கோடை விடுமுறைக்குள்
ஏலகிரி கோடை விழாவை நடத்த பொதுமக்கள் கோரிக்கை
வேலூர், மே 19-கோடை விடுமுறை முடிவதற்குள் ஏலகிரி கோடை விழா நடைபெற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில் ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும், ஏலகிரி மலையில் ஆண்டு தோறும் கோடை விழா நடைபெறுவது வழக்கம். வேலூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரியில் இந்த விழாபெரும்பாலும் கோடை விடுமுறை முடிந்த பிறகு நடைபெறும். ஆனால், கடந்தஆண்டு மே 19, 20 ஆகியதேதிகளில் நடத்தப்பட்டது.இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.தற்போது, மே மாதம் தொடங்கி பாதி நாட்கள் கழிந்துள்ளன. எனினும், மாவட்ட நிர்வாகம் இதுவரைகோடை விழா தொடங்கும் தேதியை அறிவிக்கவில்லை. இரு நாட்கள் நடைபெறும் கோடை விழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் கலந்து கொள்வர். எனவே, இப்பகுதி மக்கள் மட்டுமின்றி அண்டை மாநில மக்களும் ஆவலுடன் காத்திருக்கும் ஏலகிரி கோடை விழா குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிட வேண்டும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர்.மாவட்டத்தில் புகழ் பெற்ற கோடை விழாவிற்கு வருகை தரும் பயணிகள் பேருந்திற்காக காத்திருக்க மலை அடிவாரத்தில் நிழற்கூடம் இல்லை.வெயில் அடித்தாலும், மழைபெய்தாலும் அதன் தாக்கத்துடன் சாலை ஓரத்தில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. மாவட்ட நிர்வாகம்இதற்கென்று தனி கவனம் செலுத்தி தற்காலிக நிழற்கூடமாவது அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.
கழிப்பறை பராமரிப்பு வசதி
சுற்றுலாப் பயணிகளுக்காக தாற்காலிக கழிப்பறைகள் அமைக்கப்படுகின்றன. ஆனால், போதிய பராமரிப்பு இல்லாததால் பயணிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, கழிப்பறைகளை பராமரிக்க கூடுதல் ஆட்களை நியமிக்க வேண்டும் என்பது சுற்றுலாப் பயணிகளின் எதிர்பார்ப்பாகும்.மாவட்டம் முழுவதிலும் இருந்து குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகளே ஏலகிரிக்கு இயக்கப்படுவதால் பயணிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே,பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி இயக்கினால் பலரும் வந்து செல்ல வசதியாக இருக்கும்.கோடை விழா நிகழ்வு குறித்த அறிவிப்பு தாமதமாவது குறித்துஅரசு அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, அவர், ‘தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மாவட்ட ஆட்சியர் தலைமையிலான கூட்டத்தில் தேதி அறிவிக்கப்படலாம். மேலும், விழா மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் கட்டுமானப் பணி நிறைவடையும் சூழலைக் கணக்கிட்டும் தேதி அறிவிக்கப்படலாம்’ என்றார்.
காலமானார்
வேலூர், மே 19-சிஐடியு மாவட்ட துணைத் தலைவரும், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட துணைச் செயலாளர் ஏ.பி.எம். சீனிவாசன் தாயார் முனியம்மாள் அண்மையில் காலமானார்.அன்னாரின் உடலுக்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, காஞ்சிபுரம் மாவட்ட துணை ஆட்சியர் பார்த்தீபன், அரக்கோணம் வட்டாட்சியர், நகராட்சி ஆணையர் ராஜேந்திரன், பொறியாளர் சண்முகம், அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர் பன்னீர் செல்வம், அருள்மூர்த்தி, அரசு மருத்துவமனை மருத்துவர் பார்த்தீபன், வழக்கறிஞர் சங்க மாநில இணைச் செயலாளர் தமிழ்மாறன் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.
வெயில் தாக்கத்தால் 2 மாடுகள் பலி
வேடசந்தூர், மே 19-வேடசந்தூர் அருகே உள்ள ஆத்தூர்பிள்ளையூரில் வெயில் கொடுமையால் 2 பசு மாடுகள் இறந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் கோடை காலமாக இருப்பதால் வெயிலின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக 104 டிகிரி வரை வெயில் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில் வேடசந்தூர் அருகே உள்ள ஆத்தூர்பிள்ளையூரில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு முருகனாந்தம் என்பவருக்கு சொந்தமான ரூ .25 ஆயிரம் மதிப்புள்ள பசு மாடு வெயில் கொடுமையால் இறந்தது. இதனையடுத்து வெள்ளியன்று மாலை இதே ஊரைச் சேர்ந்த ராமராஜ் என்பவருக்கு சொந்தமான ரூ. 55 ஆயிரம் மதிப்புள்ள பசு மாடு இறந்தது.ஆத்தூர்பிள்ளையூரில் அடுத்தடுத்து வெயில் கொடுமையால் பசு மாடுகள் இறந்து வருவதால் கால் நடை வளர்ப்போர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் உடன் தலையிட்டு கால்நடைத்துறை மூலம் அப்பகுதியில் ஆய்வு நடத்தி பசு மாடுகள் வெயில் கொடுமையால் இறக்கிறதா அல்லது நோய் கொடுமையால் இறந்து வருகிறதா என்பதை ஆய்வு நடத்தி பசுமாடுகளின் உயிரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.