தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மதிக்காமல், ஆளுநர் மாளிகையின் உத்தரவின் பேரில் பல்கலைக்கழகங்கள் இயங்குகிறது. இத்தகைய போக்கு மக்களாட்சிக்கு விடப்பட்ட சவால் என பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
பல்கலைக்கழக நிர்வாக நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, பல்கலைக்கழகங்கள் உரிய சட்டங்கள், விதிகளின் படி சுதந்திரமாக தங்கள் பணிகளை மேற்கொள்ளத் தகுந்த வழிகாட்டுதலை, தமிழ்நாடு அரசு உயர்கல்வித் துறை பல்கலைக் கழகங்களுக்கு வழங்கிட வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது.
பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாக்களை மாநில அரசின் கொள்கை முடிவுகளுக்கு எதிராகப் பரப்புரை செய்யும் மேடைகளாகத் தமிழ்நாடு ஆளுநர் மாற்றி வருகிறார்.
விவாதத்திற்கு உரிய ஒரு கருத்தை ஒருவர் முன் வைத்தால் அதை மறுத்துப் பேச மற்றவர்களுக்கு வாய்ப்புத் தரவேண்டும். பட்டமளிப்பு விழாவை அத்தகைய விவாதத்திற்கு உரிய அரங்கமாக மாற்றக் கூடாது.
பல்வேறு சிக்கல்களைக் கடந்து மாணவர்களின் உழைப்பிற்குக் கிடைக்கும் அங்கீகாரம்தான் பட்டமளிப்பு விழா. அத்தகைய பட்டமளிப்பு விழா உரைகள், உற்சாகத்துடன் சமூகத்தை மேம்படுத்த தங்கள் அறிவைப் பயன்படுத்திட மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில் பேசும் போது "சிலந்திவலை போல் சமூகத்தில் விரிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற உங்களுக்குத் தரப்பட்ட உரிமம் தான் இந்தப் பட்டம்" என்று கூறினார். சாதி, சடங்கு உள்ளிட்ட மூடநம்பிக்கைகளில் சமூகம் சிக்கித் தவிக்கிறது. அந்தக் குப்பைகளை அகற்ற தாங்கள் பெற்ற பட்டத்தைப் மாணவர்கள் பயன்படுத்த வேண்டும் என்று அண்ணா அறிவுரை கூறினார்.
பொறுப்பு மிக்க உரைகள் அமைய வேண்டிய பட்டமளிப்பு விழாக்களைத் தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் தனது சர்ச்சைக்குரிய உரைகள் மூலம் களங்கப்படுத்தக்கூடாது.
மாநில அரசின் கொள்கை நிலைப்பாட்டிற்கு நேர் எதிரான கருத்துகளைப் பேசி, மாநில அரசுக்கு எதிரான மனநிலையை மாணவர்களிடம் உருவாக்க முயல்வது நியாயமற்ற, நேர்மையற்ற அணுகுமுறை.
மதுரை காமராசர் பல்கலைக்கழக நிர்வாகம் ஆளுநர் மாளிகை சொல்வதைத் தான் செய்யமுடியும் என்று தெரிவித்ததாக உயர்கல்வித் துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியது அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்துள்ளது.
பல்கலைக்கழகம் தனது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நிரலை தயாரிக்கும் உரிமைகூட இல்லாத நிலை தமிழ்நாட்டில் எற்பட்டுள்ளதா? என்ற கேள்வி எழுகிறது.
ஆளுநர் மாளிகை பல்கலைக்கழகங்களில் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடுவது ஏற்புடையது அன்று.
மதுரை காமராசர் பல்கலைக்கழக இணை வேந்தர் விழாவில் பங்கேற்க வில்லை என்று தெரிவித்த பின்னர், இணை வேந்தரிடம் பல்கலைக்கழக நிர்வாகம் உரிய விளக்கம் அளித்து, விழாவில் அவரைப் பங்கேற்க முயற்சி மேற்கொள்ளாமல், இணை வேந்தர் இல்லாமல் விழாவைத் தொடர்ந்து நடத்துவது தமிழ் நாடு அரசையும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளையும் அவமதிக்கும் செயல்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தமிழ்நாடு அரசால், தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய சட்டத்தின் மூலம் உருவானது. தமிழ்நாடு மக்களின் வரிப்பணத்தில் நிர்வகிக்கப்படுகிறது. அத்தகைய பல்கலைக்கழகம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மதிக்காமல், ஆளுநர் மாளிகையின் உத்தரவின் பேரில் இயங்குகிறது என்றால் இத்தகைய போக்கு மக்களாட்சிக்கு விடப்பட்ட சவால். இதை எளிதாகக் கடந்து செல்ல இயலாது.
பல்கலைக்கழகங்களின் நிர்வாகச் செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு அரசு ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
மக்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள் பல்கலைக்கழகங்களின் ஜனநாயகத்தைக் காக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.