது எங்கே அமையவிருக்கிறது? எவ்வ ளவு நிதி ஒதுக்கப் போகிறார்கள்? எப்போது ஆரம்பிக்கப் போகிறீர்கள்? எப் போது இந்தப் பணிகள் முடிவடையும்? என்று கேள்விகளைக் கேட்டிருந்தார்.
கோவை நூலக அறிவிப்பு நிச்சயமாக உடனடியாக செயலாக்கத்திற்கு வரும். ஏனென்றால், இந்த ஆட்சி சொன்னதைச் செய்யும், சொன்னதைத் தாண்டியும் செய்யும், சொல்வதைத்தான் செய்யும்.
மதுரையில் எவ்வாறு உலகத்தரம் வாய்ந்த கலைஞர் நூலகம் குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டப்பட்டு திறந்து வைக்கப் பட்டிருக்கிறதோ,சென்னையில் கலை ஞர் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை, மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக் கட்டுக்காக ஏறுதழுவுதல் அரங்கம் அமை யப் பெற்றிருக்கின் றனவோ, இன்னும் சில தினங்களில் கலைஞர் நினைவிடம் அமையவிருக்கிறதோ, அதேபோல் கோவை நூலகமும் சொன்னபடி நிச்சய மாக இந்த ஆட்சியில் நடக்கும். ஆனால், வானதி சீனிவாசனுக்கு நான் ஒன்றை மட்டும் உறுதியாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நிச்சயமாக மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அறி விக்கப்பட்டதைப் போல் இல்லாமல் குறிப் பிட்ட காலத்திற்குள் கட்டி முடிக்கப் படும். அதுமட்டுமல்ல,2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அது திறக்கப்படும் என்பதையும் குறிப்பிட்டுச் சொல்கிறேன். அன்றைய தினம் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு உங்களுக்கு முறையாக அழைப்பு வரும். நீங்களும் வந்து விழாவில் கலந்து கொள்ள வேண்டும்”என்றார் முதல்வர். இவ்வாறு குறிப்பிட்ட போது உறுப்பினர்கள் மேசையை தட்டி ஆரவாரம் செய்தனர்.