செஞ்சிக்கோட்டையில் யுனெஸ்கோ குழுவினர் இன்று ஆய்வு
செஞ்சி,செப்.26- வரலாற்று சிறப்புமிக்க செஞ்சிக்கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது சம்பந்தமாக ஒன்றிய அரசு யுனெஸ்கோ குழுவினருக்கு பரிந்துரை செய்தது. அதனை ஏற்று யுனெஸ்கோ குழுவினர் செஞ்சிக்கோட்டையை ஆய்வு செய்ய வெள்ளிக்கிழமை (செப்.27) வருகை தர உள்ளனர்.
இதையடுத்து, செஞ்சி கோட்டையில் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சேதமடைந்த சாலைகள் சரி செய்யப்பட்டு புதிய தார் சாலை போடப்பட்டு உள்ளன. மேலும் தற்காலிக கழிவறைகள், குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
செஞ்சிக் கோட்டைக்கு ரோப் கார், படகு சவாரி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து கொடுப்பது சம்பந்தமாக ஏற்கனவே வந்த ஒன்றிய அரசு அதிகாரியிடம் மனு கொடுத்து இருப்பதாகவும் மேலும் தற்போது வரும் குழுவினரிடம் மனு அளிக்க உள்ளதாகவும் செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார், பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான் ஆகியோர் தெரிவித்தனர்.
யுனெஸ்கோ குழுவினர் வருகையையொட்டி நாளை ஒரு நாள் மட்டும் பொதுமக்கள் உட்பட அனைவரும் செஞ்சி கோட்டைக்குள் சென்று பார்வையிட அனுமதி இல்லை என்றும் மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.
எஸ்றா சற்குணம் உடலுக்கு முதலமைச்சர் அஞ்சலி
சென்னை, செப்.26- இந்திய சமூக நீதி இயக்கத்தின் நிறுவனர் பேராயர் எஸ்றா சற்குணம் கடந்த 22 ஆம் தேதி காலமானார்.
சென்னை வானகரத்தில் உள்ள இயேசு அழைக்கிறார் வளாகத்தில் செப்டம்பர் 26 காலை 6 மணி முதல் பொதுமக்கள், கிறிஸ்தவ அமைப்புகளை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜி.முத்துசெல்வன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
காவல்துறை மரியாதை
பேராயர் எஸ்றா சற்குணம் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். இதைத் தொடர்ந்து, சென்னை கீழ்பாக்கம் தோட்டத்தில் உள்ள கல்லறையில் எஸ்றா சற்குணம் உடல் காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
1,400 தற்காலிக பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊதியம்
சென்னை, செப்.26- பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் 1,400 தற்காலிக பட்டதாரி ஆசிரியர்களுக்கு நவம்பர் மாதம் வரை ஊதியம் வழங்குவதற்காக கொடுப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறைச் செயலர் சோ.மதுமதி அனைத்து மாவட்ட கருவூல கணக்கு அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 200 நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது. அந்த பள்ளிகளுக்கு தலா 6 பட்டதாரி ஆசிரியர் வீதம் 1,200, தலா ஒரு உடற்கல்வி ஆசிரியர் வீதம் 200 என மொத்தம் 1,400 பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்டது. இந்த பணியிடங்களுக்கான பணிக் காலம் கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவு பெற்றது.
இதற்கிடையே, ஆசிரியர் பணியிடங்களுக்கு தொடர் நீட்டிப்பு வழங்குவதற்கான கருத்துரு அரசின் பரிசீலனையில் உள்ளது. இதையடுத்து, பள்ளிக்கல்வித்துறை இயக்குநரின் பரிந்துரையை ஏற்று இந்த 1,400 தற்காலிக பட்டதாரி மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பணி இடங்களுக்கு வரும் நவம்பர் மாதம் வரை ஊதியம் வழங்குவதற்காக கொடுப்பாணை அளிக்கப்படுகிறது. எனவே, துறை சார்ந்த அலுவலர்கள் சம்பளப் பட்டியல் தாக்கல் செய்யும் போது அதை ஏற்று ஊதியம் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.